பாரதிதாசன், லெனின், சேக்ஸ்பியர் என்ன தொடர்பு..?

Image

இந்த வார சிறப்பு தினங்கள்

ஏப்ரல் மூன்றாம் வாரம் மிகவும் சிறப்பு மிக்கது. இந்த நாட்களில் என்னென்ன முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன என்பதைப் பார்க்கலாம்.



ஏப்ரல் 21 – பாரதிதாசன் இறந்த தினம்
புரட்சிக் கவிஞர் என எல்லோராலும் அழைக்கப்படும் பாரதிதாசன், புதுவையில் 1891ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் தேதி பிறந்தார். இவருடைய பெற்றோர் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மையார். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். தமிழ் மொழியின் மீது இருந்த அன்பின் காரணமாக தமிழ் மொழியினை முறையாக கற்க ஆரம்பித்தார். பிறகு அவரது கல்லூரிப் படிப்பில் தமிழ் மொழியினை தேர்ந்தெடுத்து இளங்கலை தமிழ் பயின்று பல்கலைகழகத்தில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். பிறகு அவர் காரைக்காலில் உள்ள அரசு கல்லூரியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றத் துவங்கினார். தமிழ் மொழிக்காக தனது தொண்டினை ஆற்றிய அவர், 1954ஆம் ஆண்டு புதுவை சட்டமன்றத் தேர்தலில் நின்றும் வெற்றிபெற்றார். பெரியாரின் கொள்கைகளில் ஆர்வம் நிறைந்த அவர், அதை தனது பாடல்கள் மூலம் வழங்கினார். பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, அழகின் சிரிப்பு, குடும்பவிளக்கு என பாரதிதாசன் மொத்தம் 86 நூல்களை எழுதியுள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக, பாரதிதாசன் தனது 73 ஆவது வயதில் 1964ஆம் ஆண்டு  ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி மறைந்தார்.
——————-
ஏப்ரல் 22 –  விளாடிமிர் லெனின் பிறந்த தினம்
ரஷ்யாவில் பொதுவுடைமை ஆட்சியை நிறுவுவதற்குக் காரணமாக இருந்தவர், விளாடிமிர் லெனின்.  இவர், 1870,  ஏப்ரல் 22ம் தேதி ரஷ்யாவில் வால்கா நதியின் கரையோரம் உள்ள சிம்பிர்ஸ்க் எனும் நகரத்தில் இல்யா உல்யனாவ் – மாயா உல்யானவ் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் விளாடிமிர் இலீச் உல்யானவ். தொழிலாளர்களின் விடுதலை குறித்து தீவிரமாகச் சிந்தித்த லெனின், தொழிலாளர்களுக்காக விடுதைலை இயக்கத்தைத் தொடங்கினார். அவருடைய கருத்துக்கள் தொழிலாளர்களுக்குப் புதிய வழியைக் காட்டியது. இந்த நிலையில், முதலாம் உலகப் போரினைத் தொடர்ந்து ரஷ்யாவில் தொழிலாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டனர்.  இதன் காரணமாக இடைக்கால ஆட்சி கவிழ்ந்து  புதிய ஆட்சி அமைந்தது. ஆட்சிக்கு வந்த மறுநாளே நில பிரபுக்களின் விளைநிலங்களை கைப்பற்றி விவசாயிகளுக்கு பிரித்துக் கொடுத்தார், லெனின். மேலும், முதலாளித்துவமும் சோசலிசமும் இணைந்த ஒரு கலப்புப் பொருளாதாரத்தை வகுத்துச் செயற்படுத்தினார். இப்படி, பல மாற்றங்களை உருவாக்கிய புரட்சியாளர் லெனின், இடைவிடாமல் நீண்டகாலம் உழைத்ததால், அவருடைய உடல் நலம் பாதிக்கப்பட்டது. பக்கவாதம் மற்றும் திசு தடித்தல் நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட அவர், தனது 54-ம் வயதில் 1924,  ஜனவரி 21ம் நாள் மரணமடைந்தார்.
——————-
ஏப்ரல் 22 – சர்வதேச புவி தினம்
பூமியின் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வையும் சுற்றுச்சூழல் சார்ந்த சரியான புரிதலையும் உலகிற்கு அறிவிக்கும் வகையில் உலகப் புவி நாள்  ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 22-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. மரங்களை அழிப்பதாலும், பிளாஸ்டிக், பெட்ரோல் போன்ற கரிமப் பொருட்களாலும் பூமியின் சுற்றுச்சூழல் மாறிவருகிறது. பூமியின் சுற்றுச்சூழல் மாசுபடாமல் காப்பதன் மூலமே அனைவரும் நிம்மதியாக வாழ முடியும். அதை வலியுறுத்தவே பூமி தினம் அனுசரிக்கப்படுகிறது.

