விரதம் இருந்தால் கேன்சர் குணமாகும்..?

டாக்டர். அ.ப.ஃபரூக் அப்துல்லா, சிவகங்கை

நம் முன்னோர்கள் முட்டாள் இல்லை, அவர்கள் அறிவுரைப்படி விரதம் இருந்தால் புற்றுநோய்க் கிருமிகள் செத்துவிடும் என்று கூறியிருக்கிறார் பாஜக தலைவர்களில் ஒருவரான அண்ணாமலை. இந்த பேச்சின் உண்மைத்தன்மை குறித்து பேசுகிறார் மருத்துவர்.

உண்ணாவிரதம் என்பது மனித இனம் தோன்றிய காலம்தொட்டே இருந்திருக்கிறது. வேட்டையாடிப் பிழைத்த காலத்தில் மனிதர்கள், பகிர்ந்துண்ணும் குழுக்களாக சேர்ந்து வாழ்ந்தனர். வேட்டை சிக்கிய நாள் மட்டுமே உணவு உண்பார்கள். வேட்டை இல்லாத நாட்களில் பட்டினி தான்.

வேட்டைக்காரன்

மரக்கொட்டைகள், கிழங்குகள் தான் சில நாட்கள் கிடைக்கும். எஞ்சிய நேரம் முழுப்பட்டினி தான். இப்படித்தான் லட்சோப லட்சம் வருடங்கள் கழிந்தன.

பனியுகம் முடிந்த பின்னர், ஐஸ் மலைகள் உருக ஆரம்பித்து, உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்த மலை முகடுகளில் இருந்து ஆறுகள் தோன்றின. அதுவரை நாடோடிகளாத் திரிந்த இனம், அந்த ஆறுகளின் கரைகளில் தங்க ஆரம்பித்தது.

ஏரி, குளம், குட்டை என நீரைத் தேக்கி, விவசாயம் செய்யக் கற்றுக்கொண்டான். தானியங்கள் விளைவித்தான். தானியங்களை உண்ண ஆரம்பித்தாலும் இன்று நாம் உண்பதைப் போன்று மூன்று வேளை உண்ணவில்லை.

விவசாயி

மனித சமுதாயம் தோன்றி, கடந்த முப்பது வருடங்களுக்கு முன்பு உணவுப் புரட்சி வரும் வரை நம் முன்னோர்கள் சாப்பிட்டது ஒரு வேலை உணவு தான். பல நாட்களில் அதுவும் இருக்காது.

தொடர்ச்சியான போர், அதீத மழை, வறட்சியினால் மனித சமுதாயம் தொடர்ச்சியாக பஞ்சங்களை பார்த்துவருகிறது. ஆகவே உண்ணாவிரதம் நமது முன்னோர்களின் வாழ்வியலில் இரண்டறக்கலந்த ஒன்று.

விரதங்கள்

உலகில் கடந்த பத்து நூற்றாண்டுகளில் தோன்றிய பல்வேறு சமயங்களும் உண்ணாநோன்பை வலியுறுத்துகின்றன.

இந்து சமயத்தில் ஏகாதசி, பிரதோஷம் போன்ற நாட்களிலும் பிரதி திங்கள் அன்று சிவபக்தர்கள், பிரதி வியாழன் அன்று விஷ்ணு பக்தர்களும் விரதம் இருப்பர்.

கிறிஸ்தவ சமயத்தில், சாம்பல் புதன்கிழமையைத் தொடர்ந்து வரும் நாற்பது நாட்களை “லென்ட் விரதம்” அனுஷ்டிக்கின்றனர்.

இஸ்லாமிய சமயத்தில், ரமலான் மாதத்தின் முப்பது நாட்கள் விரதம் இருப்பது கட்டாய கடமையாகும்.

புத்த மதத்தில் “வினயா” என்ற பெயரில் விரதம் அனுஷ்டிக்கின்றனர். அதில் மதிய உணவோடு அதற்கு மேல் உண்ணமாட்டார்கள்.

சமணர்கள் சவ்விஹார் உபவாஸ் (நீர்/ உணவு இரண்டையும் உண்பதில்லை) என்றும் திவிஹார் உபவாஸ் (நீரை மட்டும் குடிப்பர்) என்றும் விரதம் அனுஷ்டிக்கின்றனர்.

விரதத்தில் நன்மைகள்

நாம் உண்ணும் உணவு செரிமானமாக நமது உடல் நான்கில் இருந்து ஐந்து மணி நேரத்தைச் செலவழிக்கிறது. உணவு உண்ட பின் குறைந்தபட்சம் 8-12 மணிநேரம் கழித்து உடல் சீரான நிலையை அடைகிறது.

முக்கியமான ஹார்மோன்களான தைராக்சின், இன்சுலின் முதலியன குறைந்தபட்ச அளவில் இருக்கின்றன. நமது இயக்கங்கள் யாவும் சீராகிறது. அடிக்கடி உணவு உண்டு கொண்டிருப்பதை விட இடையிடையே விரதம் இருப்பது நமது உடலை வலிமையாக்கவல்லது.

