விஜய் சேதுபதியின் மதம், மனிதம்

Image

மனிதரை காப்பாற்ற வேண்டியது யார்..?

மனிதர்கள் கூடி வாழும் இனத்தைச் சேர்ந்தவர்கள். அதனாலே காலம் காலமாக பல்வேறு ஆதிக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார்கள். மன்னருக்கு அடிமையாக இருந்தார்கள், அன்னியர்களுக்கு அடிமையாக இருந்தார்கள். இவை எல்லாம் வெளிப்படையாகத் தெரிந்த அடிமைத்தனம். அதனால், அதிலிருந்து வெளியே வந்துவிட்டார்கள்.

ஆனால், இன்னும் மனிதர்கள் வெளியே வர முடியாத ஆதிக்கம் நிறைய இருக்கின்றன.

சாதிய ஆதிக்கத்திலிருந்து மக்களால் இன்னமும் முழுமையான விடுதலை பெற முடியவில்லை.

ஆண்கள் ஆதிக்கத்திலிருந்து பெண்களால் முழுமையான விடுதலை பெற முடியவில்லை.

சந்தை ஆதிக்கத்திலிருந்து மக்களால் வெளியே வர முடியவில்லை விளம்பரங்களைப் பார்த்து தேவையில்லாதவற்றை வாங்கிக்குவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள். இந்த பொருளை வாங்கவில்லை என்றால் மகிழ்ச்சி கிடைக்காது என்று ஏமாற்றும் சந்தை ஆதிக்கத்தை தவிர்க்க வேண்டும் என்ற மாயை மக்களுக்குப் புரிவதில்லை.

போர் ஆதிக்கத்திலிருந்து மக்கள் இன்னமும் வெளியே வர முடியவில்லை. அதனாலே உலகின் ஒட்டுமொத்த வருமானத்தில் கிட்டத்தட்ட 40% ராணுவத்துக்கு செலவிடப்படுகிறது. இந்த பணம் இருந்தால் ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் வறுமையில் இருந்தும் நோயில் இருந்தும் காப்பாற்றிவிட முடியும். இதனை செய்வதற்கு எந்த அரசும் முன்வருவதில்லை.

மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும் அரசுகள் செய்ய வேண்டிய கடமை. அடிப்படை வசதிகள் கிடைக்கும்போது தனி மனிதன் மகிழ்ச்சி அடைந்துவிடுவான். அவனது குடும்பம் மகிழ்ச்சி அடைந்துவிடும். இது, நாட்டுக்கும் உலகிற்கும் நல்ல செய்தி. ஆனால், இன்றைய அரசுகள் தனி மனிதர்களின் மகிழ்ச்சி குறித்தும், அடிப்படைத் தேவைகள் குறித்து கவலைப்படுவதில்லை.

நாட்டில் கோயில்கள் கட்டுவதற்கும் கும்பமேளா நடத்துவதற்கும் ஆர்வமாக இருக்கிறார்கள். மொழிக்காகவும், இனத்துக்காகவும் போராட்டம் நடத்துவதற்கு மக்களைத் தூண்டுகிறார்கள். இவை எதுவுமே மனிதரின் அத்தியாவசியத் தேவைகளைத் தீர்க்கப் போவதில்லை என்பது தெரிந்தும் அரசுகள் மக்களை முட்டாளாக்குகின்றன.

மனிதரைக் காப்பாற்றுவதற்கு உருவாக்கப்பட்டவரே கடவுள். அவரை வழிபடுவதற்கு வகுக்கப்பட்ட நியதிகளே மதம். ஆனால் இப்போது கடவுளையும் மதத்தையும் காப்பாற்ற வேண்டிய கடமை மக்களுக்கு இருப்பதாக ஆட்சியாளர்கள் பேசுகிறார்கள்.

கடவுளைக் காப்பாற்ற வேண்டியது மனிதரின் பொறுப்பா..?

இந்த விஷயத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு இருக்கும் தெளிவு கூட இன்றைய அரசியல்வாதிகளுக்கு இல்லை. கடவுள் குறித்து விஜய் சேதுபதி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா..?

’’கடவுளுக்காகச் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை. நாம் அனைவரும் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். கடவுள் இங்கு பலகோடி வருடங்களாக இருக்கிறது. ஆனால், கடவுள் இன்னொரு கடவுளைக் காப்பாற்றும் மகா மனிதரைப் படைக்கவே இல்லை. கடவுளைக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லும் எந்தவொரு கூட்டத்துடனும் தயவு செய்து பழகாதீர்கள். அது ரொம்பவே முக்கியம்.

கடவுளைச் சாதாரண மனிதனால் காப்பாற்றவே முடியாது. அது பொய், அதெல்லாம் நம்பவே நம்பாதீர்கள். யாராவது இது தொடர்பாக உங்களிடம் பேசினால், திருப்பி என்னுடைய மதத்தில் என்ன சொல்கிறது என்றால் என்ற பதிலைச் சொல்லாதீர்கள். அதற்குப் பதிலாக மனிதத்தையும் மனித நேயத்தையும் சொல்லிக் கொடுங்கள். மனிதரை மதிக்கச் சொல்லிக் கொடுங்கள்.

கடவுள் மேலே இருக்கிறார். மனிதன் தான் பூமியில் இருக்கிறான். ஆகையால் மனிதனை மனிதனால் தான் காப்பாற்ற முடியும். இது மனிதர்கள் வாழுவதற்கான இடம். மனிதன் சகோதரத்துவத்துடன் சந்தோஷமாக அன்பைப் பரிமாறிக் கொண்டு வாழவேண்டும். மதத்தைச் சொல்லி கடவுளையே பிரிக்கிறார்கள். கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே மதம் அவசியமில்லாதது.” என்று கூறுகிறார்.

இந்த தெளிவு ஒவ்வொரு மனிதருக்கும் முக்கியம். மனிதர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மனிதர்களுக்கே இருக்கிறது. கடவுளுக்கு இங்கு எந்த வேலையும் இல்லை. கடவுளைக் காப்பாற்ற வேண்டியது மனிதரின் கடமையும் இல்லை.

கடவுள் என்று ஒருவர் இருந்தால், அவர் மனிதரிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்வார்.

Leave a Comment