நடிகர் சிவகுமார் நேர்காணல்
ஓவியர், நடிகர், பேச்சாளர், எழுத்தாளர், தன்னம்பிக்கை செயற்பாட்டாளர் என்று தான் இயங்கும் ஒவ்வொரு தளத்திலும் வெற்றியைத் தொட்டிருப்பவர் திரைக்கலைஞர் சிவகுமார். அவரது திறமை, நினைவாற்றல், தன்னம்பிக்கை, உழைப்பு என அவரது ஒவ்வொரு செயலுக்கும் ஆதாரமாக இணைந்திருப்பது, அவரது ஆரோக்கியம். தனது ஆரோக்கிய ரகசியங்களை மனம் திறந்து பேசுகிறார்.
“நான் பங்கேற்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் வாய்ப்பு கிடைக்கும் ஒவ்வொரு மேடையிலும் நான் என்னுடைய கடந்த காலத்தைப் பற்றிப் பேசுவேன். அது என்னுடைய வரலாற்றைப் பலரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல. எவ்வளவு அடித்தட்டு நிலையிலிருந்தாலும் முயற்சியும் உழைப்பும் இருந்தால் மேலே வர முடியும் என்பதைச் சொல்வதற்காகத்தான், என் வாழ்க்கையை உதாரணமாக எடுத்துச் சொல்வேன்.
நான் பிறந்த பத்தாம் மாதத்தில் என் தந்தையை இழந்தேன். எனக்கு நாலு வயது இருக்கும் போது என் அண்ணா ப்ளேக் நோயினால் இறந்துவிட்டார். எங்களுக்குச் சொந்தமாக நிலம் இருந்தாலும், அதில் எருக்கும் அரளியும்தான் விளையும் . உச்ச பஞ்சத்திலிருந்தும் சாமி கொடுத்த குழந்தையைக் கொல்ல வேண்டாம் என்று அம்மா போட்ட பிச்சையால் தான் நான் இப்போது உயிரோடு இருக்கிறேன்.
அப்போது படிக்க வேண்டும் என்றால் ஒன்றாம் வகுப்புக்கு ஒரு ரூபாய். இரண்டாம் வகுப்புக்கு இரண்டு ரூபாய் பீஸ். எங்கள் சூலூர் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. பாஸ்செய்தது நான் மட்டும் தான். அதற்குப் பிறகு தான் சென்னை வந்தேன். மிகச் சாதாரணமாக பிறந்த ஒருவனை, முன்னேறுவதற்கு வாய்ப்பே இல்லை என்ற கிராமத்தில் பிறந்த ஒருவனை, இந்த யோகா எங்கு கொண்டு வந்து நிறுத்துகிறது என்பதற்காகத் தான் இதைச் சொல்கிறேன்.
மூச்சுப் பயிற்சி மகிமை
எனது ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன? எனக்கும் எனது வாழ்க்கைக்கும் யோகாவுக்கும் நெருங்கிய சம்பந்தம் உள்ளது. மண்ணில் பிறந்த ஒருவனுக்கு மரணம் சர்வ நிச்சயம் என்கிறார் திருமூலர். இறந்து போய்விட்டால் காந்தி என்றோ காமராஜர் என்றோ சொல்வதில்லை ‘பாடி’ என்று தான் சொல்வார்கள். அது உடல் ஆகிவிடுகிறது.
‘ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூறையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்களே’ என்கிறார் திருமூலர்.
நிலையில்லாதது இந்த உயிர்…நிலவும் வானமும் போல, நகமும் சதையும் போல, உடலும் உயிரும் போல என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் அது பொய். உடல் வேறு. உயிர் வேறு. உடம்பைக் காப்பாற்றாவிட்டால் உயிர் சொல்லாமல் போய்விடும். உடம்பைக் காப்பாற்றுவது தான் யோகா,பிராணாயாமம்.
யோகா பிராணாயாமம்
அந்த மூச்சுப் பயிற்சியை என் 16 வயதிலிருந்து செய்து வருகிறேன். பிராணாயாமத்தில் மூச்சு இழுப்பது, நிறுத்துவது விடுவது 2:8:4 விகிதம் இருக்க வேண்டும்.
அதாவது மூச்சை உள் வாங்குவது இரண்டு வினாடி, உள்ளே நிறுத்தி வைப்பது எட்டு வினாடி, வெளியே விடுவது நாலு வினாடி, இப்படி இந்த மூச்சுப் பயிற்சியை 16 வயதிலிருந்து செய்து கொண்டு வருகிறேன்.
