ஓர் உலகம், ஒரே மக்கள், ஒரே மொழி என்பதுதான் மனிதகுலத்தின் எதிர்காலம்.
இதற்காக உலக மக்கள் முழுமையாக ஒன்றுபடுவதற்கு கலை, இலக்கியம், சினிமா, காதல், சுற்றுலா,
விளையாட்டு போன்றவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவற்றில் விளையாட்டு தனித்துவமானது.
குழந்தைகள் முதல் முதியோர்கள் வரையிலும் அத்தனை பேரையும் ஆனந்தத்தில் ஆழ்த்தக்கூடியது.
தங்கள் நாட்டு அணி, தனக்குப் பிடித்த வீரர் வெற்றிபெற வேண்டும் என்று எண்ணுவது மனிதர்களின்
இயல்பு. அதேநேரம், யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ, அவர்களே வெற்றிக்குத் தகுதியானவர்
என்பதை அங்கீகரிப்பதே நல்ல ரசிகர்களின் பண்பு.
விளையாட்டில் கிடைக்கும் தோல்விக்காக வருத்தப்படுவது, கோபப்படுவது,
சந்தேகப்படுவது போன்றவை குறுகிய மனப்பான்மையை மட்டுமே கொண்டுவரும். எனவே, விளையாட்டில்
வெற்றி பெறுவதைவிட பங்கேற்பதே மதிப்புக்குரியது என்று மாணவர்களுக்கு இளம் வயதிலே போதிக்கப்படுகிறது.
ஆனால், இப்போது விளையாட்டு அரசியலாக்கப்படுவதால் வெற்றி, தோல்வியானது தேசத்தின் பெருமையாகவும்
அவமானமாகவும் மதிப்பிடப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும், விளையாட்டை ஒரு போட்டியாக
பார்க்கவேண்டுமே தவிர ஒரு போர்க்களம் போன்று பார்க்கக்கூடாது என்பதுதான் ஞானகுருவின்
கொள்கை.
2023 ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய வீரர்களை
ஞானகுரு கை தட்டி பாராட்டிவிட்டு தொலைக்காட்சியை அணைத்தார். அப்போது இந்திய அணியின்
தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் சுணங்கிய முகத்துடன் வந்துசேர்ந்த மகேந்திரன், ‘’இப்படி
ஆகுமென்று கனவிலும் நினைக்கவில்லை… வெற்றி நிச்சயம் என்று நம்பிக்கையில் இடி விழுந்துவிட்டது.
நாடு முழுவதும் இந்தியர்கள் சோகத்தில் துடிக்கிறார்கள்…’’ என்று வருந்தினார்.
‘’ஜக்கியின் டிப்ஸ் மற்றும் நேரடி ஆசிர்வாதம் கிடைத்தும் இந்தியா
ஜெயிக்காதது வேதனைதான்…’’ என்று சிரிக்காமல் பேசினார் ஞானகுரு.
உடனே கோபத்துடன், ‘’இதில் உங்க குறுக்குப்புத்தியைக் காட்டாதீர்கள்.
கிரிக்கெட் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? எல்லாமே தெரியும் என்பது போல் காட்டிக்கொள்ளாதீர்கள்…’’
என்றார்.
‘’இதில் கோபப்படுவதற்கு என்ன இருக்கிறது. சிவபெருமானுக்கு ரொம்பவே
நெருக்கமானவர் என்று ஜக்கியே தன்னை பற்றி சொல்லிக்கொள்கிறார். சிவபெருமான் கேட்டுக்கொண்டதால்
காட்டை அழித்து வித்தியாசமான சிவபெருமான் உருவத்தை பிரதிஷ்டை செய்திருக்கிறார். சிவனுடன்
அவ்வப்போது பேசுகிறார். மிகப்பெரும் ஆசிரமம் அமைத்து பணக்காரர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும்
ஆலோசனைகள் வழங்கும் ஜக்கியை, வாழும் கடவுளாகவே அவர்கள் பார்க்கிறார்கள். அவரளவுக்கு
எனக்கு கிரிக்கெட் தெரியாமல் இருக்கலாம். ஆனால், உணவை விமர்சனம் செய்வதற்கு ருசிக்கும்
திறன் இருப்பதே போதும். அதுபோல் முடிந்துபோன போட்டியின் தோல்வியை ஆராய்வதற்கு ஒரு சாதாரண
ரசிகரின் கண்ணோட்டமே போதும். இந்த மேட்ச் தோற்றுப் போனதற்கு கோலியும் கே.எல்.ராகுலும்தான்
முக்கிய காரணம்…’’ என்றார் ஞானகுரு.
