வாழ்க்கையே சுவாரஸ்யம்
நம் வாழ்க்கைப் பயணம் என்பது பூக்கள் நிறைந்த பாதைகளில் செல்வது மட்டுமல்ல, சில நேரங்களில் புதர்களையும், புதைகுழிகளையும் கடந்துசெல்ல நேரிடும். நாம் சரியாக சென்றாலும், வேறு சிலரால் நமது பாதையில் இடையூறு நிகழும். பிறர் செய்யும் தவறுக்கு நாம் தண்டனை அனுபவிக்கும் சூழல் உருவாகும். இதுதான் நமக்கு மிகப்பெரிய வலியைக் கொடுக்கும்.
உறவு, நட்பு, உடன் பணியாற்றுபவர்கள் என யார் மூலமும் இப்படிப்பட்ட வலி நமக்கு வரலாம். ஆனால், இதற்காக நம் பயணத்தை நிறுத்திவிட முடியாது. இதுவும் வாழ்க்கையின் ஒரு பகுதி என எடுத்துக்கொள்ளும் பக்குவமும், மீண்டும் அப்படியொரு துன்பம் நிகழாதவண்ணம், தப்பும் வழியும் அறிந்துகொள்வதுதான் வாழ்க்கை பயணத்தை இனிமையாக்கும்.

’பொதுவாக மனிதர்கள் இரண்டு வகையிலான வலிகளால் அவஸ்தைப்படுகிறார்கள். ஒன்று,நோய்களால் ஏற்படும் உடல்ரீதியான வலி; மற்றொன்று, சூழ்நிலைகளால் ஏற்படும் மனரீதியான வலி. எவ்வளவு இனிமையான நிகழ்வாக இருந்தாலும், அது இறுதியில் ஓர் வலி ஏற்படுத்தலாம். எது மகிழ்ச்சியை அளிக்கின்றதோ, அதுவே நிவாரணத்தையும் அளிக்க வேண்டும். இல்லையெனில் அந்த இன்பமே வலியாகி விடும்’ என்கிறார், பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.
ஆம், வலி எல்லோருக்கும் பொதுவானது. துரோகங்களையும் ஏமாற்றங்களையும் தாங்கிக்கொண்டு வாழப் பழகிவிட்டால், அதன்மூலம் கிடைக்கும் வலிமை அனைத்து கஷ்டங்களையும் கடந்து வாழவைக்கும். வலியை அதிகம் எதிர்கொள்பவர்கள் இரண்டு பேர். ஒருவர், யார் பேச்சையும் கேட்காதவர்கள், மற்றொருவர், எல்லோர் பேச்சையும் கேட்பவர்கள். அதனால்தான் அவர்கள் வலிக்கு அதிகம் ஆளாகிறார்கள்.
உடலிலும் மனதிலும் தோன்றும் வலி என்பது நோய் அல்ல, எச்சரிக்கை. உடலில் ஆரோக்கியம் கெடுவதற்கான அறிகுறிதான் வலி. அதனை மருத்துவரால் தீர்த்துவிட முடியும். மனதில் தோன்றும் வலியை நாமேதான் தீர்க்க வேண்டும். அதற்கு, நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு வாழ்க்கையை எதிர்கொள்ளும் வலிமையை வளர்த்துக்கொள்ள வேண்டும், நல்லவரையும் துரோகியையும் பகுத்தறியும் பார்வை வேண்டும்.
எல்லாப் பயணங்களும் நாம் நினைத்த மாதிரியே முடிவதில்லை. வழி தவறிச் செல்லும் சிலபயணங்கள்தான் நமக்கு வாழ்க்கையில் பல பாடங்களைக் கற்றுத் தருகிறது. இந்த வலிக்கு நாமும் ஏதோ ஒரு வகையில் காரணம் என்பதை புரிந்துகொண்டு காயங்களோடு சிரிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். அது, அவ்வளவு எளிதல்ல என்றாலும், அப்படி சிரிக்கப் பழகிக்கொண்டால் எந்த காயமும் பெரிதல்ல. வலிகளை ஏற்றுக்கொள்ளாத வரை, வாழ்க்கையில் வளங்களைக் காணமுடியாது. பெரும்பாலான வெற்றியாளர்களின் வாழ்க்கையை திரும்பிப்பார்த்தால், அவர்களின் சாதனைக்குப் பின்னே பெருந்தோல்விகளும், பொறுக்க முடியாத வலிகளும் இருப்பதை காணமுடியும்.
எனவே வலிகளைக் கண்டு அஞ்சவேண்டாம், தைரியமாக ஏற்றுக்கொள்ளுங்கள். வலியால் மனிதனை வீழ்த்தவே முடியாது என்பதை அறிந்துகொண்டு வெற்றி நடை போடுங்கள்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்