பொதுவாக மாவுச்சத்தை உண்ணும் ஒருவருக்கு அவரது தசைகள் மற்றும் கல்லீரலில் மாவுச்சத்து க்ளைகோஜெனாக சேமிக்கப்படும். இப்படி 300 – 500 கிராம் க்ளைகோஜென் நமக்கு ஸ்டாக் இருக்கும் அந்த அளவுக்கு மீறி உண்ணப்படும் மாவுச்சத்து நமது தோலுக்கு அடியிலும், வயிற்றிலும் தொப்பைக் கொழுப்பாக மாறி ஸ்டோர் செய்யப்படும்.

ஒருவர் உண்ணாவிரதம் இருக்கையில் அவரது க்ளைகோஜென் ஸ்டோரை முதலில் உடல் உபயோகிக்கும். பிறகு, தனது தேவைக்கு உடலின் கொழுப்பை எரிக்க ஆரம்பிக்கும். இதுவே லிபோலிசிஸ் எனப்படும்.

மூளைக்கு எப்போதும் க்ளூகோஸ் சென்று கொண்டே இருக்க வேண்டும். ஆகவே தேவையான க்ளூகோசை உடல் புரதச்சத்தையும், கொழுப்பையும் கரைத்து க்ளூகோசாக மாற்றும். இது “க்ளூகோநியோஜெனசிஸ்” எனப்படும். இதன் வழி நம் உடல் உள்ளுறுப்புகளில் மண்டிக்கிடக்கும் கொழுப்பான visceral fats கரைக்கப்படும். உள்ளுறுப்புகள் சிறப்பாக இயங்கும்

இயற்கையாகவே உண்ணாவிரதம் மூலம் நமது கெட்ட கொழுப்புகளான ட்ரைகிளசரைடுகள் குறைகின்றன. இதயத்தைக் காக்கும் நல்ல கொழுப்பு கூடுகிறது. உண்ணாவிரதம் மூலம் பல மூளை சம்பந்தப்பட்ட வலிப்பு நோய் பிரச்சனைகள் சரியாகின்றன .

மனத்தாழ்வு நிலை இந்த விரதம் மூலம் சரியாகிறது என்கிறது ஒரு ஆய்வு. விரதம் இருப்பதால் brain neuro peptides எனும் ரசாயன அளவு அதிகமாகிறது. அதனால் மூளையின் ஆற்றல் அதிகமாகிறது. கவனம் சிதறாமல் இருக்கிறது.

இடையிடையே விரதம் இருப்பது மிகச்சிறந்த நோய் நிவாரணியாகவும் நமது எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதாகவும் இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான வெள்ளை அணுக்கள் தங்களைத் தாங்களே விரதத்தின் போது புணரமைத்துக்கொள்கின்றன. பல பழைய செல்கள் இறந்து புதிய செல்கள் பிறக்கின்றன. இதற்குப் பெயர் “ஆட்டோஃபேஜி”.

ஜீரண மண்டலம் சம்பந்தப்பட்ட நோய்களான இரிட்டபிள் பவல் சின்ட்ரோம்  விரதம் இருப்பதால் சீராகின்றன. பெண்களுக்கு மாதவிடாய் கோளாறை ஏற்படுத்தும் பாலி சிஸ்டிக் ஓவரி நோய் (PCOD), மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடியதாகும். அதற்கு காரணம் “இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ்” தான். விரதத்தின் மூலம் இன்சுலின் நன்றாக வேலை செய்கிறது. PCOD குணமாகின்றது .

புற்றுநோய்க்கு என்ன சம்பந்தம்?

விரதம் இருக்கும் போது நமது உடலில் செல் வளர்ச்சிக்கு உதவும் இன்சுலின், இன்சுலின் லைக் க்ரோத் ஃபேக்டர் – 1 ஆகியன குறைவாக சுரக்கின்றன. இதன் விளைவாக, புற்று செல்கள் பல்கிப் பெருகுவது தடுக்கப்படுகிறது. விரதத்தால் ஏற்படும் எரிபொருள் போதாமை மற்றும் க்ளூகோஸ் போதாமை நிலையில் நல்ல நிலையில் இருக்கும் செல்கள் தாக்குப் பிடிக்கின்றன.

ஆனால் புற்று செல்களுக்கு அதிகமான எரிபொருள் தேவை இருப்பதாலும் க்ளூகோஸ் தேவை இருப்பதாலும் அவற்றால் விரதம் தரும் அசாதாரண நிலையில் கொஞ்சம் திக்குமுக்காடிப் போகின்றன. 24 – 48 மணிநேரங்கள் விரதம் இருக்கும் போது ஆட்டோஃபேஜி எனும் முறையில் நமது உடலில் தேவையற்று இருக்கும் செல்கள், வயதான செல்கள் தானாக வளர்சிதை மாற்றத்துக்கு உள்ளாகி உடலால் கிரகித்துக் கொள்ளப்படுகின்றன.