1969–ல் நடந்த யுனெஸ்கோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி 1970–ம் ஆண்டு மார்ச் 21ல் முதன்முதலில் புவிதினம் கடைப்பிடிக்கப்பட்டது. அமெரிக்கா புவி நாளுக்கு, தனி தினம் ஒதுக்க கோரி ஏப்ரல் 22ஆம் தேதியை பரிந்துரை செய்தது. 1970 முதல் அந்த தேதியில் புவி தினமாக அனுசரித்து வந்தது. 1990 முதல் ஏப்ரல் 22ம் தேதி புவிதினமாக அனுசரிக்க ஐ.நா.சபையும் ஒப்புதல் அளித்தது. பல இடங்களில் அந்த வாரம் முழுவதும் புவி வாரமாக அனுசரிக்கும் நிகழ்வுகளும் நடக்கிறது. 2009ம் ஆண்டு ஐ.நா. சபையானது புவிதினத்தை, சர்வதேச தாய்பூமி தினமாக அறிவித்தது. முதல் புவிதினத்தை அமெரிக்காவில் 2 கோடி பேர் கலந்து கொண்டு கொண்டாடினார்கள். அவர்கள் சுற்றுச்சூழலுக்கு தாங்கள் ஒத்துழைப்பு அளிப்பதாக அமைதிப் பேரணி நடத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். இதில் 2 ஆயிரம் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.மரங்களை நட்டும், கழிவுகளை  அப்புறப்படுத்தியும், கடல்பரப்பை சுத்தம் செய்தும், கையெழுத்து போராட்டம் நடத்தியும், சுற்றுச்சூழலுக்கான திட்டமிடல் செய்தும் புவிதினம் கொண்டாடப்படுகிறது.
—————————-
ஏப்ரல்  23 –  வில்லியம் ஷேக்ஸ்பியர் மறைந்த  தினம்
 உலகின் மிகப் பெரிய நாடக ஆசிரியரான வில்லியம் ஷேக்ஸ்பியர் லண்டனின் வடக்கே ஸ்ட்ராட்ஃபோர்டில் 1564 ல் பிறந்தார். இவரது தந்தை, ஜான் ஷேக்ஸ்பியர். லத்தீன் மொழியில் இலக்கண, இலக்கியங்களை கற்றுத் தேர்ச்சி பெற்ற ஷேக்ஸ்பியர், ஓய்வுநேரத்தில் நாடகங்களில் நடித்தார். அதேநேரத்தில், சில அரிய நாடகங்களையும் எழுதினார். இவரது நாடகங்களுக்கு பொதுமக்களின் ஆதரவும் பெருமளவில் கிடைத்தது. ஆங்கில மன்னர்களைப் பற்றிய நான்காம் ஹென்றி, ஐந்தாம் ஹென்றி, மூன்றாம் ரிச்சர்ட் என்ற நாடகங்கள் பெரும்புகழ் பெற்றவை. இவருடைய நாடகங்களில் அதி உன்னத நாடகமாகப் போற்றப்படுவது ஹேம்லெட் ஆகும்.  இவர் மொத்தம் 38 நாடகங்கள், 154 செய்யுள் வரிசைகள், 2 நெடும் விவரிப்பு கவிதைகள் மற்றும் பல பிற கவிதைகளையும் படைத்துள்ளார். இவருடைய நாடகங்கள் உலகின் பெரும்பாலான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இவர் இயற்றிய ரோமியோ ஜூலியட் என்ற துன்பியல் நாடகம் 1595-ம் ஆண்டு அரங்கேற்றப்பட்டது. இந்த நாடகமானது பாலியல் எண்ணம் செறிந்த, பருவகால வயது, காதல் மற்றும் மரணம் இவற்றினாலான புகழ்பெற்ற காதல் வீரத் துன்பியல் நாடகம் ஆகும். தமது படைப்புகள் மூலம் இன்றும் நம்மிடையே உலா வரும் ஷேக்ஸ்பியர் 1616, ஏப்ரம் 23ம் நாள் மறைந்தார்..  
—————
ஏப்ரல் 23 – சர்வதேச புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
