கவித்துவம்
சின்னச் சின்ன வார்த்தைகளில் உலகத்தையே சுருக்கி வைக்கும் அற்புதமே கவிதை. எங்கோ எவரோ எழுதிய கவிதை யார் யாருடைய நெஞ்சத்தை எல்லாம் வருடிக் கொடுக்கும், அழவைக்கும். அப்படிப்பட்ட சில குட்டிக் கவிதைகள்
ஒரே முகம்
வெள்ளை பேப்பருக்கு
முன்பக்கம் பின்பக்கம்
என்று கிடையாது.
எதை முதலில் பார்க்கிறோமோ
அதுவே அதன் முன்பக்கம்.
- ஞானக்கூத்தன்
படிவம்
பெயர்,
ஆண்/பெண்,
பிறந்த தேதி,
மதம்,
சாதி,
தாழ்த்தப்பட்டவரா?
ஆம் எனில், யாரால்? எப்போது?
- ராசி. பன்னீர்செல்வன்
மனிதநேயம்
பேருந்து வாசலில்
புரையோடிய அழுக்கு பெண்ணுக்கு
இரண்டு ரூபாய் நாணயமிட்டேன்,
தடியூன்றிய தள்ளாடிய
பெரியவர் கைநீட்டலுக்கு,
ஒரு ரூபாய் கொடுத்தேன்,
காத்திருப்பின் நீட்சியில்
“அண்ணா” என சிறுமி கையேந்திய போது
என்னிடம் கருணை தீர்ந்து,
ரூபாய் தாள்களே மிச்சமிருந்தன
- மகுடீஸ்வரன்