எத்தனை லட்டு இன்பம் தரும்..?

Image

டாப் டென் ரகசியங்கள்

லட்டு சாப்பிடுவது மகிழ்ச்சி தரும் அனுபவம் என்பதில் சந்தேகமே இல்லை. அதற்காக, லட்டு உற்பத்திக் கூடத்திற்குள் உட்காரவைத்து, மூன்று வேளையும் உணவுக்குப் பதிலாக லட்டு சாப்பிடலாம் என்று சலுகை காட்டினால்… அது நிச்சயம் மகிழ்ச்சி தராது. இன்னும் சொல்லப் போனால், அது ஒரு தண்டனை.

அப்படித்தான், கோடி கோடியாக பணம், மிகப்பெரிய பங்களா, மிக உயரிய பதவி, நல்ல ஆரோக்கியம் போன்ற எதுவுமே நிரந்தர மகிழ்ச்சி தருவதில்லை. ஏனென்றால், மகிழ்ச்சி என்பது நம் எண்ணத்தில் இருக்கிறது.

எண்ணத்தில் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் சூத்திரம் அறிந்துகொண்டால், எப்படிப்பட்ட சூழலிலும் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும். எனவே, மனசுக்குள் மகிழ்ச்சியை கொண்டுவருவதற்கு சிம்பிள் ஃபார்முலா பத்தே பத்து மட்டும் இங்கே…

  1. பார்வையை மாற்றுங்கள்

எங்கேனும் அவசரமாக கார் அல்லது டூவீலரில் கிளம்பிச்செல்லும் நேரத்தில், ரோட்டில் மோசமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது பலருக்கும் எரிச்சல், ஆத்திரத்தை உருவாக்குகிறது. இந்த சூழ்நிலையில் நீங்கள் தனிநபராக சட்டென்று அந்த சூழலை மாற்றிவிட முடியாது என்பதே உண்மை. எனவே காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் அந்த சூழலை நினைத்து டென்ஷன் ஆவதைவிட, அந்த நேரங்களில் கண்ணில் படும் சில நல்ல விஷயங்களை ரசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். சாலையில் பூத்துநிற்கும் மரங்கள், தலைக்கு மேல் பறந்து செல்லும் பறவைகள், கடந்துசெல்லும் பயணிகள், தூரத்தில் கேட்கும் பாடல் என்று எதையேனும் ரசிப்பதற்கு கிடைத்திருக்கும் நேரமாக எடுத்துக்கொள்ளுங்கள். அப்படி பார்வையை மாற்றியதும், உங்களுடைய எரிச்சல் சட்டென தணிவதை நீங்களே காண முடியும். இதுபோல் உங்களால் தீர்க்கமுடியாத சிக்கல், பிரச்னை நேரும் தருணங்களில் பார்வையை மாற்றி, குட்டிக்குட்டி விஷயங்களில் கிடைக்கும் மகிழ்ச்சியை அனுபவியுங்கள்.

  • காரணம் இல்லாமலும் பேசுங்கள்

ஒருசில நண்பர்கள், உறவினர்களுடன் பேசுவது உங்களுக்கு மகிழ்ச்சி தருவதாகவும், மனதுக்கு தெம்பு தருவதாகவும் இருக்கும். ஆனால், அவர்களுடன் எந்த காரணமும் இல்லாமல் எப்படி பேசுவது என்ற யோசனையால், தொடர்புகொள்ளாமல் இருப்பீர்கள். மகிழ்ச்சியான நண்பர்கள், ஊக்கமளிக்கும் நபர்கள், எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் நம்பிக்கையாளர்கள், பாசிடிவ் எனர்ஜி உள்ளவர்களுடன் பேசுவதற்கு தயங்கவேண்டிய அவசியமே இல்லை. அவர்களுக்கும் நேரம் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாகப் பேசுவார்கள் அல்லது வேறு ஒரு நேரத்தில் பேசச் சொல்வார்கள். ஆகவே, தயங்காமல் பேசுங்கள். இப்படிப்பட்ட நபர்களுடன் பேசும் சில நிமிடங்கள் உங்களுக்கு நீண்ட புத்துணர்வும் மகிழ்ச்சியும் தரும் என்றால், தவற விடாதீர்கள்.

  • தயக்கமின்றி பிடித்ததை செய்யுங்கள்

பழைய பாடல்கள் கேட்பது, ஆங்கில திரைப்படம் பார்ப்பது, கடற்கரையில் வேடிக்கை பார்ப்பது, புதுப்புது ஹோட்டல்களுக்குச் சென்று சாப்பிடுவது போன்று ஒவ்வொரு நபருக்கும் மனதுக்குப் பிடித்த சில விஷயங்கள் இருக்கும். பிறருக்காக இதனை ஒருபோதும் விட்டுத்தர வேண்டிய அவசியம் இல்லவே இல்லை. உங்களுக்குப் பிடித்தமானவற்றை அனுபவிக்க தினமும் கொஞ்ச நேரமாவது ஒதுக்கிக்கொள்ளுங்கள். பொருளாதார சூழல், நேரமின்மை போன்ற காரணங்களைத் தூக்கிப் போட்டு, மனதுக்குப் பிடித்ததை மறக்காமல் செய்யுங்கள்.