‘’ஓரளவுக்கு இந்தியாவின் மானத்தைக் காப்பாற்றியவர்களை போய் குற்றம்
சாட்டுகிறீர்களே… நீங்கள் ஜக்கி மீதும் மோடி மீதும் பழி போடாத வரையிலும் சந்தோஷம்தான்…’’
‘’சேச்சே… ஜக்கி என்ன செய்வார். அவர் சிவபெருமானிடம் சொல்லி இந்தியாவை
ஜெயிக்க வைப்பதற்கான எல்லா முயற்சிகளையும் எடுத்திருப்பார். அதேபோல் ஆஸ்திரேலியர்கள்
இயேசுவிடம் பிரார்த்தனை செய்திருப்பார்கள். இரண்டு சாமிகளுக்கும் நடந்த சண்டையில் இயேசு
ஜெயித்திருப்பார். தியானத்தில் அமர்ந்து முக்காலத்தையும் உணர்ந்துகொள்ளும் ஜக்கி எப்படியோ
இதை கவனிக்கத் தவறிவிட்டார். அதனால் அவர் மீது எந்த குற்றமும் இல்லை. அடேபோல் பிரதமர்
நரேந்திர மோடி ஒரு விளம்பரப் பிரியர் என்பது எல்லோரும் அறிந்த செய்திதான். புகைப்படம்
எடுக்கும் எல்லா இடங்களிலும் தான் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுபவர். அதனால்தான் சந்திரயான்,
கிரிக்கெட் இறுதிப் போட்டி போன்ற முக்கிய தருணங்களில் தன்னுடைய புகைப்படம் வெளிவர வேண்டும்
என்று ஆசைப்படுகிறார். ஆனால், அவர் கலந்துகொள்ளும் எல்லாமே தோல்வியில் முடிவதற்கு அவர்
என்ன செய்துவிட முடியும்..?’’
‘’எசகுபிசகாக பேச வேண்டாம், கோலி, ராகுல் மீதும் ஏன் பழி போடுகிறீர்கள்
என்று மட்டும் சொல்லுங்கள்…?’’
‘’இந்த போட்டியில் முதல் மூன்று விக்கெட்டுகள் சீக்கிரமே விழுந்துவிட்டன. கில், ஜெய்ஸ்வால், ரோகித் ஆகியோர் சீக்கிரமாக அவுட்
ஆகிவிட்டார்கள். ரோகித் மட்டும் அவரது பாணியில் அடித்துவிளையாடினார். இதையடுத்து கோலியும்,
கே.எல்.ராகுலும் விக்கெட் விழாமல் சிறப்பாக தடுப்பாட்டம் விளையாடினார்கள். சில ஓவர்கள்
வரையிலும் அவர்கள் தடுப்பாட்டம் ஆடியது சரியான செயலே. ஆனால், தொடர்ந்து அதே பாணியில்
ஆடியதுதான் ஆட்டத்தை வேறு திசைக்கு எடுத்துச்சென்றுவிட்டது. இருவரும் நிலைத்து நின்ற
பிறகாவது இருவரில் ஒருவர் வழக்கமான விளையாட்டை ஆடியிருக்க வேண்டும். அடித்து விளையாடத்
தொடங்கியிருந்தால் விக்கெட் விழுந்திருக்கலாம் என்றாலும் இதைவிட அதிக ரன்கள் வந்திருக்கும்.