விரதம் புற்று நோய்க்கு சிகிச்சையா?

தற்போது வரை கிடைத்திருக்கும் ஆய்வுகளின் தரவுகளின் அடிப்படையில், விரதத்தை புற்றுநோய்க்கான தனி சிகிச்சையாக அங்கீகரிக்க இயலாது. புற்று நோய் சிகிச்சையில் கீமோ தெரபி தேவைப்படுபவர்களுக்கு விரதமுறை கொண்டு சோதனை செய்ததில் கீமோ தெரபி மூலம் வரும் பக்கவிளைவுகள் குறைந்து காணப்பட்டது பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, புற்று நோய் சிகிச்சை அளிக்கும் நிபுணர் பரிந்துரைக்கும் உணவு முறையை புற்று நோய் இருப்பவர்கள் கடைப்பிடிப்பது நல்லது. ஏனென்றால், புற்று நோய் பாதிப்பு இருப்பவர்களுக்கு ஏற்கனவே பசி குறைவாக இருக்கும். கூடவே சாப்பாடு குறைவாகவே உள்செல்லும். மெலிந்து போய் எலும்பும் கூடுமாக இருப்பார்கள். இதை புற்று நோய் தரும் உடல் பலகீனம் (CANCER CACHEXIA) என்போம்.

இந்நிலையில் ஏற்கனவே புரதச்சத்து குறைபாடுடன் தசைகள் உருகிப் போய் இருப்பவர்களுக்கு விரதம் இருக்கச் சொன்னால் தசை இழப்பு அதிகமாகிடக்கூடும். புரத இழப்பு ஓரளவுக்கு மேல் போனால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும். எனவே, புற்று நோய் இருப்பவர்களுக்கு விரதம் சிகிச்சை ஆகாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

விரதம் வேண்டாம்

யாரெல்லாம் நீண்ட விரதத்தை மருத்துவப் பரிந்துரையின்றி இருக்கக்கூடாது?

1. மாத்திரைகளால் சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்தும் நீரிழிவு நோயாளிகள்

2. இன்சுலின் ஊசி போடும் டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயாளிகள்

3. மிக அதிக ரத்த அழுத்தம் இருந்து அதற்கான மாத்திரை எடுப்பவர்கள்

4. இதய நோயாளிகள்

5. சிறுநீரக/கல்லீரல் நோயாளிகள்

6. கர்ப்பிணிகள்

7. தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள்

8. 18 வயதுக்கு உட்பட்டவர்கள்

9. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்

10. கீமோ தெரபியில் இருக்கும் கேன்சர் நோயாளிகள்

11. வயிறு மற்றும் குடல் சார்ந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்கள்

12.வயிற்றுப்புண்(gastric ulcer) இருந்து அதற்கு சிகிச்சை எடுப்பவர்கள்

13. மனநல சிகிச்சை எடுப்பவர்கள்

14. குழந்தைப்பேறுக்கு முயல்பவர்கள்

15. நீண்ட தூர வண்டி ஓட்டுநர்கள்

விரத வகைகள்

இவர்களைத் தவிர மற்ற ஆண் பெண் இருபாலரும் விரதத்தை இருக்கலாம். பொதுவாக நான்கு வகையில் விரதம் இருக்கிறார்கள்.

12 மணிநேர உணவு + 12 மணிநேர விரதம், 10 மணிநேர உணவு + 14 மணிநேர விரதம், 8 மணிநேர உணவு + 16 மணிநேர விரதம், 24 மணிநேர விரதம்

ஆட்டோஃபேஜி உள்ளிட்ட நன்மைகளை அதிகமாகப் பெற 24-48 மணிநேர – நீர் மட்டும் அருந்தும் விரதம் தேவையாகிறது. விரதம் என்பது ஆரோக்கியமான விஷயம். அதன் மூலமாக உடலுக்கு நன்மைகள் நேர்வது உண்மை.

புற்று நோய் தடுப்பில் விரதத்திற்கு பங்குண்டு என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. எனினும் விரதமே இருந்தாலும் விரதத்தை விடும் போதும் உண்ணும் போதும் சரியான உணவு முறையில் இருக்க வேண்டும். விரதம் இருந்து விட்டு, அதிக மாவுச்சத்து + இனிப்புச் சத்து + எண்ணெயில் பொரித்த பண்டங்கள் + மது புகை என்று இருந்தால் பெரிய பலன் இராது.

புற்று நோய் சிகிச்சையில் விரதத்தை தனியாக கடைபிடித்து விடக்கூடாது. புற்று நோய்க்கு முறையான புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் பரிந்துரைப்படி சிகிச்சை + உணவு உட்கொள்ள வேண்டும்.

Leave a Comment