கிருஷ்ணமாச்சாரி நூறு வயது வாழ்ந்தவர். ஒரு முறை மூச்சை இழுத்து உள்ளே அறுபது வினாடி நிறுத்துவாராம். நான் எழுபது வினாடி நிறுத்துவேன்.
166 ஆண்டுகள் வாழ வேண்டுமா ? இதே முறையில் இடது நாசியில் ஆரம்பித்து வலது நாசியில் விடுவது, வலது நாசியில் ஆரம்பித்து இடது நாசியில் விடுவது என்று இப்படி 166 முறை செய்தால் 166 ஆண்டுகள் வாழலாமாம். இடையில் இரண்டு வினாடிகள் இடைவெளி விட வேண்டும்.
1958 ல் யோகாவுக்கு மாஸ்டர் எல்லாம் கிடையாது. கன்னிமாரா நூலகத்தில் உறுப்பினராகி புத்தகங்கள் படித்து வந்தேன். உறுப்பினராகச் சேர்வதற்கு மூன்று ரூபாய் கட்டணம். அப்போதுதான் ஒரு யோகா புத்தகத்தைப் பார்த்தேன் -அது வாரப் பத்திரிகையில் தொடராக வந்து பைண்ட் செய்த தொகுப்பு.
ஆசிரியர் வி.என். குமாரசாமி.
அதை வாங்கி வந்து விடியற்காலை ஐந்தரை மணிக்கு ஆரம்பித்து முதலில் பத்மாசனம், யோக முத்ராசனம், மத்யாசனம், சர்வாங்காசனம், புஜங்காசனம் தனுராசனம் சிரசாசனம் என்று 38 ஆசனங்களைச் செய்வேன். இப்படிச் செய்த ஆறு மாதத்தில் ஆசனவாய் என் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. மூச்சு விடுவது போல் என்னால் ஆசனவாய் வழியாக காற்றை இழுத்து விட முடியும்.இந்த பயிற்சி எனக்கு 16 வயதிலேயே வந்துவிட்டது.
கிருஷ்ணமாச்சாரி, தேசிகாச்சாரி ,வி.என் குமாரசாமி போன்றவர்கள் யோகாவில் கரை கண்ட மகான்கள். வி..என்.குமாரசாமி போன்றவர்கள் நூலைப் படித்து யோகா பற்றி விரிவாக அறிந்து கொண்டேன். பிற்காலத்தில் அவரது, ‘ஆரோக்கிய ரகசியம்’ புத்தகத்திற்கு நான் யோகாசனம் செய்யும் படமே அட்டைப்படமாக வந்தது எனக்கு ஒரு பெருமை.
யோகா மீதுள்ள பற்றினால் விரைவிலேயே நான் சைவமாகி விட்டேன். இந்த நாக்கில் காப்பி, டீ பட்டு 60 ஆண்டுகள் ஆகின்றன. எதற்கு காபி டீ சாப்பிட வேண்டும்? அந்தப் பழக்கத்தை விட்டு ஒழியுங்கள்.
ஒரு மசால் தோசை சாப்பிட்டால் இங்கிருந்து மகாபலிபுரம் சைக்கிளில் போய் விட்டு வரலாம். காபி சாப்பிட்டு விட்டுப் போகமுடியுமா? .
எங்கள் ஊரில் இருந்து பாலக்காடு வரை சைக்கிளில் போய் திரும்பி வருவேன். 150 கிலோமீட்டர். அதுவும் 24 மணி நேரத்தில் போய்விட்டு வருவேன். அந்த உடல் வலிமையைக் கொடுத்தது யோகா தான்.
தஞ்சாவூர் கோவிலில் காலையில் 6 மணிக்கு அமர்ந்து எட்டு மணி நேரத்தில் ஓவியம் வரைந்து முடித்தேன் உட்கார்ந்து இடத்தை விட்டு நகராமல் அதற்கு உடலும் மனமும் ஒத்துழைத்ததற்கு யோகா தான் காரணம்.
மதுரை கோயிலில் காலை 8 மணிக்கு உட்கார்ந்து மாலை 6மணிக்கு வரைந்து முடித்தேன் .சிங்கிள் சிட்டிங் 10 மணி நேரம்.இப்படி பல இடங்களுக்கு அலைந்து திரிந்து150 படங்கள் வரைந்து இருப்பேன். ஒவ்வொன்றும் நாலு மணி நேரம் ஐந்து மணி நேரம் எடுத்து இருக்கும்.