ரஷ்யப் படைப்பாளிகள் புத்தக உரிமைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்று கருதியதால் ஏப்ரல் 23 அன்று,  உலகப் புத்தகம் மற்றும் புத்தக உரிமை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, 1995ம் ஆண்டு முதல் உலக புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. 1616-ம் ஆண்டு இந்நாளிலேயே மிகுவேல் டி செர்வண்டேஸ், வில்லியம் ஷேக்ஸ்பியர், இன்கா டி லா வேகா ஆகியோர் காலமானார்கள். இதே நாள் மொரிஸ் ட்ருவோன், ஹோல்டோர் லக்ஸ்னெஸ், விளாமிடிர் நபோகோவ், ஜோசெப் பிளா, மனுவேல் மெஜியா வலேஜோ ஆகிய எழுத்தாளர்களினதும் பிறந்த நாளாகவோ அல்லது இறந்த நாளாகவோ அமைகிறது. இந்நாளைக் கொண்டாடும் எண்ணம் முதன் முதலாக ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலோனியாவில் உருவானது. இவர்கள் ஏப்ரல் 23-ம் நாளை சென். ஜார்ஜின் நாளாகக் கொண்டாடினர். இந்நாளில் ஆண்களும் பெண்களும் புத்தகத்தையும், ரோஜா மலரையும் தம்மிடையே பரிசாகப் பரிமாறிக் கொள்வார்கள். உலகப் புத்தக தினம் என்று ஒரு தினத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்து சர்வதேச பதிப்பாளர் சங்கத்தால் முன்வைக்கப்பட்டு ஸ்பெயின் நாட்டு அரசால் யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்யப்பட்டது. உலகெங்கிலும் இயங்கும் யுனெஸ்கோவுக்கான தேசிய ஆணையகங்கள் உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாகவே இந்நாள் தேர்வு செய்யப்பட்டதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
—————–
ஏப்ரல் 24  –  ஜி.யு.போப் பிறந்த தினம்
தமிழ்மீது மிகுந்த பற்றுக்கொண்ட ஜி.யு.போப், கனடாவின் பிரின்ஸ் எட்வெர்ட் தீவில் என்னுமிடத்தில் ஜான் போப், காதரீன் யூக்ளோ போப் ஆகியோருக்கு பிறந்தார். குழந்தைப் பருவத்திலேயே இங்கிலாந்துக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். 19 வயது வரை ஹாக்ஸ்டன் கல்லூரியில் கல்வி பயின்றார். இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் 1885 முதல் 1908 வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராக பணியாற்றினார். 1886-ம் ஆண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களை பதிப்பித்தார். தமிழ் மீது பெரும் பற்று பெற்ற அவர் நாலடியார், திருவாசகம் ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 1839-ல் தமிழ் நாட்டிற்கு வந்த அவர், கப்பலில் பயணம் செய்த எட்டு மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார்.  எட்டு ஆண்டுகள் தஞ்சாவூரில் சமயப்பணியை தொடர்ந்தார். இந்த கால கட்டத்தில் புறநானுறு, நன்னூல், திருவாசகம், நாலடியார் போன்ற நூல்களை கற்றார். சில ஆங்கில மொழி இதழ்களில் தமிழ் குறித்த ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதினார். தனது கல்லறையில், ஒரு தமிழ் மாணவர் என்று பொறிக்கப்பட வேண்டும் என்று எழுதிய இந்தப் பெருமகன் தன் 88-ம் வயதில் மரணம் அடைந்தார்.

Leave a Comment