காதல் என்றாலே வைரமுத்துவை கையில் பிடிக்க முடியாது. கண்ணீரும் தித்திக்கிறதே, வயிற்றுக்கும் தொண்டைக்குமாய் உருவமில்லா உருண்டை உருளுதடி, வாழ்ந்துகொண்டே சாகவும் முடியுமே, செத்துக் கொண்டே, வாழவும் முடியுமே… அதற்காக வேணும்… காதலித்துப் பார் என்றெல்லாம் கவிதைகள் எழுதியிருப்பவர்.
இன்றைய காதல் தினத்திற்கும் அற்புதமான கவிதை படைத்திருக்கிறார். படித்துப் பாருங்கள், காதலிக்கும் ஆசை வரும்.
காதல் எனும் உயிர்ப்பண்பு
ஆண் பெண்
மாமிசத்தோடு மட்டும்
சம்பந்தப்பட்டதில்லை
எல்லா நிலைகளிலும்
எல்லா வயதினிலும்
அது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.
‘பெருந்தேன் இழைக்கும்
நாடனொடு நட்பே’ என்று
சங்கத் தலைவி பாடுமிடத்து
உடற்புணர்ச்சி காதலாகிறது
‘காதலாகிக் கசிந்து
கண்ணீர் மல்கி’
என்று பாடும்பொழுது
கடவுள் பக்தி காதலாகிறது
‘காதல் திருமகன்’ என்று
தசரதன் தளும்புகிறபோது
பாசம் காதலாகிறது
உதடுகளை மாற்றி மாற்றி
முத்தங்கள் பயணப்படுவதுபோல்
இதயங்களை மாற்றி மாற்றிக்
காதல் பயணப்படுகிறது
மனிதர் உள்ளவரை மட்டுமல்ல
இடம் பெயரும்
உயிர்கள் உள்ளவரை
காதல் இருக்கும்
உடலோடு தொடங்கி
உடல் தாண்டி
உயிரில் ஐக்கியமாகிறபொழுது
காதல் தன் புனிதயாத்திரையில்
பூரணம் பெறுகிறது
எல்லாக் காதலுக்கும்
இது நேர்வதில்லை
இன்று விற்பனையாகும்
250 மில்லியன் ரோஜாக்களும்
குழல் சேர்வதில்லை.
ஆனாலும் ரோஜாக்கள்
பூக்கவே பூக்கும்;
ஆனாலும் காதல்
மலரவே மலரும்
காதலைத் தடுக்க
நாம் யார்?
தானாய்த் தோன்றித்
தானாய் மறையும்
சந்திர சூரியர்
போன்றது காதல்
வாழ்க காதலே;
பூமியை வாழவை
