உங்களுக்காக அரை மணி நேரம்..!

Image

வாழ்க்கை வாழ்வதற்கே

மன அழுத்தம், ஸ்ட்ரெஸ், டென்ஷன் என்பது போன்ற வார்த்தைகள் இப்போது டீன் ஏஜ் பிள்ளைகள் தொடங்கி, முதியவர்கள் வரை அத்தனை பேரிடமும் சகஜமாகக் கேட்க முடிகிறது. ஏனென்றால், எல்லோரும் ஏதேனும் ஒரு விஷயத்தை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறோம். மாணவன் பரீட்சையை நோக்கி ஓடுகிறான். இளைஞன் வேலையை நோக்கி ஓடுகிறான். குடும்பத் தலைவி வீட்டு உறுப்பினர்களின் நன்மைக்காக ஓடுகிறாள். காலில் சக்கரம் கட்டாத குறையாக எல்லோரும் சுற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.

எனவே, உலகமே எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக மாறியிருக்கிறது, மன அழுத்தம். எல்லா வயதினருக்கும் மன அழுத்தம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக தனிமை இருக்கிறது. ஆயிரம் பேர் அருகில் இருந்தாலும், தன்னிடம் மனம் விட்டுப் பேசுவதற்கு அல்லது சொல்வதை பொறுமையாக கேட்பதற்கு ஆள் இல்லை என்று வருந்துகிறார்கள். கூட்டமாக உள்ள கோயிலுக்குப் போனாலும் தனிமையை உணர்வார்கள்.

தொடர் தோல்விகள் சிலருக்கு மன அழுத்தத்தைக் கொண்டுவருகிறது. என்ன செயல் செய்தாலும், அது தவறாக முடிவதுண்டு. எண்ணெய் பாத்திரத்தை மிகவும் பத்திரமாக கொண்டுபோக வேண்டும் என்று நினைக்கும்போதே, அது கை நழுவி விழுந்துவிடும். இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடப்பது பலருக்கு மன அழுத்தம் தருகிறது. காய்ச்சல், தலைவலி, சுளுக்கு போன்ற பிரச்னைகள் அடிக்கடி வருவதும் ஒரு வகையில் மன அழுத்தமே

அதேபோல், நெருங்கிய ஒருவரது மரணம், பிரிவு, காதல் தோல்வி போன்றவை மன அழுத்தம் தருகிறது. இதுபோன்ற தருணங்களில் பலரும் செய்யும் தவறு, தனிமையை நாடுவதுதான். தனித்திருந்தால், இந்த பிரச்னை சரியாகிவிடும் என்று நம்புகிறார்கள்.

தனிமை ஒரு நல்ல மருந்து என்றாலும், அதனை சரியாக பயன்படுத்த பலருக்கும் தெரிவதில்லை. எனவே, மன அழுத்தத்திற்கு ஆளானதாக உணரும்போது, உடனே உங்கள் ஆதரவுக்கு ஆள் தேடுங்கள். அது, பெற்றோராக, உடன் பிறந்தவர்களாக, தோழமையாக இருக்கலாம். நீங்கள் யார் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்களோ, அவர்களிடம் உங்கள் மனதில் இருக்கும் அத்தனை கவலை, துயரம், துன்பங்களை கொட்டித் தீர்த்துவிடுங்கள். இனிமேல், அந்த கவலைகளை எல்லாம் அவர்கள் தீர்த்துவிடுவார்கள் என்று நம்பிக்கை வையுங்கள்… அதுவே உங்களை மன அழுத்தத்தில் இருந்து வெளியே கொண்டுவந்து விடும்.

மன அழுத்தத்தில் இருந்து வெளியே வருவதற்கு ஆசை இருந்தாலும், அதனை பிறரிடம் பகிர்ந்துகொள்வதற்கு விருப்பம் இல்லையா..?

பரவாயில்லை. ஒரு பேப்பர் எடுத்து, உங்கள் மனதில் இருக்கும் அத்தனை கவலைகளையும் எழுதுங்கள். உங்களுக்கு என்னவெல்லாம் துன்பம் நிகழ்ந்தது என்று விரிவாக பட்டியல் போடுங்கள். அவற்றை எல்லாம் மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள். அந்த பேப்பரை சுக்குநூறாக கிழியுங்கள் அல்லது தீயில் போட்டு எரித்து, அதன் சாம்பலை காற்றில் வீசுங்கள்.

உங்கள் கவலைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் புது நபராக மாறுங்கள்.

ஒவ்வொரு மனிதரும் ரூபாய் நோட்டு போன்றவர்கள். புத்தம் புதிய நோட்டாக இருந்தால் மட்டுமே செல்லும் என்று அர்த்தம் அல்ல, கசங்கிய பழைய நோட்டாக இருந்தாலும், அழுக்கடைந்த நோட்டாக இருந்தாலும், அதன் மதிப்பு ஒருபோதும் குறைவது இல்லை. எனவே, மனதில் சேர்ந்துவிட்ட அழுக்கை வெளியே தள்ளிவிட்டு எழுந்து நில்லுங்கள்.

நீங்கள் செல்லாத நோட்டு அல்ல… உங்களுக்கு மற்றவர்களைப் போன்றே மதிப்பும் மரியாதையும் உண்டு என்பதை நம்புங்கள். மனதுக்குள் பிரச்னை இருந்தாலும், முகத்திற்கு சிரிப்பைக் கொண்டுவாருங்கள். உங்கள் சிரிப்பு மேலும் பலருக்கு புன்னகையை உருவாக்கும்.

மனதை ஆனந்தமாக வைத்திருக்க வேண்டும் என்றால், உடல் ஆரோக்கியமாக இருத்தல் வேண்டும். ஏனென்றால், சிலருக்கு ஹார்மோன் பாதிப்பு காரணமாகவும் மன அழுத்தம் உருவாகலாம். எனவே, சமச்சீரான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

வீட்டுவேலை, அலுவலக வேலை என்று எத்தனை வேலைகள் இருந்தாலும், உங்களுக்கே என்று அரை மணி நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். அந்த நேரத்தில் உங்களுக்கு விரும்பியதை செய்யுங்கள். பிடித்ததை சாப்பிடுதல், பாட்டுப் பாடுதல் நகைச்சுவை காட்சி பார்த்தல், நண்பர்களுடன் அரட்டை அடித்தல், வெளியே ஊர் சுற்றுதல் என்று அரை மணி நேரம் உங்களுக்காக வாழுங்கள். எத்தனை கவலை, வேலை  இருந்தாலும், இந்த அரை மணி நேரத்தை தள்ளிப் போடாதீர்கள்.

ஏனென்றால், இந்த அரை மணி நேரம் உங்களுக்கு உரியது. அந்த அரை மணி நேரத்தையும் ரசித்து மகிழுங்கள். இந்த அரை மணி நேரத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வாருங்கள். அதன் பிறகு, உங்களைக் கண்டாலே மன அழுத்தம் ஓடிப்போய் ஒளிவதை நீங்களே கண்டுபிடிப்பீர்கள்.

Leave a Comment