என்ன செய்தார் சைதை துரைசாமி – 477
மேயர் சைதை துரைசாமிக்கு முந்தைய காலகட்டங்களில் அதாவது 1996 – 2001, 2006 – 211 காலகட்டத்தில் எப்படியெல்லாம் நிதி இழப்புகள் ஏற்பட்டன என்பது குறித்து தணிக்கைத் துறை அளித்த தகவல்களில் முக்கியமான சில மட்டும் இன்றும் தொடர்கிறது.
- பேருந்து சாலைகளில் சாலைகள் புதுப்பிக்கும் புதிய பணி, திட்ட மதிப்பீட்டின்படி முழுமையாக முடியவில்லை என்றாலும், வேலை முடிவு பெற்றதாக பொய்யாக முடிவறிக்கை சான்று வழங்கப்பட்டுள்ளது.
- புதுப்பிக்கப்பட்ட தார் சாலையை நேரில் பார்வையிடாமல் தொகை வழங்கப்பட்டுள்ளது. தரம் குறைந்த சாலை மற்றும் முடிவடையாத பணிகளால் மாநகராட்சிக்கு பெருத்த நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
- சாலைகளை பேவர் இயந்திரம் மூலம் தாரிடும் பணி மேற்கொள்ளப்பட்டது. பேவர் இயந்திரத்தின் அளவு 3.5 மீட்டர் என்பதால், அதைவிட அகலமான தெருக்களில் மட்டுமே பேவர் இயந்திரம் பயன்படுத்த முடியும் என்பது குழந்தைக்குக்கூட தெரியும். ஆனால் 3.5 மீட்டருக்கு குறைவான சாலைகளிலும் பேவர் இயந்திரம் மூலம் தாரிடும் பணி நடைபெற்றதாக ஒப்பந்ததாரருக்கு தொகை வழங்கப்பட்டுள்ளது. இது விஞ்ஞான ரீதியில் எப்படி சாத்தியம் என்பதை திமுக-வினர்தான் விளக்க வேண்டும்.
- கோட்டம்-132, தென்மேற்கு பகுதி கங்கையம்மன் கோயில் தெருவில் நடக்காத சாலைப் பணியை செய்ததாகக் காட்டி நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டது. இது போன்று பல்வேறு இடங்களில் சாலை போடப்படாமல், ஒட்டுப்பணி செய்யப்படாமல் செய்ததாக கணக்கு காட்டப்பட்டு நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டது.
- வருவாய்த் துறையில் மட்டும் 92 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. உரிமையாளர் குடியிருக்கும் வீட்டுக்கு சொத்துவரியில் 25 சதவீதம் வரிச்சலுகை உண்டு. இந்த சலுகையைப் பயன்படுத்தி ஏராளமான வீடுகளை, உரிமையாளர் குடியிருப்பு என வகைப்படுத்தி மாநகராட்சிக்கு வரவேண்டிய வருவாய் இழப்பு செய்யப்பட்டுள்ளது.
- பொறியியல் துறை மற்றும் வருவாய்த் துறை விதிகளுக்குப் புறம்பாக கட்டப்பட்ட கட்டிடத்தை முறைப்படுத்த ஒரு சதுர அடிக்கு ரூ.0.50 பைசா வீதம் ஒவ்வொரு அரையாண்டிற்கும் வசூலிக்க வேண்டும். ஆனால் பணம் வசூலிக்கப்படாமல் கட்டிட உரிமம் வழங்கப்பட்டதால் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏராளமான வீடுகளில் குறைவான தொகை வசூல் செய்யப்பட்டதால், நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
- ஒவ்வொரு ஆண்டும் தொழில் உரிமம் புதுப்பிக்கத் தவறியவர்கள் 100 விழுக்காடு அபராதக் கட்டணத்துடன் மட்டுமே புதுப்பிக்க முடியும். ஆனால் புதுப்பிக்கப்படாத உரிமக் கட்டணங்களை வசூலிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டிடங்கள் மற்றும் இடங்களில் வாடகை, குத்தகைத் தொகை வசூல் செய்யப்படாமல் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
- சென்னை மாநகராட்சியில் 246 மறுக்கப்பட்ட காசோலைக்கான தொகை மற்றும் தண்டக் கட்டணம் வசூலிக்கப்படாமல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
- நிலம் மற்றும் உடைமைத்துறையில் 265 கோடி ரூபாய் அளவுக்கு மாநகராட்சி நிலங்களை, பிற பயன்களுக்காக ஏனைய துறைகள், வாரியங்கள், தனியார் நிறுவனங்களுக்கு மாற்றம் செய்தது மற்றும் சந்தை விலை கிரையங்களை வசூலிக்கப்படாத குறைகள்.
- சுகாதாரத் துறையின் பகுப்பாய்வு கூடங்களின் பழுதுபார்ப்பு பணிகளில் கூடுதலாக செலவு செய்தும், பயன்பாட்டிற்கு மேல் மருந்துகள் கொள்முதல் செய்தும் இழப்பு ஏற்பட்டுள்ளது
- கட்டிடப் பணிகளில் மதிப்பீடு செய்யப்பட்ட கம்பிகளின் அளவு சிமெண்ட் அளவுக்கு மேல் கூடுதலாக செலவு செய்ததால், மாநகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டது.
- பணித்துறையில் இரும்புக் கம்பிகள் பயன்பாடின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ளதால் இழப்பு ஏற்பட்டது.
இவை தவிரவும் குடும்ப நலத்துறை, மின் துறை போன்ற அனைத்து துறையிலும் தவறான நிர்வாகம் காரணமாக கடுமையான இழப்புகள் ஏற்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி, சமுதாய நலக் கூடங்கள் நான்கில் மூன்று செயல்படாமல் கிடந்தது மற்றும் வாடகை வசூலிக்கப்படாமை காரணமாகவும் இழப்பீடு ஏற்பட்டது.
- நாளை பார்க்கலாம்.
