அறுசுவை தரும் நோய்கள்
ஆறு சுவைகளையும் அளவோடு எடுத்துக்கொண்டால் அது மனித உடலுக்கு பெரும் நன்மை செய்கிறது. ஏதேனும் ஒரு சுவையை மட்டும் அதிகமாக அல்லது குறைவாக எடுத்துக்கொள்பவர்கள் எளிதில் நோய் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். சுவையினால் உருவாகும் நோய்களை அறிந்துகொள்ளுங்கள்.
1. இனிப்புச் சுவை :
இதன் தாது – தசை, நாடி- வலம்-சிலேட்டுமம். இனிப்புச்சுவை உடலில் அதிகமானால் ஸ்தூலம், கட்டிகள், இராசகட்டி, நீரிழிவு முதலிய நோய்கள் வருகின்றன. இந்த சுவை குறைவாக எடுத்துக்கொண்டால் நீர்ச்சுருக்கு, உடல் மெலிவு உருவாகும்.
2. துவர்ப்புச் சுவை :
இதன் தாது – இரத்தம், நாடி- வலம்-வாதம். துவர்ப்புச் சுவை அதிகம் எடுத்துக்கொள்பவர்களுக்கு கால் குடைச்சல், தூக்கமின்மை, திமிர் முதலியன தோன்றும். துவப்புச் சுவை குறைந்தால் உடல் வெளுத்தல், சோர்வு, காமாலை, கால் வீக்கம் முதலியன தோன்றும்.

3. உவர்ப்புச் சுவை :
இதன் தாது – எலும்பு, நாடி – வலம்-பித்தம். உப்பு அதிகமானால் வாந்தி, பேதி, சுரம், அதிக மூத்திரம் முதலியன வரும். உப்பு குறைந்தால் பசியின்மை, புளியேப்பம், நெஞ்செரிவு, நடுமார்பு நோய், வயிற்று நோய் முதலியன வருகின்றன.
4. புளிப்புச் சுவை :
இதன் தாது – கொழுப்பு, நாடி – இடம் – வாதம். புளிப்புச்சுவை கூடினால் மலச்சிக்கல், சோம்பல், அதிகத் தூக்கம், குத்தல் நோய், சந்துவாதம்,
பாரிச வாயு முதலியன ல்வரும். புளிப்புச் சுவை குறைந்தால் வாந்தி, தூக்கம் குறைதல், உடல் அமைதி கொள்ளாமை, சோர்வு, வயிறு கொட்டல்,
கிராணி, பேதி முதலியன வரும்.
5. கசப்புச் சுவை :
இதன் தாது – நரம்பு, நாடி – இடம்-பித்தம். கசப்புச்சுவை அதிகமானால்
தூக்கமின்மை, அரிப்பு, சொறி, சிரங்கு, குஷ்டம் முதலியன தோன்றும்.
கசப்புச் சுவை குறைந்தால் அஜீரணம், சோம்பல், பலக்குறைவு, அபானன் மிகல் (வாயு), தலை நோய், உடல் நோய், சுரம் முதலியன தோன்றும்..
6. காரச் சுவை :
இதன் தாது – உமிழ்நீர், நாடி – இடம் – சிலேட்டுமம். காரச்சுவை அதிகமானால்
நீர்ச் சுருக்கு, ஆசன வாய் எரிவு, மலங் கொட்டல், சீதபேதி முதலியன உருவாகும். காரச்சுவை குறைந்தால் நா வறட்சி, மலச் சிக்கல், அஜீரணம், ருசியின்மை அல்லது அருசி, மந்த பேதி முதலியன வரும்.
- ச.கந்தசாமி முதலியார் எழுதிய ‘உணவு மருத்துவம்’ நூலில் இருந்து…