போதை ராஜ்ஜியம்
காலம் மாறிவிட்டது. ஊருக்கு வெளியே இருந்த சாராயக் கடைகள் எல்லாம் தெருவுக்குள் வந்துவிட்டன. பாருக்குள் குடித்தால் தப்பு இல்லை, வீட்டுக்குள் குடித்தால் தப்பு இல்லை, தண்ணியடித்துவிட்டு சண்டை போடாமல் இருந்தால் போதும் என்றெல்லாம் புதுப்புது நியதிகளை வகுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
மது குடிப்பதை தட்டிக்கேட்டால், கடவுளுக்கு சோமபானம் படைக்கிறோம், மனிதனுக்கு மட்டும் இதில் என்ன கட்டுப்பாடு என்று கேள்வி கேட்கிறார்கள். இது உண்மையா..?
கடவுள்களும், தேவர்களும் சோமபானம் குடிக்கிறார்கள், மனிதன் மட்டும் குடிக்கக்கூடாதா?
தன்னுடைய பலவீனங்களை எல்லாம் கடவுளுக்கும் புகுத்தியவன் மனிதன். அவன்தான் கடவுளும் தேவர்களும் குடிப்பதாக எழுதிவைத்தான். அவன்தான் கடவுளுக்கு இரண்டு பொண்டாட்டி, நூறு பொண்டாட்டி என்று எழுதி பலதார மணத்துக்கு ஆதரவு திரட்டினான். அவன்தான் பிறன்மனை கவர்வதும், வஸ்திரங்களை ஒளித்துவைப்பதும் கடவுள் லீலையாக காட்டியவன்.
? மனிதன் ஏன் குடிக்கிறான்?
மனிதன் இயல்பாகவே பலவீனமானவன். தன்னுடைய எண்ணத்துக்கும் சிந்தனைக்கும் மது பலம் கொடுப்பதாக நம்புகிறான். மது குடிக்கும்போது பலசாலியாக உணர்கிறான். மது எதையும் சாதிக்கும் சக்தி தருவதாக நினைக்கிறான். குழப்பமில்லாமல் முடிவு எடுக்கவும், படுக்கையறையில் மனைவியை சமாளிக்கவும் மது உதவும் என்று நம்புகிறான். ஆனால் உண்மை என்ன தெரியுமா?
மது குடிப்பவனுக்கு உடல் ஒத்துழைப்பு தருவதில்லை. நடை தள்ளாடும், கண் பார்வை மங்கிவிடும். சுவை தெரியாது. சிந்தனை மழுங்கிவிடும். மூளைக்கும் கைக்கும் ஒத்திசைவு இருக்காது. அதீத பாசம் அல்லது அதீத கோபம் உண்டாகும். வாந்தி, மயக்கம், மரணம் போன்ற பிரச்னைகளும் உண்டாகும். அதனால் குடியிடம் ஜாக்கிரதையாகவே இருக்கவேண்டும்.
? ஆனால் குடிக்கும்போது சந்தோஷமாக இருப்பதாக உணர்கிறார்களே..?
குடியால் கவலை, சோகம் மறந்து சந்தோஷமாக இருக்கிறேன் என்பார்கள். தூக்கம் வரவழைக்க குடிக்கிறேன் என்பார்கள். உடல் வலி, அலுப்பு தீர்வதற்காக குடிப்பார்கள். இதுபோல் ஏதேனும் காரணங்களால் பொய் சொல்கிறார்கள். ஒரு கட்டத்தில் குடித்தால் மட்டுமே சந்தோஷமாக இருக்கமுடியும் என்ற அடிமை நிலைக்கு மாறுகிறார்கள். குடிக்கத் தொடங்கிய காரணத்தை மறந்து, குடிப்பதற்காகவே வாழத் தொடங்குகிறார்கள். குழந்தையின் சிரிப்பில், குடும்பத்தினரின் அன்பில், நண்பர்களின் நெருக்கத்தில் கிடைக்காத சந்தோஷம் மதுவில் நிச்சயம் கிடைக்காது.
? குடியை நிறுத்துவது எப்படி?
முதலில் அரசு மனசு வைக்கவேண்டும். அரிதாக கிடைக்கவேண்டிய பொருள் அருகில் கிடைப்பதுதான் குடி பெருக முக்கிய காரணம். மது அருந்துவது ஒழுக்கக்கேடான செயல் என்ற எண்ணம் பிஞ்சு நெஞ்சில் இருந்தும் தோன்றவேண்டும். மது குடிப்பது தவறு இல்லை, மதுவுக்கு அடிமையாக இருப்பதுதான் தவறு என்ற எண்ணம் இப்போது நிறைய பேருக்கு உண்டு. அதேபோல் வீட்டு ஆண்கள் மது குடித்துவிட்டு யாரையும் வம்பிழுக்காமல் இருந்தால் போதும் என்ற மனநிலைக்கு பெண்கள் வந்துவிட்டார்கள். இதனால் குடிப்பழக்கம் பெருகுமே தவிர குறைவதற்கு வழியில்லை.
? அப்படியென்றால் மனிதகுலம் மதுவால் அழிந்துபோகுமா?
தன்னம்பிக்கை உள்ள மனிதனால் எத்தனை பெரிய அடிமைத்தனத்தில் இருந்தும் தன்னை விடுவித்துக்கொள்ள முடியும். பொதுநலன் கொண்ட தலைவனால் மதுவை மனிதனிடம் இருந்து தள்ளிவைக்க முடியும். நல்ல தலைவன் வரும் வரை பிள்ளைகளை மது அரக்கனிடம் இருந்து பாதுகாத்து வை.