ஞானகுரு பதில்கள்
கேள்வி : என்னுடைய மகளை இந்த வருடம் பள்ளியில் சேர்க்க இருக்கிறோம். பெண் பிள்ளைகள் மட்டும் படிக்கும் பள்ளியில் சேர்ப்பதா அல்லது ஆண்களும் சேர்ந்து படிக்கும் பள்ளியில் சேர்க்கவா?
எஸ்.நாகராஜ், மேலத்தெரு.
ஞானகுரு :
ஆண் பையனுக்கும் பெண் பிள்ளைக்கும் உடல் வித்தியாசம், உள்ளத்தில் வித்தியாசம் உள்ளது என்பதை இரு பாலரும் புரிந்துகொள்ள வேண்டும். ஆண் பையனகளும், பெண் பிள்ளைகளும் சகஜமாகப் பேசிப் பழகுவதற்கு அனுமதிக்கும் பள்ளியில் பிள்ளையைச் சேர்த்துவிடுங்கள். அப்போதுதான் ஆணைக் கண்டு அதிசயப்பட மாட்டாள், அச்சமும் பட மாட்டாள்.
கேள்வி : எந்த வயதுக்குப் பிறகு மாமிச உணவு எடுத்துக்கொள்வதை நிறுத்த வேண்டும்?
ஏ.கந்தசாமி, பாலவனத்தம்.
ஞானகுரு :
புலியும் சிங்கமும் கடைசி வரையிலும் மாமிசமே சாப்பிடுகின்றன. மனிதனுக்கும் அந்த குணம் உண்டு. சுவைக்கு வயதாவதே இல்லை. அதே நேரம் பற்கள் முளைக்கும் வரையிலும், பற்கள் முழுமையாக விழுந்த பிறகும் திரவ உணவு அதிகமாகவும், திட உணவு மிதமாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தந்த பருவத்தில் கிடைக்கும் காய், கனிகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். அசைவமும் சைவமும் அவரவர் விருப்பம். ஒன்றையொன்று கொன்று தின்று வாழும் வகையில்தான் உயிரினங்கள் படைக்கப்பட்டுள்ளன. எனவே, உணவுக்கும் இறைவனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
