ஞானகுரு பதில்கள்
தினமும் ஏதேனும் ஒரு கவலை மனிதர்களை ஆட்டிப்படைக்கின்றன. கவலைகள் இல்லை என்றாலும், ‘ஏன் இன்று எந்த கவலையும் இல்லை, மிகப்பெரிய சிக்கல் ஏதாவது வரப்போகிறதா..?’ என்ற எண்ணம் மக்களுக்குத் தோன்றிவிடுகிறது. நம்மால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களுக்குக் கவலைப்படுவது மனதை மிகப்பெரும் அளவுக்குப் பாதிக்கிறது.
என்ன மதிப்பெண் வரும், சம்பளம் உயர்வு கிடைக்குமா, கணவர் வந்து திட்டுவாரா என்றெல்லாம் சில விஷயங்களை தங்கள் மனதுக்குள் போட்டு சிக்கலாக்கிக் கொள்கிறார்கள். இவற்றுக்குக் கவலைப்படுவதால் மட்டும் எதுவும் மாறிவிடப் போவதில்லை. எனவே, இதில் நாம் செய்வதற்கு எதுவுமில்லை என்ற உண்மை அறிவதே போதும். அந்த உண்மை அறியாமலே சிலர் தற்கொலை வரை போகிறார்கள்.
- தேவை இல்லாத விஷயங்களுக்குக் கவலைப்படுபவர்கள் சிறிய சதவிகிதம்தானே?
மரணம் வரை செல்லும் நபர்கள் வேண்டுமானால் குறைவாக இருக்கலாம், ஆனால் 99 சதவிகிதம் பேர் தேவையற்ற சாதாரண விஷயங்களுக்குத்தான் அதிகம் கவலைப்படுகிறார்கள். சந்தோஷமாக பொழுதுபோகவேண்டும் என்று சினிமா தியேட்டருக்கு சென்றால், அங்கேயும் இன்பமாக இருப்பதில்லை. தியேட்டருக்கு சென்றதும், இன்னமும் அரங்கம் திறக்கவில்லையே என்று கவலைப்படுவார்கள். அரங்கத்தை திறந்து இருக்கையில் அமர்ந்ததும், இன்னமும் படம் போடவில்லையே என்று கவலைப்படுவார்கள். தாமதமாகும் ஒவ்வொரு நிமிடமும் ஏதோ பெரிய வேதனையில் இருப்பதுபோல் நெளிவார்கள். விளம்பரப் படங்கள் போட்டால் எரிச்சல் அடைவார்கள். அக்கம்பக்கத்தில் யாராவது பேசினால் கோபமாவார்கள். இவர்களது கவலைக்கும் கோபத்துக்கும் எந்த அர்த்தமும் இல்லை என்பதை உணர்வதே இல்லை. இதில் எந்த ஒரு விஷயமும் அவர்கள் கையில் இல்லை என்பதும் தெரிவதில்லை.
- இதுபோன்ற நேரத்தில் என்ன செய்யவேண்டும்?
ரயிலுக்காக காத்திருக்கிறீர்கள். தாமதமாக வரும் என தெரியவருகிறது. உங்களால் அங்கே எதுவும் செய்யமுடியாது என்ற உண்மை புரியவேண்டும். இன்னமும் ரயில் வரவில்லையே என்று கடிகாரம் பார்த்துப்பார்த்து டென்ஷன் ஆவதைவிடுத்து, இன்று கூடுதலாக கொஞ்சநேரம் பிளாட்ஃபாரத்தில் இருப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று ரசித்துப் பார்.
ஊரில் இருந்து வீட்டுக்கு வரும் உறவினர் பஸ் ஏறிவிட்டதாக போன் செய்து ஒரு மணி நேரம் ஆனதால், ரோட்டிற்கும் வீட்டுக்கும் அலைவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. ரோடு வரை வந்தவர் நிச்சயம் வீட்டுக்கும் வரத்தான் செய்வார். அந்த நேரத்தில் உறவினருக்குத் தேவையான எதையாவது தயார் செய்துவைக்கலாமா என்று யோசிக்க வேண்டுமே தவிர, வீணாக டென்ஷன் ஆவதில் பிரயோஜனமில்லை. மூன்றாம் மாடியில் இருந்து முதல் மாடிக்கு லிஃப்ட் வருவதற்குள் முப்பது முறை பட்டனை அழுத்தும் ஆசாமிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு முறை அழுத்தினாலும் முப்பது முறை அழுத்தினாலும் விளைவு ஒன்றுதானே… காத்திருக்கும் பொறுமை இல்லையென்றால் மனம் எரிச்சல் அடையும். மனம் குப்பையாகும்போது ஜீரண சக்தி குளறுபடியாகும். ஜீரணம் சிக்கலானால் உடலின் அனைத்து பாகங்களுக்கும் பிரச்னை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படவே செய்யும்.
- அப்படியென்றால் எப்படிப்பட்ட மனநிலையில் காத்திருக்க வேண்டும்?
காத்திருக்கிறோம் என்ற எண்ணமே இல்லாதவண்ணம் ஒரு நல்ல அனுபவத்திற்காக மட்டுமே காத்திருக்க வேண்டும். ஏனென்றால் காத்திருக்கிறோம் என்ற எண்ணமே தீவிரமான மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடும். உன்னால் எதுவும் செய்யமுடியாத நேரத்தில் அமைதியாக வேடிக்கை பார், வாழ்க்கை சுவாரஸ்யமாகிவிடும். எது நடந்தாலும் ஏற்றுக்கொள்ளும் ஏகாந்த நிலையை மனம் பெற்றுவிடும். அதனால் காத்திருக்க கற்றுக்கொள்ளுங்கள்.