பணமே மந்திரம்
கடுமையாக உழைத்தால் பணம் கொட்டும், சிறு சேமிப்பு பெருவெள்ளமாக மாறும் என்றெல்லாம் பணம் பற்றி சொல்வதை நம்பவே நம்பாதீங்க. கடுமையாக உழைத்தால் பணம் கொட்டும் என்றால் துப்புரவுத் தொழிலாளர்கள் எல்லாம் லட்சாதிபதிகளாக மாறியிருக்க வேண்டும். எனவே, ஹார்டு வொர்க் தேவையில்லை, ஸ்மார்ட் ஒர்க் வேண்டும். அவ்வப்போது புதிய வேலைக்கு மாறிக்கொண்டு இருப்பவர்களே அதிகம் சம்பாதிக்கிறார்கள்.
சேமிப்பதால் செல்வம் பெருகாது. எத்தனை ஆண்டுகள் சேமித்தாலும் பண வீக்கத்தினால் அதன் மதிப்பு குறைவாகவே இருக்கும். எனவே, பணம் சேமிப்பதை விட அதை முதலீடு செய்து பணத்தின் மதிப்பை அதிகரிக்க வேண்டும்.
கடன் இல்லாமல் வாழ்வதே சிறப்பு என்பதும் உண்மையல்ல. வியாபாரம், தொழிலுக்குக் கடன் வாங்குவதே சரியான முடிவு. அதற்காக கிரிடிட் கார்டு போன்ற மோசடி வலையில் மாட்டிக்கொள்ளாதீர்கள். சொந்த வீடு வைத்திருப்பதே மதிப்பு என்பதும் உண்மை அல்ல. இ.எம்.ஐ. கட்டுவதற்கு ஒவ்வொரு மாதமும் கடன் வாங்கி அவமானப்படுவதை விட வாடகைக்குக் குடியிருப்பதே நல்ல தீர்வு.
நிறுவனத்திற்கு விசுவாசமாக இருந்தால் அதிக சம்பள உயர்வு கிடைக்கும் என்பது உண்மை அல்ல. திறமைக்கு மட்டுமே மதிப்பு கிடைக்கும், நிறுவனத்திற்குத் தேவையில்லை என்றால் எத்தனை பெரிய விசுவாசி என்றாலும் வெளியே அனுப்பிவிடுவார்கள். எனவே, ஒரு வருமானத்தை மட்டும் நம்பி வாழாதீர்கள்.
அதனால் சின்ன தொகை என்றாலும் வேறு ஒரு வருமானத்திற்கு ஏற்பாடு செய்துகொள்ளுங்கள். ஒரே ஒரு மருத்துவச் செலவு ஒட்டுமொத்த சேமிப்பையும் கரைத்துவிடும். எனவே, இன்சூரன்ஸ் கட்டுவதற்கு மறக்காதீர்கள். பணமே வாழ்க்கை என்பதை புரிந்துகொண்டு மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.