பணமே மந்திரம்
ஆபத்து நேரத்தில் கை கொடுத்து உதவுபவரே நல்ல நண்பர் என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். ஆனால், நிதி மேலாண்மை என்ற கோணத்தில் நண்பருக்குக் கடன் கொடுப்பது நிறைய சிக்கலைக் கொண்டுவரும். ஆகவே, கடன் கேட்பவரை சமாளிக்கும் வழிகளை அறிந்துகொள்ளுங்கள்.
- சொன்ன வார்த்தையை நூறு சதவீதம் காப்பாற்றுபவர் என்பது உறுதியாகத் தெரிந்தால் மட்டும் கடன் கொடுங்கள். சின்ன சந்தேகம் இருந்தால் கூட தர வேண்டாம்.
- உறவு, நட்புக்கு கடன் கொடுப்பதில்லை என்ற பாலிசி வைத்திருக்கிறேன் என்று தெளிவாக சொல்லிவிடுங்கள், அதை தொடர்ந்து கடைப்பிடியுங்கள்.
- மருத்துவமனை, படிப்புக்குக் கடன் என்று கேட்டால் உங்களால் முடிந்த சிறு தொகை கொடுங்கள். இது கடன் அல்ல உதவி என்று தெரிவித்துவிடுங்கள். அந்த பணம் திரும்பிவந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி என்ற மனநிலையில் கொடுங்கள்.
- கடன் கொடுக்காவிட்டால் நட்பு கெட்டுப் போகும் என்றால் அதை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராகுங்கள்.
- கடன் கொடுக்கவில்லை என்பதற்காக எந்த குற்றவுணர்ச்சிக்கும் ஆளாகத் தேவையில்லை. ஏனென்றால் உங்கள் பணத்தைக் கேட்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை.
நல்ல நண்பராக இருந்தால் உங்களைப் புரிந்துகொள்வார். பணத்துக்காக பழகுபவர் என்றால் விலகிவிடுவார். எப்படியென்றாலும் இது உங்களுக்கு லாபகரமாகவே இருக்கும்.
