ஞானகுரு :
ஒரு நதியில் இரண்டு முறை கால் நனைக்க முடியாது என்பார்கள். இரண்டாவது முறை கால் நனைக்கும்போது, முதல் முறை உன்னை நனைத்த நீர் காணாமல் போயிருக்கும். இதுதான் இந்த நிமிடத்தில் வாழ விரும்புபவர்கள் புரிந்துகொள்ள வேண்டிய தத்துவம்.
கடந்த காலத் தவறுகளுக்கு வருத்தப்படாமல் எதிர்கால கனவில் மிதக்காமல் இன்றைய நாளை எதிர்கொள்ள வேண்டும். குறிப்பாக யாருடனும் எதனுடனும் ஒப்பிடாமல் உங்களுக்கு என்ன இருக்கிறதோ அதனை அப்படியே எதிர்கொள்வது தான் இந்த நிமிடத்தில் வாழ்வதற்கான முதல் படி. உறவினர் வீட்டுக்குச் செல்லும்போது, சுற்றுலா போகும்போது, ஒரு சினிமா செல்லும் போது உங்கள் பழைய அனுபவங்களை, நிறைய எதிர்பார்ப்புகளை நெஞ்சில் ஏந்திச் சென்றால் பெரும்பாலும் ஏமாற்றமே கிடைக்கும். எனவே, தினமும் புதிதாய் பிறப்பது போல் எழுந்துகொள்ளுங்கள். எல்லாமே புதிதாகத் தெரிவார்கள். வாழ்க்கை கொஞ்ச நாள் மட்டுமே, மகிழ்ச்சியாக இருப்பதற்குக் கிடைக்கும் எந்த வாய்ப்பையும் தவற விட வேண்டாம் என்று மட்டும் எண்ணிக்கொள்ளுங்கள். அது போதும், நிகழ்காலத்தில் வாழத் தொடங்கிவிடலாம்.