• Home
  • யாக்கை
  • பால் என்பது அலர்ஜியா அல்லது அமிர்தமா..?

பால் என்பது அலர்ஜியா அல்லது அமிர்தமா..?

Image

ஆதி காலத்திலிருந்தே மனிதர்கள் கால்நடைகளின் பாலை பருகிவருகிறார்கள்.
பாலுக்குத் தேவை அதிகரித்த பிறகே பால் பண்ணைகளில் மாடுகள் வளர்க்கப்பட்டு உற்பத்தியும்
பெருகியது. இன்று மக்களின் முக்கியமான உணவு ஆதாரங்களில் ஒன்றாக பால் மாறியிருக்கிறது.
மாட்டுப் பால் போலவே ஆட்டுப் பால், ஒட்டகப்பால், கழுதைப் பால் போன்றவையும் உணவாக பயன்படுகின்றன.

குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் பால் அமிர்தமாக கருதப்படுகிறது.
ஏனென்றால் மனிதர்கள் உடலுக்கு நன்மை தரக்கூடிய வைட்டமின்கள் ஏ, பி3 (நியாசின்), பி5
(பான்டாதெனிக் அமிலம்), பி6 (பைரிடாக்ஸின்), பி12 (சையனோ கோபாலமைன்), டி, சொலைன் போன்றவை
பாலில் நிரம்பியுள்ளன. மேலும், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், துத்தநாகம்,
செம்புச்சத்து, மாங்கனீசு, செலீனியம், சோடியம் போன்ற தாது உப்புக்களும் காணப்படுகின்றன.
பாலில் நீர்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து, லாக்டின், லாக்டோஸ்
என்ற இயற்கை சர்க்ககரைகள், அமினோ அமிலங்கள் ஆகியவை உள்ளன.

பாலானது கால்சியத்துக்கு மூலமாக விளங்குகிறது. புற்றுநோய், எலும்பு
முறிவு, வயிற்றுப்போக்கு, தலைவலி ஆகியவற்றிலிருந்து கால்சியம் உடலை பாதுகாக்கிறது.
எலும்புகளின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் குறைந்த விலையில் எளிதில் கிடைக்கக்
கூடிய கால்சியம் என்றால் பால் மட்டுமே. எலும்புகளை பலப்படுத்துவதோடு இதய நோய்கள், பக்கவாதம்
வராமல் தடுக்கவும் கால்சியம் உதவுகிறது. மேலும், தேவையற்ற கொழுப்பினைக் குறைத்து உடல்
பருமனைத் தடுக்கிறது எனவே கால்சியம் நிரம்பியுள்ள பாலினை அருந்துவதால் இதத்தைப் பாதுகாக்கலாம்.

பாலில் உள்ள மெக்னீசியம், பொட்டாசியம் போன்றவை ரத்த அழுத்தத்தைச்
சீராக்கி இதயத்தை சீராகச் செயல்படச் செய்கிறது. பாலில் காணப்படும் பெப்டைடுகள் ரத்த
அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் என்சைம்களைத் தடைசெய்வதால் பெருந்தமனித் தடிப்பு,
இதயநோய்கள், பக்கவாத நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.  

பாலில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் பற்களில் உள்ள எனாமலை
பாதுகாத்து பற்கூச்சத்திலிருந்து விடுதலை அளிக்கிறது. பற்சிதைவு, பற்சொத்தையிலிருந்தும்
பாதுகாக்கிறது.  சருமத்திற்கு பொலிவூட்டவும்,
வழவழப்பான சருமத்தினைப் பெறவும் பால் உதவுகிறது. பாலில் உள்ள லாக்டிக் அமிலமானது சருமத்தில்
உள்ள இறந்த செல்களை நீக்கி சருமத்திற்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது. பாலில் உள்ள வைட்டமின்
ஏ சருமச் சுருக்கம், கரும்புள்ளிகள், காயங்கள் ஏற்படாமல் சருமத்தைப் பாதுகாக்கிறது.
கேச உதிர்தலைத் தடுத்து கேசத்தை அடர்த்தியாக்கவும், பொலிவாக்கவும் செய்கிறது. இதற்கு
பாலில் உள்ள விட்டமின் ஏ மற்றும் பி6(பைரிடாக்ஸின்), பொட்டாசியம் ஆகியவை காரணமாகும்.

