• Home
  • பணம்
  • பணத்துக்காக, ஜாதி துவேஷத்திற்காக மதம் மாறலாமா..?

பணத்துக்காக, ஜாதி துவேஷத்திற்காக மதம் மாறலாமா..?

Image

அண்டை வீட்டுக்காரன் நல்லவராக அமைவதும்
ஒரு யோகம் என்பார்கள். எப்படிப்பட்ட நபர் அண்டை வீட்டுக்கு வந்தாலும், அவர்களுடன் இணைந்து
ஒற்றுமையாக வாழ முடியும் என்ற  நம்பிக்கை இல்லாதவர்கள்தான்
யோகத்துக்கு ஆசைப்படுகிறார்கள். அண்டை வீட்டுக்காரரரை வெல்வதற்காக பலர் பாதை மாறுகிறார்கள்,
பலர் தங்கள் வாழ்க்கையை தொலைத்துவிடுகிறார்கள்.  
விட்டேத்தியாக மரத்தடியில்  படுத்துக்கிடந்த ஞானகுருவின் அருகே ஒரு மனிதன் அமர்ந்து நிதானமாக பேச்சு கொடுத்தான்.

‘‘சாமி, 50 வயசாச்சு. நான் குல தெய்வத்தில் இருந்து எல்லா சாமிகளையும்
தவறாம கும்புடுறவன்தான். ஆனா, இன்னமும் மாசக் கடைசியிலே கடன் வாங்குற நாறப் பொழப்புத்தான் வாழுறேன். எங்க வீட்டுக்குப் பக்கத்துல
புதுசா வந்திருக்கிற ஒருத்தர், அவரோட மதத்துக்கு மாறிட்டா, நிச்சயம் நல்லது நடக்கும்னு சொல்றாரு… செல்வம்
வரும்னு சொல்றார்.  எனக்கும் மனசு தடுமாறுது சாமி’’ என்று கேட்டார்.

அவனை ஆழமாக பார்த்தார் ஞானகுரு.

‘’நீ இதுவரை உன் பெற்றோர் எந்த மதமோ, அந்த மதத்தை சேர்ந்தவனாக வளர்ந்திருக்கிறாய்.  புதிய மதத்தில் சேர நினைப்பது நல்ல விஷயம். ஆனால், எதற்காக
மாறுகிறாய் என்பதுதான் பல கேள்விகளை எழுப்புகிறது.

யாரெல்லாம் மதம் மாறுகிறார்கள் என்று பார்த்திருக்கிறாயா..?
பணத்துக்கு சிரமப்படுபவர்கள், ஆரோக்கியம் இழந்தவர்கள்,
 ஜாதியினால் அவமானம் அடைபவர்கள் மட்டும்தான்
இதுவரை மதம் மாறுகிறார்கள். எந்த பணக்காரனும், உயர் ஜாதியினரும்
ஏன் மதம் மாறுவதில்லை என்று யோசித்திருக்கிறாயா..?

 நீ மாறப்போகும் மதத்தில் ஏழைகள் என்று யாருமே இல்லையா..? அந்த
மதத்தில் எல்லோரும் ஆரோக்கியமாக இருக்கிறார்களா..?  அந்த கடவுள் எல்லோரையும்  சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் வைத்திருக்கிறார் என்பதை
உறுதியாக நம்புகிறாயா..? நீ மதம் மாறுவதால் உன்னுடைய அத்தனை நிலைமையும் மாறிவிடும் என்று உறுதியாக நம்புகிறாயா?

உன்னை மீட்க வந்த மீட்பரா
பக்கத்து வீட்டுக்காரர். அவர் வரவில்லை என்றால் நீ மதம் மாறுவதை பற்றி சிந்திப்பாயா..? இந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை அறிந்துவந்து சொல். எனக்கும் உடன்பாடாக இருந்தால் நானும் மதம் மாறுகிறேன் என்றார் ஞானகுரு.

அன்று போனவன் இன்று வரை திரும்பவில்லை.


Leave a Comment