  • புதியன கற்றுக்கொள்ளுங்கள்

ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு, புதிய விஷயங்கள் கற்றுக்கொள்வதற்கு பலரும் ஆர்வம் காட்டுவதில்லை. இனி, நமது வாழ்வுக்கு எதுவும் பயன்படாது என்ற எண்ணத்தில் இருப்பார்கள். வாழ்க்கைக்கு எந்த நேரத்தில் எது பயன்படும் என்று யாரும் சொல்லவே முடியாது. எனவே, ஏதேனும் புதிதாக அறிந்துகொள்வதிலும், கூடுதலாக அறிவு பெறுவதிலும் ஆர்வமாக இருங்கள். சூடான் நாட்டில் உள் நாட்டுக் கலவரம் என்று ஒரு செய்தி படிக்க நேர்ந்தால், அந்த நாடு எங்கே இருக்கிறது, அந்த நாட்டு அரசியல் வரலாறு என்ன, மக்களின் பிரச்னைகள் என்னவென்று ஆழ்ந்து அறிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். இப்படி, ஒவ்வொரு விஷயத்திலும் ஆழம் வரையிலும் சென்று தேடத் தொடங்கினால், வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமாக மாறிவிடும். கற்பதற்கு ஆயிரக்கணக்கான விஷயங்கள் இருக்கின்றன என்பதால், தினமும் புதிது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கலாம். நாம் கூடுதலாக அறிந்துகொள்ளும் ஒவ்வொரு விஷயமும் மகிழ்ச்சி தரும், தேவைப்படும் நபர்களுக்கு இவற்றை பகிர்வது கூடுதல் மகிழ்வு தரும். 

  • நிகழ் காலத்தில் வாழுங்கள்

அந்த காலத்தில் நாங்க என்ன செய்வோம் தெரியுமா என்று கண்ணில் தென்படும் நபர்களிடம் எல்லாம், கடந்த கால விஷயங்களை பேசுவதற்கு முயற்சி செய்யாதீர்கள். யாருக்கும் பழைய தகவல்களைக் கேட்பதற்கு தேவையும் அவசியமும் இல்லை என்பதை புரிந்துகொண்டு நிகழ்காலத்தில் வாழுங்கள். கடந்த காலத்தில் நீங்கள் செய்தது ஒரு சாதனையாக இருந்தாலும், அதை எவரேனும் கேட்டால் மட்டும் சொல்லுங்கள். கடந்த கால சோகங்கள், வேதனைகளை உணர்ந்துகொள்ளும் பக்குவம் இன்றைய மனிதர்களுக்கு இருக்காது. எனவே, வீண முயற்சி செய்யாமல், இன்றைய தினத்தில் வாழுங்கள். இன்றைய பிரச்னைகளைப் பற்றி பேசுங்கள். எந்த பிரச்னையாக இருந்தாலும், அதற்கு ஒரு நல்ல தீர்வு இருக்கும் என்பதிலும் உறுதியாகவும் நம்பிக்கையாகவும் இருங்கள். எதிர்காலம் குறித்த அச்சமும் வேண்டாம், கடந்த காலம் குறித்த கவலையும் வேண்டாம். இன்றைய நாளை அனுபவித்து வாழுங்கள்.

  • வாய்விட்டு சிரியுங்கள்

அடுத்த நொடி, அடுத்த நிமிடம், அடுத்த நாள் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. இன்னும் எத்தனை நாட்கள் உயிருடன் இருப்போம் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் கிடையாது. இந்த பிரபஞ்சத்தில் மனித வாழ்க்கை என்பது மிகமிகக் குறுகியது. எனவே, கிடைத்திருக்கும் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதில் உறுதியாக இருங்கள். எப்போதும் எல்லா விஷயங்களையும் பார்த்து சிரிப்பதற்கு கற்றுக்கொள்ளுங்கள். காரணம் இல்லாமலும் புன்னகையுங்கள். நிறைய நகைச்சுவை சினிமா பாருங்கள். நல்ல நகைச்சுவையை பிறருடன் பகிர்ந்துகொள்ளுங்கள். சிரிப்பு என்பது ஒரு மாபெரும் மருந்து. அது உடல் நலனுக்கும் மனநலனுக்கும் நல்லது என்பதால், உங்களைத் தேடி வரும் அத்தனை பேருக்கும் சிரிப்பை அள்ளிக்கொடுங்கள். கசப்புகளை சந்திக்க நேர்ந்தாலும், அதை புன்னகையுடன் ஏற்றுக்கொள்ளுங்கள்