அதேநேரம், அடுத்து வந்த பேட்ஸ்மேன்களுக்கு அடித்து விளையாடுவதற்கான தைரியம் கிடைத்திருக்கும்.
அந்த நம்பிக்கையையும் தைரியத்தையும்தான் கோலியும் ராகுலும் உடைத்துவிட்டனர். மைதானமும்
பந்து வீச்சும் பயங்கரமாக இருக்கிறது என்பதுபோல் விளையாடி அடுத்து வந்தவர்களுக்கும்
அச்சத்தை உண்டாக்கிவிட்டனர்..’’
‘’ஓ… அடித்து விளையாடியிருந்தால் இந்தியா ஜெயித்திருக்குமா..?’’
‘’வெற்றி பெற வேண்டும் என்ற இந்திய வீரர்களின் பதட்டமே அவர்களை
தோல்வியை நோக்கி இழுத்துச்சென்றது. கிரிக்கெட் என்பது ஒரு சாதாரண விளையாட்டு. இதனை
ஒரு நாட்டின் மானப்பிரச்னை அல்லது ரசிகர்களின் ஏமாற்றம் என்றெல்லாம் பார்க்கத் தேவையில்லை.
நாட்டின் பிரதமர் முன்பு தோல்வி அடைந்துவிடக் கூடாது என்ற நெருக்கடி இந்திய அணிக்கு
இருந்தது. அதனாலே அத்தனை பேரும் பதட்டமானார்கள். இதுவரை பத்து மேட்ச்சில் ஜெயித்து
கட்டி வைத்திருந்த நம்பிக்கை கோட்டை மூன்று விக்கெட் விழுந்ததுமே உடைந்துவிட்டது. ஆனால்,
இந்த அழுத்தம் எதுவுமே ஆஸ்திரேலிய அணியினருக்கு இல்லை. ஏற்கெனவே அவர்கள் இந்திய அணியிடம்
தோற்றுப் போயிருக்கிறார்கள். ஆகவே, தோல்வி என்றாலும் வெற்றி என்றாலும் அவர்களுக்கு
ஒன்றுதான். ஆகவே, அழுத்தமில்லாமல் களத்திற்கு வந்தார்கள். இந்தியா பதட்டத்துடன் ஆடுவதைக்
கண்டுகொண்டு, அந்த பலவீனத்தின் மீது தாக்குதல் தொடுத்து அடித்து நொறுக்கிவிட்டார்கள்.
அதனால்தான், ஆஸ்திரேலியாவுடன் மல்லுக்கட்ட முடியாமல் சுருண்டு விட்டார்கள்…’’
‘’இந்தியா போராடவே இல்லை என்கிறீர்களா..?’’
‘’ஆம், சிறந்த பேட்ஸ்மேனான சூர்யகுமார் பேட்டிங் செய்வதையே மறந்தவர்
போன்று மைதானத்தில் எப்படியெல்லாம் தடுமாறினார் என்பதை பார்த்திருப்பீர்கள். குறிப்பிட்ட
ஷாட் அடிப்பது தவறிய பிறகும், மீண்டும் மீண்டும் அதே ஷாட் அடிக்க முயற்சிக்கும் மனநிலை
ஒருவருக்கு வருகிறது என்றால், அத்தனை உச்சபட்ச குழப்பத்தில் இருந்தார் என்று அர்த்தம்.
வேறு மாதிரி பந்து அடிக்க முடியும் என்பதையே மறந்துவிட்டார். அப்படித்தான் ஒட்டுமொத்த
இந்திய அணியும் குழப்பத்தில் சிக்கி வெற்றியை பறிகொடுத்துவிட்டது…’’
’’ஆஸ்திரேலியா வெற்றிக்குத் தகுதியான அணி என்கிறீர்கள்..?’’
