ஞானகுரு பதில்கள்
ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.
கேள்வி : பிள்ளைகளின் காதலுக்கு பெற்றோர்கள் தற்போது பச்சைக்கொடி காட்டுவது பெருகிவருகிறது, இது சமுதாயத்துக்கு நல்லதா..?
- எம்.ரங்கநாதன், சாயல்குடி
ஞானகுரு :
தலைக்கு மேல் வெள்ளம் போவதைக் கண்டு தடுக்கமுடியாமல் சரண்டர் அடைபவர்கள் அதிகம். தன் வாழ்க்கையைத் தானே தீர்மானிக்கும் தகுதி பிள்ளைக்கு வந்துவிட்டது என்று தட்டிக்கொடுத்து ஆதரிப்பவரும் உண்டு.
காதலை தடுக்க நினைக்கும்போதுதான், அது அதிக வலுப்படும். புயலாக மாறி குடும்பத்தை தூக்கிப்போடும் நிலை உருவாகிவிடும். எனவே, காதலை ஏற்க கற்றுக்கொள்வதே நல்ல பெற்றோருக்கு அழகு. எனவே காதல் வாழ்க்கை ஜெயித்தால் சந்தோஷம், தோற்றால் அனுபவம்.
………………………..
கேள்வி : என் வாழ்வில் கஷ்டம் மேல் கஷ்டமாக வருகிறது. என் முன்னோர்கள் செய்த பாவமாக இருக்குமோ?
- டி.வனிதா, சூலக்கரை.
ஞானகுரு :
தீதும் நன்றும் பிறர் தர வாரா. உங்கள் வெற்றிக்கும் தோல்விக்கும் பிறரை காரணம் காட்டுவதை நிறுத்துங்கள். உங்களுக்கு எப்படிப்பட்ட கஷ்டங்கள் வருகின்றன என்று ஒரு டைரியில் எழுதி வைத்துப் பாருங்கள். அந்த கஷ்டத்துக்கு யார் காரணம் என்று சிந்தியுங்கள்.
ஏனென்றால், உங்கள் கஷ்டத்துக்கு உங்களைத்தவிர வேறு எவரும் காரணமாக இருக்க முடியாது. முன்னோர்கள் பாவம், முற்பிறவி கர்மா என்பதெல்லாம் கற்பனை என்று தூக்கி எறியுங்கள். கஷ்டத்தில் இருந்து ஜெயிக்க முடியும் என்று நம்புங்கள், நிச்சயம் நல்லது நடக்கும்.
