ஏ.டி.சி.முருகேசன், ஓம் பிசியோதெரபி சென்டர், விருதுநகர்.
எலும்பு வலிக்கு மட்டுமே பிசியோதெரபி என்று பலரும் நினைக்கிறார்கள். எத்தனை வகையினில் பிசியோதெரபி மருத்துவம் மக்களுக்குப் பயன்படுகிறது என்று தெரிந்துகொள்வோம்.

இன்றைய மருத்துவத்தில் தவிர்க்கவே முடியாத ஒன்றாக `இயன்முறை மருத்துவம்’ எனப்படும் பிசியோதெரபி (Physiotherapy) மாறிவிட்டது. முதுகுவலிக்கு ஒரு வாரம் பிசியோதெரபி எடுத்துக்கிட்டோம். இப்போ பரவாயில்லை என்று பலரும் பேசும் அளவுக்கு பிசியோதெரபி மையங்கள் உருவாகிவிட்டன. அதனால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமலே நேரடியாக் பிசியோதெரபி மையங்களுக்கு பலரும் செல்லும் அளவுக்கு இந்த மருத்துவம் வளர்ந்துவிட்டது.
தனிச்சிறப்பு
ஊசி, மருந்து, மாத்திரை இல்லாமல் வலியை நீக்கும் சிகிச்சை என்பதாலும் பக்கவிளைவுகள் இல்லை என்பதாலும் மக்கள் இந்த சிகிச்சையை விருப்பமாகத் தேர்வு செய்கிறார்கள். பொதுவாக எலும்பு மூட்டு, தசைகளின் இயக்கம் சிக்கலாகும்போது அவற்றைச் சரிசெய்யவும், பராமரிக்கவும், மேம்படுத்தவும் பிசியோதெரபி உதவுகிறது. உடற்பயிற்சி, தெரபியூடிக் மசாஜ் (Therapeutic Massage), வெப்ப சிகிச்சை, மின் சிகிச்சை ஆகியவற்றின் மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படுகிறது.
உடலில் எலும்பு முறிவு ஏற்பட்டால், எலும்பு முறிவு மருத்துவர் (Orthopedician), அறுவை சிகிச்சை அல்லது மாவுக்கட்டு போட பரிந்துரைப்பார். அதன் பிறகுதான் பிசியோதெரபிஸ்ட்டின் பணி தொடங்குகிறது. மாவுக்கட்டைப் பிரித்த பிறகு, தசைகளில் ஏற்படும் பிடிப்புகளைச் சரிசெய்யவும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு தசைகள் இழந்த இயக்கம் மற்றும் வலிமையைத் திரும்பப் பெறவும் பிசியோதெரபி துணைபுரிகிறது.
வயோதிகம் மற்றும் அதிக இயக்கம் காரணமாக எலும்பு, மூட்டுகள் தேய்மானம் அடையும். அதனால் ஏற்படும் வலியைப் போக்கவும், தேய்மானத்தைச் சரிசெய்யவும் பிசியோதெரபி அவசியம். இந்தச் சிகிச்சையைத் தொடர்ந்து அளித்தால்தான் பாதிக்கப்பட்ட மூட்டுகளை மீண்டும் செயல்படவைக்க முடியும்.
உடலில் தசைப் பிடிப்பு, சுளுக்கு மற்றும் தசைநார் பாதிப்புகளைச் சரிசெய்யவும், வலியைக் குறைக்கவும் பிசியோதெரபியில் ஐஎஃப்டி சிகிச்சை (Ultrasound Therapy and Interferential Therapy (IFT)) அளிக்கப்படுகிறது. இந்த முறையில் சிகிச்சையளிப்பதன் மூலம் பாதிக்கப்பட்ட தசை மற்றும் தசைநார்களை மீண்டும் அதே வலிமையுடன் செயல்பட வைக்கலாம்.
பிசியோதெரபி சிகிச்சை பல்வேறு வகையில் வழங்கப்படுகிறது.