அப்படி உட்கார்ந்து வரைவதற்கு உடலும் மனமும் ஒத்துழைப்பதற்கு யோகா தான் காரணம் .இப்படி நிறைய ஓவியங்கள் வரைந்தாலும் நான் வரைந்த ஓவியங்களை 16ஆம் நூற்றாண்டு ஓவிய பாணி என்றார்கள். அதன் பிறகு ஓவியனாக வாழ்வது சரிப்பட்டு வராது என்று சினிமா சென்றேன்.
சினிமாவிலும் ஜெயித்தேன்
அந்தத் துறைக்கு நான் முற்றிலும் புதியவன். எங்கள் ஊரில் மின்சாரம் இல்லை, கழிப்பறை இல்லை, சாலை வசதி எதுவும் கிடையாது.
அந்த ஊரில் இருந்து போன என்னை பரதநாட்டியம் ஆட வைத்தார்கள் .அதுவும் ஐந்து வயதிலிருந்து நடனம் கற்று ஆடும் ஸ்ரீவித்யாவுடன். 64 வயது கே.பி. சுந்தராம்பாள் அம்மையார் என் நடிப்புக்கி பாட்டுப் பாடினார். எனக்கு நடனம் வருமா என்று அனைவரும் சந்தேகப்பட்டனர். யாருக்கும் நம்பிக்கை இல்லை. 15 நாள் ஒத்திகை பார்த்து ஆறு நாள் படப்பிடிப்பு நடந்தது. அப்படி அந்தப் பாடல் காட்சியில் நடித்த படம் ‘காரைக்கால் அம்மையார்’. அதற்கான மனவலிமையும் உடல் திறனையும் கொடுத்தது யோகா தான்.
எங்கள் ஊரில் ரேடியோ கிடையாது மாமா ஊருக்குப் போனால் தான் ரேடியோவை கேட்கலாம். ஒரு பாடல் கேட்டது கிடையாது. இந்த நிலையில் சங்கீதத்தைப் பற்றி என்ன தெரியும்? அப்படிப்பட்ட நான் ஒரு சங்கீத வித்துவானாக நடிக்க வேண்டும், ‘சிந்து பைரவி’ படத்திற்காக. ஜேசுதாஸ் பாடுகிறார், இளையராஜா இசை அமைக்கிறார். நான் மட்டும்தான் சுத்த ஞான சூனியம்.
அப்படிப்பட்ட சூழலில் படப்பிடிப்புக்கு விசாகப்பட்டினம் கடற்கரைக்குச் சென்றேன். ஆனால் அங்கு பாடல் ஆடியோ டேப் கொண்டு வர மறந்து விட்டார்கள். ஒரு முன்னேற்பாடாக நான் மனப்பாடமாகச் செய்திருந்ததைப் பாடச் சொல்லி படமெடுத்து, சென்னை போய் எடிட் செய்யும் போது என் வாயசைப்பு ஜேசுதாஸ் பாடலுக்கு அப்படியே சிங்க் ஆயிற்று.. இதற்குக் காரணம் யோகா தான். சங்கீதம் தெரியாத எனக்கு அந்தப் பாடலை ஒவ்வொரு எழுத்தாக மனப்பாடம் செய்து கொள்ளும் நினைவாற்றல் வலிமையைத் தந்தது யோகா தான்.
192 படங்களில் நடித்த பிறகு இனிமேல் நடிப்பதில்லை என்று முடிவு கட்டி விட்டேன். மேடைப்பேச்சு பக்கம் கவனத்தை திருப்பினேன்..
கம்பராமாயணம், மகாபாரதம்
கம்பராமாயணத்தைப் படிக்கலாம், பேசலாம் என்று முடிவெடுத்தேன் . அது 10 ஆயிரத்து 520 பாடல்கள் கொண்டது. பிரமிப்பாக இருந்தது, பெரிய கடல் போல் தோன்றியது..அதற்கு ஒரு உரை தயாரிக்கலாம் என்றால் முதலில் மிரட்சியாக இருந்தது..ராமாயணத்தை, மகாபாரதத்தைப் பற்றி பேருரையாற்றும் அளவிற்கு கரை கண்டவர் இளம்பிறை மணிமாறன் அம்மையார்..
