ஞானகுரு தரிசனம்
வேப்ப மரத்தடியில் அமர்ந்திருந்த ஞானகுருவைத் தேடிவந்தார் மகேந்திரன். ‘’நிறைய பேசுகிறேன் என்று தோன்றுகிறது. எனவே, வாரம் ஒரு நாள் மெளனவிரதம் இருப்பதற்கு முடிவு எடுத்திருக்கிறேன்…’’ என்று ஆர்வத்துடன் சொன்னார்.
‘’கண்களால் நிறைய பார்க்கிறாய்… மூக்கினால் நிறைய நுகர்கிறாய்.. காதுகளால் நிறையக் கேட்கிறாய்… இந்த அவயங்களுக்கும் வாரம் ஒரு நாள் லீவு விடலாமே…’’ புன்னகையுடன் கேட்டார் ஞானகுரு.
‘’மெளன விரதத்தை கிண்டால் செய்யாதீர்கள். பேசாமல் அமைதியாக மெளனவிரதம் இருப்பது எத்தனை உசத்தி என்று தெரியுமா..? காஞ்சி மகான், ரமணர் போன்ற எத்தனையோ ஞானிகள் மெளனவிரதம் கடைபிடித்து வழி காட்டியுள்ளனர்…’’ என்று சீறினார் மகேந்திரன்.
‘’அடேங்கப்பா… மெளனவிரதம் பற்றி நிறைய தெரிந்து வைத்திருக்கிறாய் என்று நினைக்கிறேன்… சொல் கேட்கலாம்..’’ என்று கேட்டதும், பேசத் தொடங்கினார் மகேந்திரன்.
‘’ஐம்புலன்களையும் அடக்கி ஆள்வதே மௌன விரதம். உடல் உறுப்புகளை எந்தவித செயல்பாடுகளிலும் ஈடுபடுத்தாமல் வைத்திருப்பது இந்திரிய மௌனம், உடலைச் சிறிதுகூட அசைக்காமல் இறைவன் நினைப்பில் மட்டுமே லயித்திருப்பது காஷ்ட மௌனம். ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது நம்மை மீறி நாம் இருப்பது சுழித்தி மௌனம். எந்தவித சிந்தனைகளும் இல்லாமல் முழுமையாக இறை நினைப்பில் ஆழ்ந்திருப்பது மகா மௌனம். இரண்டு நாள்களாவது தொடர்ந்து மௌன விரதம் இருந்தால்தான் அதன் முழுமையான பலன்கள் கிடைக்கும். ஆனால், இன்றைய நிலையில் அதற்கு வாய்ப்பு குறைவு என்பதால் ஒரு நாள் அல்லது பகல் நேரத்தில் மட்டும் மெளனவிரதம் இருக்கலாம்.
மெளனவிரதம் இருக்கும்போது அமைதியாக இருக்க வேண்டும். யாருடனும் சைகையில் பேசுதல், பேப்பரில் எழுதிக் காண்பித்தல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. அசைவ உணவுகள் தவிர்த்து உப்பு, காரம் இல்லாத உணவுகளை சாப்பிட வேண்டும். மோர், பால் மட்டும் அருந்தலாம்.
மௌன விரதம் இருப்பதால் உடல், உள்ளம் தூய்மையடையும். தேவையற்ற சிந்தனைகள் மறையும். குழப்பங்கள் மறைந்து, அறிவு கூர்மையாகும். கோபம், உணர்ச்சிவசப்படுதல் வெகுவாகக் குறையும். நமக்குள் இருக்கும் பேராற்றலை உணர்ந்துகொள்ள முடியும்…’’ என்று படபடவென பேசி நிறுத்தினார் மகேந்திரன்.
‘’இத்தனை நன்மை கிடைக்கிறது என்றால் எதற்காக வாரம் ஒரு நாள் மட்டும் மெளனவிரதம் இருக்க வேண்டும்… வாரத்தில் ஒரு நாள் மட்டும் பேசினால் போதுமே… எல்லோரும் அறிவாளியாகி, புத்தி கூர்மையாகி, வெற்றி அடைந்துவிடலாமே…’’ என்றார் ஞானகுரு.
’’நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்… மெளனவிரதம் அவசியம் இல்லை என்கிறீர்களா..?’’
‘’ம்… பேசும் கலை மனிதனின் அற்புதக் கண்டுபிடிப்பு. இதனை முறையாகப் பயன்படுத்த வேண்டுமே தவிர, மெளனம் என்ற பெயரில் வாயை மூடிக்கொள்வதால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. ஏனென்றால் நிறைய பேருக்கு பேசுவதே ஆனந்தம். பரஸ்பரம் பேசிக்கொள்ளும் நேரத்தில் பிரியமும் அன்பும் அதிகரிக்கிறது.