நரம்பியல் பிசியோதெரபி (Neuro Physiotherapy) :
நரம்பியல் பிசியோதெரபி மூலம் பிறவியில் இருக்கும் நரம்பியல் பிரச்னைகள், விபத்தால் ஏற்படும் நரம்பியல் பிரச்னைகள், மூப்பு காரணமாக ஏற்படும் நரம்பியல் பிரச்னைகள் ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதோடு, நரம்பு சார்ந்து ஏற்படும் நோய்களான மூளை முடக்குவாதம், தசைநார் தேய்வு (Muscular Dystrophy), பக்கவாதம் போன்றவைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படும்.
விபத்து மற்றும் காசநோயால் தண்டுவடம் கடுமையாக பாதிக்கப்படும்போது, இரண்டு கால்களும் செயலிழந்துவிடும்; உடலிலிருக்கும் குறிப்பிட்ட சில நரம்புகள் பாதிக்கப்படும் அபாயமும் இருக்கிறது. அப்படி பாதிக்கப்படும் சூழலில் முகப் பக்கவாதம் ஏற்படும். மூப்படைவதால் நரம்புத் தளர்ச்சி, நரம்புத் தேய்மானம் போன்றவை ஏற்பட்டு, `டிமென்ஷியா (Dementia) எனப்படும் ஞாபகமறதி, அல்சீமர் (Alzheimer’s Disease) மற்றும் பார்கின்சன் நோய் (Parkinson’s Disease) போன்றவை ஏற்படும்.
இந்த நிலையில் சமநிலைப் பயிற்சி (Balance Training), நடைத்திறன் பயிற்சி (Gait Training), ஒருங்கிணைப்புப் பயிற்சி (Co-Ordination Training) மூலம் நோய் பாதிப்பின் நிலையைப் பொறுத்து உடற்பயிற்சிகள் மூலமாகவும், சாதனங்கள் உதவியுடனும் தொடர் சிகிச்சையளிக்கப்படும். வலுவிழந்த தசைகளையும் நரம்புகளையும் மீண்டும் வலுவடையவைப்பது, அவற்றின் செயல்திறனை அதிகரிக்கச் செய்வது ஆகியவைதான் பிசியோதெரபியின் முக்கிய வேலை.
இதயம் மற்றும் சுவாச பிசியோதெரபி (Cardio Respiratory Physiotherapy) :
கார்டியோ ரெஸ்பிரேட்டரி துறையில் பிசியோதெரபியின் தேவை அதிகமாக இருக்கிறது. ஆஸ்துமா, எம்பைசீமா (Emphysema) போன்ற நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் மூச்சுவிட சிரமப்படுவார்கள். அவர்களுக்கு இருமல் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் அவர்களுக்கு மூச்சுப்பயிற்சி, உடற்பயிற்சிகளைப் பயிற்றுவித்து, அவர்களது பலவீனமான தோள்பட்டை மற்றும் தசைகளை வலுப்படுத்தி, அறுவை சிகிச்சை செய்யாமலேயே மூச்சுவிடும் திறனை மேம்படுத்துவார்கள்
இதயம் மற்றும் மார்புப் பகுதியில் பெரிய அளவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது இதயம், நுரையீரலின் செயல்திறனை மேம்படுத்துவதில் பிசியோதெரபியின் பங்கு மகத்தானது. அறுவை சிகிச்சை முடிந்ததும், மார்புப் பகுதியில் சளி கட்டக் கூடாது. இதய அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவருடன் இணைந்து பிசியோதெரபி மருத்துவர் செயல்பட்டு மார்புச்சளியைத் தொடர்ந்து வெளியேற்றுவார். அறுவை சிகிச்சை முடிந்ததும், நடை பழக்கவும் (Gait
Training), பலவீனமான தசைகளை வலுவூட்டவும் பயிற்சியளிப்பார்.
