ஞானகுரு பதில்கள்
கேள்வி : இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பது வீட்டில் இருக்கும் பெண்களா அல்லது வேலைக்குச் செல்லும் பெண்களா..?
- டி.முனீஸ்வரன், பாண்டியன்நகர்.
ஞானகுரு :
மகிழ்ச்சி என்பது தனிநபர் மனநிலை. மகிழ்ச்சியான மனநிலை அடைபவர் ஏழையாக, பணக்காரராக, வேலை பார்ப்பவராக, வேலை செய்யாதவராக, குழந்தையாக, முதியவராக, ஆரோக்கியமானவராக, நோயாளியாக என எப்படியும் இருக்கலாம். வேலை செய்பவர்களுக்குத்தான் மகிழ்ச்சி கிடைக்கும் என்றால், எந்த பெண்ணும் வீட்டில் இருக்க மாட்டார். வீட்டில் இருப்பதுதான் மகிழ்ச்சி என்றால், எந்த பெண்ணும் வேலைக்குச் செல்ல மாட்டார்.
கேள்வி : விண்வெளி ஆய்வு அவசியம் தானா…. சந்திரயான் வெற்றி பெறுமா?
- ஏ.எஸ்.இராஜேந்திரன், வெள்ளூர்.
ஞானகுரு :
இந்த பிரபஞ்சம் சுமார் 14 பில்லியன் வருடங்களுக்கு முன்பு உருவானதாக நம்பப்படுகிறது. சுமார் 5 லட்சம் வருடங்களுக்கு முன்பு மனித இனம் உருவாகியிருக்கலாம். ஆனால், கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளாகத்தான் பல்வேறு ஆய்வுகளில் மனிதன் இறங்கியிருக்கிறான். இந்த ஆய்வுகள் எல்லாமே மனிதன் சொகுசாக வாழ்வதற்கு புதுப்புது வழிகளை கண்டறிவது மட்டுமே. அந்த வகையில் நிலவில் தண்ணீர் இருக்கிறதா என்று சந்திரயான் 1 ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அனுப்பப்பட்ட சந்திரயான் 2 தோல்வி. ஆகவே, அடுத்தகட்ட ஆய்வுக்காக சந்திரயான் 3 சென்றுள்ளது. விண்வெளி ஆய்வு என்பது இப்போது பணம் கொட்டும் ஒரு துறையாக மாறிவருகிறது. வெளிநாட்டு செயற்கை கோள்களை இந்தியாவில் இருந்து குறைந்த செலவில் அனுப்புகிறார்கள். அதனால், மற்ற நாட்டுக்கு முன்பு சந்திராயன் போன்ற சாதனைகளை இந்தியா செய்துகாட்ட வேண்டியது அவசியமாகிறது. ஆனால், இந்த முயற்சி வெற்றியடைய வேண்டும் என்பதற்காக இந்தியா முழுக்க பூஜைகளும், சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டதும், சந்திர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டதும், நம் விஞ்ஞானிகளுக்கு செய்யப்பட்ட அவமானம்.
கேள்வி : மக்களுக்கு சேவை செய்ய விரும்புபவர்கள் அறக்கட்டளை அமைத்துத்தான் சேவை செய்ய வேண்டுமா..?
- எல்.தேன்குழலி, பசுவந்தனை.
ஞானகுரு :
தாங்கள் சேவை செய்வது பிறருக்குத் தெரியவேண்டும், வருமான வரிவிலக்கு வேண்டும், பாராட்டுவிழா வேண்டும் என்றெல்லாம் நினைப்பவர்களுக்கு மட்டும் அறக்கட்டளை வேண்டும்.