கதை குட்டி, கருத்து செம கெட்டி..!

Image

இரண்டு தத்துவக் கதைகள்

ஒரு சில கதைகள் எத்தனை முறை படித்தாலும் சலிப்பதே இல்லை. கதையும் அது சொல்லும் கருத்தும் ரொம்பவே முக்கியம்

1. ஒரு கோப்பை தண்ணீர்!

பேராசிரியர் தனது கையில் கொஞ்சம் நீருடன் ஒரு கோப்பையை வைத்துள்ளார். மாணவர்கள் அனைவருக்கும் தெரியுமாறு தூக்கி பிடித்துக் கெவுண்டு, ‘‘இந்த கோப்பையில் உள்ள நீரின் அளவு என்ன?’’ என்று கேட்கிறார்.

’’50  மில்லி, 75 மில்லி, 100 மில்லி”  என பலவிதமான பதில்கள் வந்தது.

’’இருக்கட்டும்… எனக்கு இதன் அளவு முக்கியம் அல்ல” என்றவர், ‘‘நான் சொல்ல விரும்பும் விசயம், ஒரு சில நிமிடங்களுக்கு நான் இதை தூக்கி பிடித்திருந்ததால் என்னவாகும்?’’

’’ஒன்றும் ஆகாது”

’’இதையே ஒருமணி நேரம் பிடித்திருந்தால்?’’

’’உங்க கை வலி எடுக்கும்” என்றனர் மாணவர்கள்.

’’மிகவும் சரி, இதையே நாள் முழுவதும் வைத்திருந்தால்..?’’

’’உங்களது கை அப்படியே மடங்கி விடும், தசை வலி ஏற்படுவதோடு பாரலிசிஸ் நோய்க்கும் ஆளாக நேரிடும்” என்று ஒரு மாணவன் சொல்ல மற்றவர்களும் ஆமோதித்தனர்..

’’சரி, இந்த நேரத்தில் கோப்பையில்  உள்ள நீரின் அளவில் மாற்றம் ஏதுமிருக்குமா?’’ என்று கேட்டார்.

’’இருக்காது”

’’அப்படியானால், எனது தசை வழிக்கு என்ன காரணமாக இருக்க முடியும்?’’

மாணவர்கள் புரியாமல் பார்க்க, அவரே தொடர்ந்தார்…

’’இப்போது இந்த வலியில் இருந்து மீள நான் என்ன செய்ய வேண்டும்?’’

’’அந்த கோப்பையை கீழ வைத்து விடுங்கள்” என்றான் ஒரு மாணவன்.

’’இதைத்தான் எதிர்பார்த்தேன்..!’’ என்றார் ஆசிரியர்.

வாழ்க்கையில் பிரச்னை என்பது இந்த கோப்பையில் உள்ள நீரைப் போலத்தான். கொஞ்சநேரம் அதைப்பற்றி சிந்திப்பது தேவைதான்.   ஆனால் அதைப் பற்றியே நீண்ட நேரம் சிந்திப்பது தலைவலியை கொடுக்கும். மேலும் அதைப் பற்றியே சிந்திப்பது, பாரலிசிஸை கொண்டு வரும். அதற்கு மேல் நம்மால் ஏதும் செய்ய இயலாது.

வாழ்க்கையில் உள்ள தடைகளையும், பிரச்னைகளையும் சிந்திப்பது மிகவும் அவசியம். ஆனால், அதைவிட முக்கியமானது நாள் முடிவில் தூங்கச் செல்லும் முன் அவற்றை தூக்கி எறிவது.

இதனால், அடுத்த நாள் சுறுசுறுப்பாக எழுந்து, நமது தடைகளை தகர்க்க முடியும். எனவே அலுவலகத்தில் இருந்து செல்லும் போது, பிரச்னை என்கிற கோப்பையை தூக்கி எறிந்து விட்டு செல்லுங்கள்..

2. ஒரு கோப்பை காபி!

நல்ல வேலை கிடைத்து வாழ்க்கையில் ஒரு நிலைக்கு வந்திருந்த மாணவர்கள் சிலர் தங்களது கல்லூரி பேராசிரியரைச் சந்தித்தனர். பழைய கதைகளைப் பேசிக் கொண்டுருந்த அவர்களின் பேச்சு தங்கள் சார்ந்திருந்த வேலையினால் உண்டாகும் மன அழுத்தத்தையும் அதனால் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள சலிப்பையும் பற்றி திரும்பியது.

விருந்தினர்களை உபசரிக்க காபி எடுத்துவரச் சென்றார் பேராசிரியர். ஒரு பெரிய பாத்திரத்தில் காபியும் சில கோப்பைகளையும் எடுத்துவந்தார். அதில் கிளாஸ், பிளாஸ்டிக், கிரிஸ்டல், விலையுயர்ந்த, சாதாரணமான, வெள்ளி மற்றும் தங்கத்தில் செய்யப்பட்ட கோப்பைகள் கலந்து கிடந்தன. ஆளுக்கொரு கோப்பையில் காபியை அவர்களே எடுத்துக்கொள்ளுமாறு பேராசிரியர் பணிந்தார்.

மாணவர்கள் காபியுடன் அமர்ந்ததும், பேராசிரியர் பேச ஆரம்பித்தார்.

நன்றாக கவனித்தீர்களானால், விலையுயர்ந்த மற்றும் பார்வைக்கு அழகான கோப்பைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ளவை சாதாரண மலிவாக கிடைக்கக் கூடிய கோப்பைகள் மட்டுமே. இந்த மனநிலைதான் உங்களின் அனைத்து துன்பம் மற்றும் மன அழுத்ததிற்கு காரணம். உண்மையிலேயே உங்களுக்கு தேவை கோப்பையா? அல்லது காபியா? ஆனால் நீங்கள் அனைவரும் மற்றவர்களின் கோப்பையை விட உங்களது கோப்பை நன்றாக இருக்கவேண்டுமென்று தான் நினைத்தீர்கள்.

இங்கே வாழ்க்கையை காபியாக கருதினால், வேலை, பணம், அந்தஸ்து ஆகியவை கோப்பைகளைப் போன்றது. அந்த கோப்பைகளெல்லாம்  உங்களது வாழ்க்கையை தூக்கி பிடிக்கும். ஆனால் வாழ்க்கை மாறாமல் அப்படியேதான் இருக்கும். கோப்பையை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்தால் சிலசமயம் வாழ்க்கையை இழக்க நேரிடும்.

காபி அருந்த கோப்பை அவசியம்தான். அது எந்த கோப்பை என்பது, அவரவர் மனநிலையில் உள்ளது. கோப்பையை தேடி அலையாமல், காபியை மகிழ்வாக அருந்துங்கள்.

நமது கோப்பையை நாம்தான் முடிவு செய்யவேண்டும்.

Leave a Comment