அவர் எனக்கு நம்பிக்கை அளித்தார். அவர் தனது 20 மணி நேர, 10 மணி நேர, 5 மணி நேர உரை சிடிகள் எல்லாம் கொடுத்தார். அவரைப் போன்றவர்கள் கம்ப ராமாயணத்தில் பல்லாண்டு காலம் பயிற்சி பெற்றவர்கள். நான் கம்பராமாயணத்தின் 10 ஆயிரம் பாடல்களைச் சுருக்கி ஆயிரம் பாடல்கள் ஆக்கி அதிலும் தேர்ந்தெடுத்து 100 பாடல்கள் ஆக்கி அதற்குள் முழு ராமாயணமும் வருவது மாதிரி உரை தயாரித்தேன். கம்பராமாயணத்தில் கரை கண்ட இளம்பிறை மணிமாறன் ஆச்சரியப்பட்டு என்னைப் பாராட்டினார். தன்னாலேயே இரண்டு மணி நேரத்தில் முழுராமாயணத்தை பேச முடியாது என்று பாராட்டினார். அப்படி என்னால் பேச முடிந்ததற்குக் காரணம் அந்த கவனம் சிதறாத நினைவாற்றலின் பின்னணியில் இருந்த யோகா தான்.
அதேபோல மகாபாரத உரையை, நான்காண்டு காலம் ஆய்வு செய்து உரையாக்கினேன். அதை இடைவெளி இல்லாமல் பல ஆயிரம் பேர் மத்தியில் உரையாற்றினேன். அதேபோல திருக்குறள் பற்றி ஆய்வு செய்து 100 குறள்களை எடுத்து அதற்குப் பொருத்தமான மனிதர்களின் வாழ்க்கையுடன் இணைத்து 100 குறள்களுக்கு 100 கதைகள் என்று இணைத்து நூலாக உருவாக்கினேன். அதை அப்படியே ஈரோடு புத்தக கண்காட்சியில் நான்கு மணி நேரம் எந்த இடைவெளியும் இல்லாமல் உரையாற்றினேன்.
இவையெல்லாம் எப்படி சாத்தியமாயிற்று என்றால் யோகா தந்த மனப் பயிற்சியும் உடற்பயிற்சியும் தான்.
இப்போதும் நான் யோகா செய்கிறேன். ஆனால் 28 ஆசனங்கள் எல்லாம் செய்வதில்லை. யோகா அனைவருக்கும் பொதுவானது.அதற்குள் மதத்தைத் திணிக்க கூடாது. எப்படி நம் நாட்டில் சிற்பம், இசை, ஓவியம் இருக்கிறதோ அதைப் போன்று யோகாவும் ஒரு கலை. இது நமது இதிகாச காலத்திற்கு முன்பே தோன்றியது.இதை மறந்து விட வேண்டாம்.
ஆரோக்கிய நடைமுறைகள்
எனக்கு காபி, டீ போலவே புகை, மது, மாது பழக்கங்களும் கிடையாது. உண்டது செரிக்க வேண்டும், படுத்தவுடன் உறங்கிவிட வேண்டும் .இதுதான் நல்ல ஆரோக்கியமான உடலின் அடையாளம்.
இரவில் 7 மணி நேரத் தூக்கம் அவசியம். இத்தனை ஆண்டுகால திரை உலக வாழ்க்கையில் நான் இரவு பகல் 24 மணிநேரம் படப்பிடிப்புக்குச் சென்ற நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம். எனவே தினமும் 7 மணி நேரத் தூக்கம் மிக மிக அவசியம்.
தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடிப்பது மிக அவசியம். நம் உடம்பு நாம் சொல்வதைக் கேட்க வேண்டும் ,நம் மூக்கால் சுவாசிக்க வேண்டும், நம் காதால் கேட்க வேண்டும், நம் வாயால் பேச வேண்டும், நம் காலால் நடக்க வேண்டும், இப்படி நம் உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டும் .நம் உடல் இயங்க கருவிகளையோ அடுத்தவர்களையோ சார்ந்து இருந்தால் அதைவிட நரகம் வேறில்லை.
நான் எங்கே காலையிலே எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலும் வீட்டில் உணவு அருந்தாமல் வெளியே செல்வதில்லை. நீரில் ஊறவைத்த பழைய சோறும் சில வெங்காயங்களும் சேர்த்து உண்பது என் வழக்கம். என் ஆரோக்கிய ரகசியங்களில் இதுவும் ஒன்றாகும். இதன் மூலம் நான் சொல்வது, அலட்சியத்தினாலும் சோம்பலினாலும் நேரம் தாழ்ந்து கண்விழித்து எழுவதாலும் காலை உணவை பலரும் தவிர்ப்பதுண்டு .அது மிக மிகத் தவறானது மட்டுமல்ல நம் உடல் ஆரோக்கியத்திற்கு எதிரானதும் கூட.