குழந்தைகளுக்கான பிசியோதெரபி (Pediatrics Physiotherapy) ;
சில குழந்தைகளுக்குப் பிறவியிலேயே மூளை முடக்குவாதம் ஏற்படலாம். இதனால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு இயல்பான மனப் பக்குவமும் மூளை வளர்ச்சியும் இருக்காது. அவர்களின் உடல் தசைகள் பலவீனமடைந்து காணப்படும். இத்தகைய குழந்தைகளுக்கு `நியூரோ டெவலப்மென்ட் தெரபி’ (Nuero Development Therapy), `மோட்டார் ரீலேர்னிங் புரோகிராம் மற்றும் போபாத் டெக்னிக்’ (Motor Relearning Program and Bobath Technique) போன்ற பயிற்சிகளை அளித்தால், அவர்களுடைய பலவீனமான தசைகள் வலுப்படும். இந்தப் பயிற்சிகளின் மூலம் அவர்களை நிற்க, நடக்கவைக்க முடியும்.
குழந்தைகள் விபத்துக்குள்ளாகும்போது அவர்களின் உடல் தசைகளும் எலும்புகளும் கடுமையாக பாதிக்கப்படும். அதிலிருந்து அவர்கள் மீளவும், நோய் பாதிப்புகள் மற்றும் `ஹெமிப்லெஜிக் ஸ்ட்ரோக்’ (Hemiplegic Stroke) போன்ற பாதிப்புகளிலிருந்து மீளவும் பிசியோதெரபி கைகொடுக்கும். வளரும் வயதில் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து குழந்தைகளின் வாழ்க்கைத்திறனை மேம்படுத்த பிசியோதெரபி உதவும்.
மாறிவிட்ட வாழ்க்கைமுறை, சிறு வயதில் ஓடியாடி விளையாடாமல் ஒரே இடத்தில் இருப்பது போன்றவற்றால் குழந்தைகளுக்கு அதிகளவில் `ஜுவைனைல் டயாபடிஸ்’ (Juvenile Diabetes), `ஜுவைனைல் ஒபிசிட்டி’ (Juvenile Obesity) போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த பாதிப்புகள் ஏற்படாமலிருக்க வேண்டுமென்றால், குழந்தைகள் `ஜங்க் ஃபுட்ஸ்’ (Junk Foods) அதிகம் உண்பதைத் தவிர்த்துவிட்டு, சத்தான காய்கறிகளை உண்ண வேண்டும். அதேபோல் செல்போன்களில் நேரத்தைச் செலவிடுவதற்கு பதில், ஓடியாடி விளையாட வேண்டும்.
ஸ்போர்ட்ஸ் பிசியோதெரபி (Sports physiotherapy) ;
விளையாட்டு வீரர்களுக்குத் தசை மற்றும் தசைநார்க் காயங்கள் ஏற்பட அதிகளவு வாய்ப்பிருக்கிறது. அண்மைக்காலமாக, கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவோருக்கு ஏற்படும் பிரச்னைகளைக் களைய, `ஆன் ஃபீல்டு’, `ஆஃப் ஃபீல்டு’ என இரண்டுவிதமான பிசியோதெரபிகள் இருக்கின்றன.
விளையாட்டு வீரர்களுக்கு மைதானத்தில் காயம் ஏற்படும்போது உடனடியாக முதலுதவியளித்து, அவர்களைத் தயார்படுத்தி, விளையாட வைப்பது `ஆன் ஃபீல்டு ட்ரீட்மென்ட்.’ மைதானத்தில் காயம்பட்ட வீரருக்குச் சிகிச்சையளித்து, அந்தக் காயத்தை முழுமையாக ஆறச்செய்து, இழந்த தசை மற்றும் தசைநார்களின் வலிமையை மீண்டும் பெறவைப்பது `ஆஃப் ஃபீல்டு ட்ரீட்மென்ட்.’
