கேள்வி : ஆசிரியர் தினத்தன்று ஆசிரியருக்குப் பாத பூஜை செய்வதில் என்ன தவறு இருக்கிறது. படிப்பு சொல்லித் தரும் ஆசானுக்கு மதிப்பு தருவதில் என்ன குறைந்துவிடப் போகிறோம்..? – ஜெ.சிவராஜ், சேந்தமங்கலம்.
ஞானகுரு :
இந்த பண்பை அனைத்து மனிதரிடமும் கடைப்பிடிக்க முடியுமா என்பதை யோசியுங்கள். உங்களுக்கு முடி வெட்டி அழகூட்டும் மனிதர், உங்கள் தெருவை சுத்தமாக்கி ஆரோக்கியம் தரும் சுகாதாரப் பணியாளர், சமையலுக்கு காய் கறி விற்பனை செய்யும் மனிதர், மின்சாரம் தடைப்பட்டால் அதை செய்து தரும் மின்சார வாரிய ஊழியர், ரேஷனில் உங்களுக்கு அரிசி போடுபவர், உங்களை பாதுகாப்பாக பயணிக்க வைக்கும் பஸ் டிரைவர், ஆட்டோ டிரைவர், ரயில் டிரைவர், ஊரை பாதுகாக்கும் போலீஸ்காரர், உங்கள் பொழுதுபோக்குவதற்கு உதவும் சினிமா கலைஞர்கள், ஆடை நெய்து தரும் நெசவாளர்கள், உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகள் என்று ஏராளமான நபர்கள் ஆசிரியர்களை விட அதிக மதிப்புக்குரியவர்கள் இருக்கிறார்கள்.
இவர்கள் பாதங்களைக் கழுவ முடியாது என்றால் ஆசிரியரையும் மதிக்க வேண்டாம். இங்கு எந்த ஒரு மனிதரும் உயர்வானவர் இல்லை, தாழ்வானவரும் இல்லை. எனவே யாரையும் மதிக்கவும் வேண்டாம், மிதிக்கவும் வேண்டாம். ஆசிரியரின் பாதத்தைத் தொடுவது அடிமைத் தனத்தின் ஆரம்பம். பிள்ளையை படிக்கச் சொல்லுங்கள். அது மட்டும் போதும்.