இரவு உணவிற்குப் பின் நீண்ட நேரம் வயிறு காலியாக இருப்பதால் காலை உணவை யாரும் தவற விட வேண்டாம். தாமதமாக இருந்து ஒரே நேரத்தில் 12 மணிக்கு சாப்பிடுவது பலருக்கும் வழக்கமாக இருக்கிறது .இது மிகவும் தவறான உணவுப் பழக்கம். அதற்கு நம் உடலினைப் பழக்கப்படுத்தினால் அதனால் தீய விளைவுகளே ஏற்படும். அதற்கான விலையை நாம் கொடுத்தாக வேண்டி இருக்கும்.எப்போதும் சாப்பாட்டை குறிப்பிட்ட ஒரே நேரத்தில் சாப்பிடுவது நல்லது.
சூரியன் தரும் நலம்
காலையில் 5 மணிக்கு எழுந்து சூரியன் காணாத காலைப் பொழுதை அனுபவிப்பது ஒரு மகிழ்ச்சிகரமான சுகமான அனுபவமாகும். அப்போது நடைப் பயிற்சி செல்லலாம். காலையில் எழும் பழக்கத்தைக் கடைப்பிடித்தால் அந்த நாளே உற்சாகமாகத் தொடங்கும். உடலும் நாம் சொன்னதைக் கேட்கும். காலைப் பயிற்சியில் சூரியன் இல்லாத மாசு கலப்பற்ற அந்தக் காற்றைச் சுவாசிப்பது உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடியது.
நம் செல்களை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகிறது. காலையில் எழுவது எனது இன்னொரு ஆரோக்கிய ரகசியம். காலை 5:30 மணிக்குள் எழுந்து நடைப்பயிற்சி செல்பவர்களுக்குப் பத்தாண்டுகள் ஆயுள் போனஸ். 50 வயதில் சுகர் பிபி இல்லைஎன்றால் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.
அதிக சம்பளம் கிடைக்கிறது என்று இரவு கண் விழித்துப் பார்க்கும் வேலை பார்க்கும் குழந்தைகள் பத்தாண்டுகளில் அந்த வேலையை விட்டு விடுங்கள். அதன் விளைவுகள் மோசமாக இருக்கும் .அதனால் உங்களுக்கு ஆரோக்கிய இழப்புகள் ஏராளமாக வரும். கண் விழிப்பதனால் மன அழுத்தம் போன்ற ஏராளமான பிரச்சினைகள் வரும். கவனமாக இருங்கள், இந்த பிறவி ஒருமுறைதான். இனி ஒரு பிறவி கிடையாது. மறந்துவிடாதீர்கள்.
மனைவியை நேசியுங்கள். ஆண்கள் மனைவி இல்லாமல் வாழ முடியாது. உங்கள் 50 வயதில் மனைவி இருந்தால் மகிழ்ச்சியாக இருங்கள். .60 வயதில் மனைவியுடன் இருந்தால் அவர்களைப் போற்றுங்கள், உங்கள் 70 வயதில் மனைவி இருந்தால் அவர்களைப் பூஜியுங்கள். உங்கள் 80 வயதில் மனைவி உடன் இருந்தால் நீங்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் .
நான் காலையிலிருந்து யோகாசனம் செய்து நடை பயிற்சி முடித்து என் பேரப்பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வேன் .அது என் அன்றாடப் பணிகளில் ஒன்றாகிவிட்டது. அவர்கள் கல்லூரி செல்லும் வரை அதை செய்து கொண்டிருப்பேன். இதை ஒரு வேலையாகச் செய்யவில்லை விருப்பமாகச் செய்கிறேன். ஏனென்றால் அங்கே ஐந்து வயது ஆறு வயது என்று குழந்தைகளைப் பார்க்கும்போது எனக்கு எனது பால்ய காலம் நினைவுக்கு வருகிறது, நாமும் இப்படி இருந்தவன் தானே என்று. மீண்டும் என்னை அங்கே பார்ப்பதாக உணர்கிறேன். நான் எனது உணர்வுகளைப் புதுப்பித்துக் கொள்கிறேன் என் உடல் இளமையாக ஆவதை உணர்கிறேன்.
எனக்கு புத்துணர்ச்சி கிடைத்த உணர்வும் உற்சாகமும் கிடைக்கிறது.
இறுதியில் சொல்கிறேன் நம் உடல் நலம் முக்கியம். அதுவே நமது வளம், நமது வாழ்க்கை”
- அருள்செல்வன்