விளையாட்டு வீரர்கள் தகுந்த பிசியோதெரபிஸ்ட்டின் துணையுடன் `வார்ம் அப்’ (Warm Up) மற்றும் `கூல் டவுண்’ (Cool Down) பயிற்சிகளைச் செய்வார்கள். ஆனால், பொழுதுபோக்குக்காக விளையாடுபவர்கள் அப்படிச் செய்வதில்லை. அதனால் திடீரென்று கடினமான விளையாட்டுகளை விளையாடும்போது, கால் தசைநார்கள் பாதிக்கப்படலாம். அவை குணமாக நீண்ட நாள்கள் ஆகும். எனவே, அவர்கள் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்கவேண்டியது அவசியம்.
மகப்பேறியல் பிசியோதெரபி (Obstetrics and Gynaecology Physiotherapy) ;
பிரசவத்துக்கு முன்னரும், பிரசவத்துக்குப் பின்னரும் கடைப்பிடிக்கவேண்டிய இந்தப் பயிற்சிகள் பிசியோதெரபிஸ்ட்டால் சொல்லித் தரப்படும். கருவுற்ற பெண், சுகப்பிரசவம் காண எந்தெந்தப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும், எப்படிப்பட்ட வாழ்க்கைமுறையை மேற்கொள்ள வேண்டும் போன்ற வழிமுறைகளைப் பயிற்றுவிப்பது `ப்ரீநேட்டல் கேர்’ (Prenatal Care) என்னும் பிசியோதெரபி. பிரசவத்துக்குப் பிறகு இடுப்புப் பகுதியில் தசைகள் தளர்ந்துவிடும். சிலருக்கு முதுகுவலி ஏற்படும். தளர்ந்த தசைகளை இயல்புநிலைக்கு மாற்றி, வலியைப் போக்கும் உடற்பயிற்சிகள், உடல் எடையைக் கட்டுக்குள்வைத்திருப்பது, தாய்ப்பால் கொடுக்கும் முறை என பிரசவத்துக்குப் பிறகு செய்யவேண்டிய பயிற்சிகளை அளிப்பது `போஸ்ட்நேட்டல் கேர்’ (Postnatal Care) சிகிச்சை.
பெண்கள் தங்களது வயிற்றுப் பகுதித் தசைகள் (Abdominal Muscles) மற்றும் முதுகுத்தண்டுவட தசைகளை (Back Muscles) வலுவாக வைத்திருக்கவேண்டியது அவசியம். இது கருவுற்ற காலத்திலும், பிரசவத்துக்குப் பிறகும் அவர்களுக்குப் பேருதவியாக இருக்கும்.
கைகளுக்கான பிசியோதெரபி (Hand Physiotherapy)
இந்தத் துறை பற்றி பலருக்கும் தெரியாது. ஆனால், மிகவும் இன்றியமையாத துறை. தொழிற்சாலை விபத்துகளில் கைகள் நசுங்குவது, சாலை விபத்துகளில் கையில் கடுமையாகக் காயம் ஏற்படுவது போன்ற சூழலில் தொழில்முறை மருத்துவர் அல்லது அறுவை சிகிச்சை நிபுணர் தகுந்து சிகிச்சையளித்து கட்டுப் போடுவார். பிறகு பிசியோதெரபிஸ்ட் அளிக்கும் தொடர் பயிற்சிகள் மற்றும் சிகிச்சைகள்தாம் அந்தத் தசை மற்றும் நரம்புகளை மீண்டும் வலிமையாக்கி, அடிபட்ட கையை மீண்டும் பழையபடி செயல்படவைக்கும்.
தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் `PPE’ (Personal Protective Equipment) எனப்படும் தற்காப்புச் சாதனங்களுடன் பணிபுரிய வேண்டும். சிலருக்கு கை விரல்களில் முடக்குவாதம் ஏற்பட்டிருக்கும். முடக்குவாதம் வந்தவர்களால் விரல்களை அசைக்க முடியாது. கல் உப்பை வெந்நீரில் போட்டு, கையை அதில் நனைத்து, பஞ்சு போன்ற பந்தை கைக்குள் வைத்து நன்றாக அமுக்க வேண்டும். தினமும் இதுபோல இரண்டு தடவை செய்தால், கை விரல்களின் அசைவுகள் மேம்படும்.
தொடர்புக்கு : 9994944228