பாலில் உள்ள வைட்ட்மின்கள் ஏ, பி போன்றவை கண்பார்வை மேம்பாடு,
ரத்த சிவப்பணுக்கள் அதிகரிப்பில் முக்கியப் பங்காற்றுகின்றன. பாலில் உள்ள கார்போஹைட்ரேட்
உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது. இதில் பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ்,
புரதம் போன்றவை முறையே நரம்புகளின் செயல்பாடு, தசைகளின் செயல்பாடு, ஆற்றலை வெளியிட
உதவுகிறது.

அதேநேரம் எல்லோருக்கும் பால் அமிர்தமாக இருப்பதில்லை. சிலருக்கு
பால் அருந்தும்போது லாக்டோஸ் அழற்சி, முகப்பரு, ஒவ்வாமை, எடை அதிகரிப்பு, வயிற்றுவலி,
குமட்டல், வாயு, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு அதீத
குளிர்ச்சியை சிலருக்கு கொழுப்பாகப் படிந்து உடல் பருமனுக்கு காரணமாகிறது. குழந்தை
அடிக்கடி சளி தொல்லையால் அவதிப்படுகிறது என்றால் பால் அலர்ஜியை பரிசோதிக்க வேண்டும்.

அதிக பால் உற்பத்திக்காக மாடுகளுக்கு அதீத ஹார்மோன் கொடுப்பதால்
பாலில் ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு மனிதர்களுக்கு அலர்ஜியாவதாக சொல்லப்படுவது, இதுவரை
ஆய்வுகள் மூலம் உறுதிபடுத்தப்படவில்லை. அதனால் இன்று வரை பால் மற்றும் பால் சார்ந்த
உணவுகள் அத்தனை நாடுகளிலும் பயன்பாட்டில் இருக்கின்றன. அதேநேரம், அதிகமாக பால் குடிப்பவர்களுக்கு
ஜீரணக் கோளாறு போன்ற சில உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே, பால்
அமிர்தம் என்றாலும் குறைவாக எடுத்துக்கொள்வதே போதுமானது.

பால் மருந்து

·       சூடான பாலில்
தேன் கலந்து குடித்தால் சளி, இருமல் போன்ற சுவாசத் தொந்தரவுகளிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
பாலுடன் தேன் சேர்க்கும்போது உருவாகும் ஆன்ட்டி பாக்டீரியா காரணமாக சளி தொந்தரவு நீங்குகிறது.

·       பொதுவாக
பாலை கொதிக்கவைத்து பருகுவதே நல்லது என்றாலும் வயிற்றுப் புண் அல்லது அஸிடிட்டியால்
பாதிக்கப்பட்டவர்கள் குளிர்ந்த பாலில் ஒரு ஸ்பூன் இஷப்கோல் எனப்படும் சைலியம் (நாட்டு
மருந்துக் கடைகளில் கிடைக்கும்) கலந்து குடித்தால் அஜீரக் கோளாறு, வாயு கோளாறு நீங்கும்.
 

·       சூடான பாலில்
மஞ்சள் கலந்து குடிப்பது மாதவிடாய் வயிற்று வலியால் அவஸ்தைப்படும் பெண்களுக்கு நிவாரணமாக
இருக்கும். பாலில் பொட்டாசியம் இருப்பதால் வயிற்று வலி தணிகிறது. அதோடு மஞ்சள் கிருமிகளை
அகற்றுகிறது.

Leave a Comment