  • யாரையும் எடை போடாதீர்கள்

ஒவ்வொரு மனிதருக்கும் தனித்தன்மை உண்டு. எனவே, ஒருவர் இப்படித்தான் இருப்பார், இப்படித்தான் நடந்துகொள்வார் என்று யாரையும் எடை போடாதீர்கள். அவர்கள் எப்படி இருக்கிறார்களோ, அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். யாரேனும் தவறாகப் பேசினாலும், சீண்டினாலும், அவமானம் செய்தாலும் அதனை பெரிதுபடுத்தாதீர்கள். எல்லோரையும் மன்னிக்கவும் மறக்கவும் கற்றுக்கொள்ளுங்கள். பிறர் செயலைப் பார்த்து கோபப்படுவது, நமக்கு நாமே செய்துகொள்ளும் தீமை. பிறர் கூறும் சொற்கள் நம் வாழ்க்கையின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு அனுமதிக்காதீர்கள்.

  • எல்லோரையும் காதல் செய்யுங்கள்

மனதுக்குப் பிடித்த நபரிடம் மட்டும் அன்பு செய்வது குறுகிய மனப்பான்மை. நமது அன்பு விரிவடைய வேண்டும். நம் உடல், நம் குடும்பம், நம் உறவினர்கள், நம் நண்பர்கள், நம் தெரு மக்கள், நம் ஊர் மக்கள், நம் நாட்டு மக்கள், உலக மக்கள், பிற உயிரினங்கள், பறவைகள், பிரபஞ்சம் என்று அன்பு விரிந்துகொண்டே செல்லட்டும். எல்லா உயிருக்கும் பொதுவாகவே மழை பொழிகிறது, பொதுவாகவே வெயில் அடிக்கிறது. அதுபோல் எந்த பாரபட்சமும் காட்டாமல் எல்லோரிடமும் அன்பு செய்யுங்கள். அன்பு மட்டுமே மனதில் மகிழ்ச்சியை எளிதில் மலர வைக்கும். நீங்கள் அன்பு செய்வது மட்டும் போதும், அதற்கு யாரிடமிருந்தும் பிரதிபலன், அங்கீகாரம் எதிர்பாராதீர்கள். எந்த பலனும் எதிர்பாராமல் காதல் செய்வதே உண்மையான அன்பு.

  • கடவுள் நம்பிக்கை

தினமும் பூஜை செய்வது, தியானம் செய்வது, மந்திரம் சொல்வது, புண்ணிய நதிகளில் நீராடுவது, நிறைய கோயில்களுக்குச் செல்வது பலருக்கும் மகிழ்ச்சியும் திருப்தியும் தருகிறது. மனதுக்கு மகிழ்ச்சி தருகிறது என்றால், இவற்றை செய்வதில் ஒரு தவறும் இல்லை. ஆனால், பூஜை செய்வதால், பக்தி செய்வதால் நமது எதிர்காலத்துக்கு நல்லது என்ற எதிர்பார்ப்பில் எதுவும் செய்யாதீர்கள். எந்த கடவுளும் உங்களிடம் பூஜை செய்யுங்கள் என்று கேட்க மாட்டார். வணங்காதவர்களை தண்டிப்பதும் இல்லை. ஆகவே, ஆன்மிகத்துக்காக பணம், நேரத்தை அதிகம் செலவழிக்காதீர்கள். பொழுதை கழிப்பதற்கு ஆன்மிகம் உதவுகிறது என்றால் மட்டும், சந்தோஷமாகச் செய்யுங்கள்.

  1. ஆரோக்கியம் முக்கியம்

மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும் என்றால் அதற்கு ஆரோக்கியமான உடல் நலனும் மனநலனும் மிகவும் அவசியம். ஆகவே, உடல் மீது அன்பும் அக்கறையும் செலுத்துவதே ஒவ்வொரு மனிதருக்கும் முதல் கடமை. உடலே தெய்வம் என்பதை புரிந்துகொண்டு,  தினமும் உடலை பராமரிக்க வேண்டும். இந்த உடலில் சிறிய பிரச்னை வந்தாலும், அது பெரும் துன்பம் தரும் என்பதால், இதனை பாதுகாப்பதில் அக்கறை செலுத்துங்கள். அப்போதுதான், இன்பத்தை அள்ளித்தரும் வள்ளலாக உடல் செயல்படும்.

இந்த பத்து விஷயங்களையும் கற்றுக்கொண்டால் போதும், எப்படிப்பட்ட சூழலிலும் உங்களால் ஆனந்தத்தை அனுபவிக்க முடியும்.

Leave a Comment