‘’நிச்சயமாக இல்லை. ஆஸ்திரேலிய அணியைவிட இந்திய அணியின் வீரர்களே
தனித்தனியே திறமையானவர்கள். ஆனால், ஆஸ்திரேலிய வீரர்கள் ஒட்டுமொத்த அணியாக திறமைசாலிகள்.
ஃபீல்டிங் மூலமே 25 ரன்கள் வரையிலும் தடுத்து நிறுத்தினார்கள். ஆனால், நம் அணியினரின்
கவனம் எல்லாமே கோப்பையின் மீது மட்டுமே இருந்தது. அதனால் தோல்வி அடைவதற்கு பயந்தார்கள்.
அது தேவையே இல்லை. வெற்றி போலவே தோல்வியும் ஒரு நல்ல சுவை. அதனையும் அவ்வப்போது முத்தமிட
வேண்டும். வெற்றியோ தோல்வியோ போராடுவதே முக்கியம் என்பதை நம் வீரர்கள் உணர வேண்டும்.
விளையாட்டில் தோற்றதற்கு அழுவதும் கண்ணீர் சிந்துவதும் இயலாமை.
காரியம் சாதிக்க முடியாதவர்களே, இப்படி அழுதாவது ரசிகர்களிடம் நல்ல பெயர் வாங்க விரும்புவார்கள்.
இது ரசிகர்களை ஏமாற்றும் மாயவலை. தங்கள் அணியின் தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாத ஒருவர்,
நல்ல விளையாட்டு வீரனாக இருக்க முடியாது. தாங்கள் எங்கே தோல்வி அடைந்தோம் என்பதை அறிந்தவர்,
அதனை திருத்திக்கொள்ள நினைப்பாரே தவிர, அழுது சரிக்கட்ட விரும்ப மாட்டார்.
வெற்றிக்குப் பிறகு இரண்டு அணியின் வீரர்களும் மிகவும் சகஜமாக
பழகி, பேசி அரங்கத்திலிருந்து வெளியேற வேண்டும். வெற்றி பெற்ற அணிக்கு இந்திய அணியின்
அத்தனை வீரர்களும் அன்போடு வாழ்த்து கூறியிருக்க வேண்டும். ரசிகர்களையும் வாழ்த்துகூறச்
செய்திருக்க வேண்டும். இதுதான் சரியான மனநிலை. இதனை வளர்த்துக்கொள்ளவில்லை என்றால்,
ஒவ்வொரு போட்டியிலும் அழுது கண்ணீர் சிந்திக்கொண்டே இருக்க வேண்டியதுதான். பாகிஸ்தானுடன்
விளையாடிய நேரத்தில் சிறப்பான அணுகுமுறையைக் காட்டினார்கள். அந்த நாட்டு வீரர்களுடன்
ஜாலியாக பழகியபடி தங்கள் திறமையைக் காட்டி ஜெயித்தார்கள். ஆனால், ஆஸ்திரேலியாவைக் கண்டு
பயந்துவிட்டார்கள். இந்த மனநிலை மாற வேண்டும்.
எனவே, நம் வீரர்களின் கவனம் ஆட்டத்தின் மீது மட்டுமே இருக்க வேண்டும்.
ஸ்டேடியத்தில் குவிந்திருக்கும் ரசிகர்கள் மற்றும் வி.ஐ.பி.கள் குறித்து ஒருபோதும்
கவலைப்பட அவசியம் இல்லை. அதேபோல் அரசியல்வாதிகளும் ஆன்மிகவாதிகளும் கிரிக்கெட்டில்
இருந்து விலகி நிற்பதே விளையாட்டுக்கு நல்லது. தோல்வியிலும் சிரிப்பதற்கான மனநிலையுடன்
வீரர்கள் இருந்தால் மட்டுமே, கோப்பை கைக்கு வரும்…’’ என்று சிரித்தார் ஞானகுரு.
அவரது சிரிப்பில் மகேந்திரனும் கலந்துகொண்டார்.