• Home
  • மனம்
  • மன்னிப்பு என்பதும் மருந்து..!

மன்னிப்பு என்பதும் மருந்து..!

Image

அனுபவித்து மகிழுங்கள்

உணவே மருந்து என்பார்கள். அதேபோல், தூக்கம், மறதி, சிரிப்பு போன்றவையும் ஆரோக்கியம் தரும் மருந்து. இந்த வரிசையில் மன்னிப்பு என்பதும் ஆகச்சிறந்த மருந்து என்கிறது இன்றைய மருத்துவம்.

ஆம், நம்மை தோற்கடித்த எதிரிகளை, அவமானப்படுத்திய உறவுகளை, மதிக்காத மனிதர்களை எப்படியேனும் பழி வாங்க வேண்டும் என்று எண்ணாமல், அவர்களுடைய தவறுகளை எளிதாக மன்னிக்கும் குணம் கொண்டவர்களுக்கு இதய நோய் உள்ளிட்ட சில நோய்கள் தாக்குவது குறைவதாக மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.

சமீபத்தில், மனிதர்களின் மனதிற்கும், உடல் நலத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநில பல்கலைக்கழக ஆய்வு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இருநூறு பேர் பங்கேற்ற ஆய்வு அது. முதல்  நூறு பேரிடம் உங்களுக்குக் கெடுதல் செய்பவர்கள் மீது நீங்கள் எப்படி ஆத்திரமடைவீர்கள்…?, அவரை எப்படி பழி வாங்குவது என்று  கற்பனை செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

மீதமுள்ள நூறு பேரிடம், உங்களுக்கு துரோகம் செய்தவர்கள், தீமை செய்தவர்களை மன்னித்து மறந்து விடுவது போன்று கற்பனை செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது…

ஐந்து நிமிடம் கழித்து அதே நிகழ்வுகளை மீண்டும் நினைத்து பார்க்க வைத்து அவர்களது ரத்த அழுத்தம் சோதனை செய்யப்பட்டது…

தவறுக்கு ஆத்திரப்பட்ட நூறு பேரின் ரத்தவோட்டம் மிக அதிகமாக வேகமாக பாய்ந்தது. மறப்போம், மன்னிப்போம் என்ற மன்னிக்கும் குணம் கொண்ட நூறு பேரின் ரத்தவோட்டம் மிகவும் சீராக இருந்தது.

இந்த ஆய்வின் முடிவு குறித்து பேசிய தலைமை பேராசிரியர் டாக்டர் பிரிட்டா லார்சன், “மன்னிக்கும் மனம் இல்லாதவர்களின் ரத்தவோட்டம் ஆத்திரப்படும் நேரத்தில் மட்டுமின்றி நீண்ட நேர பாதிப்பைச் சந்திக்கிறது. அதனால், அவர்கள் ரத்தக் கொதிப்புக்கு ஆளாகி இதய நோயை சந்திக்க நேரிடலாம்.

அதேநேரம் மன்னிக்கும் குணம் கொண்டவர்களுக்கு இதயத் துடிப்பு சீராக இருந்ததும் மன்னித்ததால் ஏற்பட்ட மன அமைதி காரணமாக இதயத்துக்கு  ரத்தவோட்டம் அதிகரித்து அது வலுவடைந்ததும் சோதனையில் தெரிந்தது. இது நீண்ட கால அடிப்படையில் அவர்களது ஒட்டு மொத்த உடல் நலனுக்கு நன்மை தரும்” என்று கூறியுள்ளார்.

இதைத் தான், ‘எண்ணம் போல் வாழ்வு” என்பார்கள். மன்னிக்கும் மனம் நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். மன்னிக்கும் மனதுடைய மனிதர்களூடன் பழகும் போது நம்மை அறியாமலேயே அந்த நல்ல பழக்கமும் நம்முடன் வந்து ஒட்டிக் கொள்கிறது.

உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் மன்னிக்கும் மனம் தானே முளை விடும்…!

மன்னிப்பு!, வாழ்க்கையை உருவாக்குகிறது.. மன்னிப்பு மனிதர்களை உருவாக்குகிறது. எனவே, மன்னிப்புக் கேட்கும் எவருக்கும், மன்னிப்பை மறுக்காதீர்கள். மன்னிப்புக் கேட்காதவர்களையும் மன்னிக்க மறக்காதீர்கள்…!!

வாழ்க்கை அழகானது, அதை மன்னிப்பின் மூலம் அனுபவிப்போம். எனவே,, நமக்கு தீமை செய்தவர்களுக்கும் கூட நன்மையே நினையுங்கள். பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை. இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை. மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை. எனவே, மன்னியுங்கள். அங்கே ஆனந்தம் மலரும்

Leave a Comment