பறவைகள், மிருகங்கள் தேவைப்படும் நேரத்தில் மட்டுமே பேசுகின்றன. உணவுக்காக, ஆபத்தை அறிவிப்பதற்காக, இணையைக் கவர்வதற்காக என்று குறைவாகப் பேசுகின்றன.
மற்ற உயிரினங்களை ஒப்பிடும்போது மனிதன் மட்டுமே நிறைய நிறைய பேசுகிறான். கடந்த காலத்தைப் பற்றி பேசும்போதும், எதிர்காலத் திட்டம் பற்றி பேசும்போதும் அவனையும் அறியாமல் நிறையவே பொய் பேசுகிறான். அதிகம் பேசுவதால் அவனுடைய நேரம், சக்தி விரயமாவதுடன் அடுத்தவர்களையும் தொந்தரவு செய்கிறான்.
இயந்திரமும் மனிதனும் எப்போதும் சத்தம் போடக்கூடாது. இயந்திரத்தில் சத்தம் வருகிறது என்றால் ஏதோ பழுது என்று அர்த்தம். அப்படித்தான் மனிதன் சத்தம் போட்டு பேசுகிறான் என்றால், அவனிடம் ஏதோ பிரச்னை என்று அர்த்தம்.
உறவினர்கள் ஒன்றுகூடும் சமயங்களில் எல்லாம் யாரேனும் ஒருவர் ஏடாகூடமாகப் பேசுவதால், தேவையின்றி வாக்குவாதம் செய்வதாலே சண்டை, சச்சரவு ஏற்படுகிறது. ஆகவே, பெரும்பாலான நேரங்களில் மெளனமாக இருப்பதே நல்லது. மெளனத்தைவிட பேசுவது மகிழ்ச்சி தரும் என்றால் மட்டுமே பேச வேண்டும்.
அதேநேரம், மனைவி, குழந்தைகளிடம் பேசுவதற்கு விஷயமே இல்லை என்றாலும் நிறையவே பேச வேண்டும். கண்ணில் கண்டதை, கேட்டதை எல்லாம் பேச வேண்டும். அப்போதுதான் அன்பு பெருகும், மனதில் இருக்கும் சிக்கல், குறைகளை தைரியமாகப் பேசும் சூழல் உருவாகும். எனவே குடும்பஸ்தனாக இருக்கும் யாரும் மெளனவிரதம் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. குறிப்பாக முதியவர்களுக்கு பேசுவது ஆனந்தம் தரும். எனவே, நேரம் இருக்கும்போதெல்லாம் அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். அதனை கடைபிடிக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. அவர்களுக்குத் தேவை யாரேனும் பேசுவதைக் கேட்கிறார்கள் என்ற மகிழ்ச்சி மட்டுமே.
காஞ்சி பெரியவர், ரமணர் போன்றவர்களுக்கு மெளன விரதம் என்ற பந்தா தேவைப்பட்டது. மெளனவிரதம் இருக்கிறேன் என்ற பெயரில் கூட்டத்தை கூட்டிவைத்து பிரசாதம் கொடுப்பது, சைகை மொழியில் பேசுவது அவர்களுடைய பக்தர்களுக்கு கூடுதல் ஆனந்தம் கொடுக்கும். பக்தர்களை அடிமையாக்குவதற்கு இதுபோன்ற சில நாடகங்கள் ஆட வேண்டியது அவர்களுக்கு அவசியம். ஆன்மிகத்தை வியாபாரமாக்குவதற்கு இந்த நாடகங்கள் அவசியம்.
ஆனால், குடும்பஸ்தர்களுக்கு அப்படி எதுவும் அவசியம் இல்லை. பேசுவதை மட்டும் குறைத்துக்கொண்டால் போதும். குறிப்பாக மூன்றாவது நபர்களிடம் தேவையற்ற பேச்சுக்களை தொடரக்கூடாது. உயர் அதிகாரிகளிடம் ஒவ்வொரு வார்த்தை பேசுவதற்கு முன்னரும், யோசித்தே பேச வேண்டும். தினமும் தூக்கத்தின் போது கிடைக்கும் ஓய்வே வாய்க்கும் நாக்குக்கும் போதுமானது. எனவே, உனக்கு மெளன விரதம் என்ற நாடகம் வேண்டாம்… சும்மாயிரு…’’ என்று சிரித்தார் ஞானகுரு.
அந்த சிரிப்பில் மகேந்திரனும் கலந்துகொண்டார்.