ஞானம் அடைந்த ஒவ்வொரு நபரும் ஞானகுரு.
புத்தருக்கு முன்னரும் பின்னரும் ஆயிரக்கணக்கான
ஞான குருக்கள் தோன்றியிருக்கிறார்கள். அத்தனை பேர் போதனைகளிலிருந்தும் மக்களுக்குத்
தேவையான கருத்துக்களை சொல்பவர் ஞானகுரு.
ஞானம் என்றால் என்னவென்று அறிந்துகொண்டால்,
ஞானகுருவை அறிவது இன்னும் எளிது. புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானம் பிறந்தது என்று
சொல்கிறார்கள்.
அப்படியென்றால் அதுவரை புத்தர் எப்படியிருந்தார்..?
நிறைய குழப்பத்துடன் இருந்தார். நிறைய
செல்வம் இருந்தாலும், மிகப்பெரிய அதிகாரம் இருந்தாலும் அவற்றால் மனிதர்களின் துன்பத்தைத்
துடைக்க முடியவில்லை என்பதை அறிந்திருந்தார். இவற்றைத் தாண்டி துன்பத்தை வெல்லும் சரியான
வழியை அறிந்துகொள்ளும் தேடலுடன் இருந்தார். அதற்காகவே அரண்மனையை விட்டு வெளியேறி தேடிக்கொண்டே
இருந்தார். அவருக்கு போதி மரத்தடியில் ஒரு தெளிவு கிடைத்தது.
அந்த தெளிவு தான் ஞானம். மனித வாழ்வு
குறித்து தெளிவான அறிவு என்று எளிமையாகச் சொல்லலாம். ஏனென்றால்,ட்
அறிவு என்பது வேறு, தெளிவு என்பது வேறு. அனைத்து மனிதர்களுக்கும் அறிவு உண்டு. ஆனால்,
அனைவரும் தெளிவாக இருப்பதில்லை.
அறிவு என்பது வெளியில் இருந்து கிடைக்கிறது.
பெற்றோர், ஆசிரியர், புத்தகங்கள், தொலைக்காட்சிகள் மூலம் கிடைப்பது அறிவு. ஆழ் மனதில்
இருந்து வெளிப்படுவது தெளிவு. அறிவை ஒருவருக்கு யாரேனும் கற்பிக்க முடியும், ஆனால்,
தெளிவை கற்பிக்க முடியாது. ஒவ்வொரு நபரும் தனக்குள் தானே தேடியே தெளிவை கண்டடைய முடியும்.
மனித உடலும் மனதின் ஆற்றலும் எந்த அளவுக்குச் செயல்படும்
என்பதை புரிந்துகொள்ளும் தெளிவு ஞானம். இந்த நிலையை அடைவதற்கு அறிவை மட்டுமே பயன்படுத்துபவர்களால்
ஒருபோதும் விடையை கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால், ஒருவருடைய சொகுசு மற்றும் சந்தோஷமான
வாழ்வுக்கு மட்டுமே அறிவு வழி காட்டும்.
அறிவு காட்டும் வழியில் மனிதருக்கு எல்லாம் கிடைத்தாலும்
நிம்மதியும் மகிழ்ச்சியும் இருக்காது. அதனாலே கோடீஸ்வரர்களும்,
புகழ்பெற்ற மனிதர்களும் இன்னும் அதிகம் கஷ்டப்படுகிறார்கள். தெளிவு பெற்றவர்கள் எதுவுமே
இல்லாமலும் நிம்மதியாக இருக்கிறார்கள்.
மக்களை பயமுறுத்துவதற்காக ஆத்மா, தலையெழுத்து,
பிறவிப்பயன், முன்வினை, சொர்க்கம், நரகம் போன்ற ஏராளமான தடைகள் எழுப்பப்படுகின்றன.
தெளிவு அடைந்தவர்களுக்கு மட்டுமே இவை எதுவும் தடை அல்ல என்பது புரியும்.
தெளிவு எனப்படும் ஞானம் அடைந்துவிட்டால்
என்ன ஆகும்? எதுவும் ஆகாது. இன்பம், துன்பம் போன்ற சாதாரண விஷயங்களில் இருந்து விடுபட
முடியும். இந்த உலகத்து நிகழ்வுகளை மூன்றாவது மனிதர் போன்று வேடிக்கை பார்க்க முடியும்.
இந்த பிரபஞ்சத்தில் மனிதன் ஒரு தூசு என்பதை புரிந்துகொண்டு அடக்கமாக இருக்க முடியும்.
அதுசரி, ஞானம் அடைந்துவிட்டால் கடவுளை
காண முடியுமா?
முதலில் ஞானம் அடைந்து பாருங்கள்… கடவுளாகவே
மாறிவிடலாம்.