ஞானகுரு :
மனிதனுக்குத் தேவை நம்பிக்கை. இன்னும் மூன்று மாதத்தில் உன் தலையெழுத்து மாறப்போகிறது என்று நம்பிக்கை விதைக்கும் ஜோதிடனை கொண்டாடுகிறான். அவன் அதே விஷயத்தை வெவ்வேறு வகையில் 30 ஆண்டுகளாக சொல்லிக்கொண்டே இருந்தாலும், அவனும் நம்பிக்கொண்டே இருக்கிறான். எளிதாக நமது வாழ்க்கை மாறப்போகிறது என்ற பேராசையே ஜோதிட வெற்றியின் அடிப்படை. மேலும் தன்னுடைய முயற்சியில் எந்த தவறும் இல்லை, ஜாதகமே தன்னை முன்னேற விடாமல் தடுக்கிறது என்கிற ஆறுதலும் அவனுக்குப் போதை தருகிறது.
உழைக்காமல் மாறப்போகும் பேராசைக்கு அடிமைப்படும் ஜனங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருப்பதால், ஜோதிடன் காட்டில் அடைமழை பொழிகிறது. பெயரையோ, எழுத்தையோ மாற்றினால் கோடீஸ்வரனாகலாம் என்று சொல்லும் ஜோதிடன், ஏன் இன்னமும் யாசிப்பவனாக இருக்கிறான் என்ற சந்தேகம் கூட மனிதருக்கு வருவதில்லை. இந்த விஷயத்தில் ஜோதிடர் மீது எந்தத் தவறும் கிடையாது. ஏமாற்றுபவரை விட ஏமாறுபவரே குற்றவாளி.