ஞானகுரு பதில்கள்
கேள்வி : இன்றைய சூழலில் கூட்டுக்குடும்பம் சாத்தியமா?
- எஸ்.சந்திரா, மேட்டூர்
ஞானகுரு :
ஒரு வீட்டில் இருக்கும் கணவன், மனைவி, பிள்ளைகள் பேசிக்கொள்வதும் சுருங்கிவிட்டது. ஏனென்றால் உலகம் இப்போது உள்ளங்கை செல்போனுக்குள் வந்துவிட்டது. யாருடைய ஆலோசனையும், ஆதரவும் மனிதர்களுக்குத் தேவை இல்லை எனும் நிலை வந்துவிட்டது.
அதனால் எல்லோரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழும் கூட்டுக்குடும்பம் சாத்தியம் இல்லை, தேவையும் இல்லை. ஒரே வீட்டில் பேச நேரமில்லாமல் இணைந்து இருப்பதைவிட, பிரிந்து வாழ்வதே நல்லது. அதேநேரம், உறவினர்கள், முதியவர்களுக்கு தினமும் செல்போனில் பேசுவதற்காவது சில நிமிடங்கள் ஒதுக்குங்கள். அதுவே, இன்றைய கூட்டுக் குடித்தனம்.
கேள்வி : அன்பு, பணம், புகழ் ஆகியவற்றில் எது மனித வாழ்வை இழுத்துச்செல்கிறது? எல்லோருக்கும் புகழ் தேவையா?
- பி.கோகிலா சுந்தரம், சத்தியமங்கலம்.
ஞானகுரு :
அன்புதான் குடும்ப வாழ்வை உருவாக்குகிறது. பணம் அதனை இழுத்துச்செல்கிறது. வித்தியாசமான பாதையில் செல்பவருக்கு புகழ் கிடைக்கிறது. இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு மட்டும் ஆசைப்பட்டால், மற்றவை கிட்டாது. அதனால் அத்தனைக்கும் ஆசைப்படுங்கள். வாழ்க்கை அழகாக மாறிவிடும்.
புகழ் என்பது ஒரு மாயை. இன்று உச்சத்தில் இருந்தவர் நாளை காணாமல் போய்விடலாம். எனவே, புகழுக்காக இன்றைய வாழ்க்கையை இழக்க வேண்டாம்.
