தேவதைகளின் விளையாட்டு

Image

வீட்டுக்கொரு ஊஞ்சல் கட்டுவோம்



உடல், மனம், அறிவு என மூன்றும் இணையும் விளையாட்டுகளைக் கற்றுக்கொடுத்தவர்கள், நம் தமிழர்கள். அதில் ஒன்று ஊஞ்சல். இதன் நினைவுகள் தனித்தன்மையானவை. ஊஞ்சல், ஆடிய இடத்துக்குத் தக்கவாகவும் ஆடிய வயதுக்குத் தக்கவாகவும் பல நினைவுகளைத் தரும். அன்னையின் பழைய புடவையில் ஆரம்பிக்கும் ஊஞ்சல், ஆலம்விழுது, கயிறு, டயர், பலகை எனப் பலவிதங்களில் பயணிக்கும். தாழை மற்றும் பனைநார் கயிற்றாலும்  ஊஞ்சல் கட்டி ஆடுவது ஒரு கலையாகவே இருந்தது. சில இடங்களில் வேல்களை நட்டு இடையில் கயிறு கட்டியும்  ஊஞ்சலாடினர். ஊஞ்சல் விளையாட்டானது, சங்க காலம் தொட்டே இருந்துவருகிறது.  ஊஞ்சலாடுதலை ஊசல் தூங்குதல் என வழங்கினர். கொங்குநாட்டார் இதனைத் தூளி என்றும் தூரி என்றும் கூறுவர்.


சங்க காலத்தில் தினைப்புனம் காக்கும் மகளிர் பரண்மீது ஊஞ்சல் கட்டி விளையாடி இருக்கின்றனர். விளையாட்டுத் தோழியர் பலர் சேர்ந்து ஆட்டிவிடுவது பற்றியும், தானே தனியே உந்தி ஆடியது பற்றியும் காதலன் ஆட்டிவிட்டு ஆடியது பற்றியும், காதலியின் முன்புறம் நின்று காதலன் ஆட்டிவிட்டது பற்றியும், காதலி பொய்யாகக் காதலன்மீது விழுவது பற்றியும் சங்க இலக்கியத்தில் குறிப்புகள் உள்ளன. அந்த காலத்தில் எல்லோர் வீட்டிலும் ஊஞ்சலை வரவேற்பறையில் மாட்டியிருப்பர். தேவதைகள் வீட்டிற்குள் வரும்போது ஊஞ்சலில் அமர்ந்து மகிழ்வர் என்றும் அவர்கள் செல்லும்போது நல்லதைத் தந்துவிட்டுச் செல்வர் என்பதும் நம்பிக்கை. நல்ல விஷயங்கள் பேசும்போது பெரியவர்கள் ஊஞ்சலில் அமர்ந்துபேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.


ஊஞ்சல் ஆட்டம் என்பது ஒரு கொண்டாட்டம். அதேநேரம் அது ஒரு தவநிலையும்கூட. ஒரு நிறைவான  ஊஞ்சலாட்டம் இதை உணரவைத்துவிடும். ஊஞ்சல்மீது அமர்ந்து ஆடஆட முதலில் சிரிப்பும் குதூகலமுமாகத் தொடங்கும் ஆட்டம், மெல்ல மெல்ல மனம் ஒருநிலைப்பட்ட தியானம்போல மாறியிருப்பதை உணர முடியும். அதன் காரணமாகவே தெருவில், மரத்தடியில்  ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சல், வீட்டின் திண்ணை,  வரவேற்பறை, மாடியின் பெரியகூடம், தாழ்வாரம், முற்றம், படுக்கையறை என எல்லா இடங்களிலும் ஆடவும் அலங்காரமாகவும் மாறியிருக்கிறது. மனிதர்களுக்கு மட்டும் அல்ல, கடவுளுக்கும் இந்த ஊஞ்சல் விளையாட்டு மகிழ்ச்சியைக் கொடுப்பதால் கோயில் விழாக்களில் ஊஞ்சல் சேவை என்ற ஒன்றை இன்றளவும் பின்பற்றி வருகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 7 நாட்கள் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். 7 நாட்களும் ஆண்டாள் ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


மர ஊஞ்சல், மூங்கில் ஊஞ்சல், குமிழி ஊஞ்சல், உலோக ஊஞ்சல், தூங்கும் தொட்டில்,  படுக்கை ஊஞ்சல், கயிற்று ஊஞ்சல், ஆலவிழுது ஊஞ்சல் என ஊஞ்சல்கள் பலவகைப்படும். ஆலமரத்தின் விழுதுகள் உறுதியுடன் இருப்பதால் ஊஞ்சலாட அது பெரிதும் உதவுகிறது. இரண்டு விழுதுகளை ஒன்றாக முடிச்சுப் போட்டு ஒருவர் அல்லது இருவர் அமர்ந்து விளையாடுவதும் உண்டு. கயிற்றின் பயன்பாட்டுக்கு பின்னர் உறுதியான கிளைகளைக் கொண்ட மாமரம், வேப்பமரம், புளியமரம் ஆகிய மரங்களில் கயிற்றைக் கட்டி அதன் நடுவில் சாக்கு அல்லது போர்வையைவைத்து அதில் அமர்ந்து ஊஞ்சல் விளையாடினர். ஊஞ்சல் வாங்க முடியாதவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு சேலை, டயர் மூலம் ஊஞ்சல் கட்டி விளையாட வைப்பர்.


நாட்கள் செல்லசெல்ல, கால மாற்றத்திற்கேற்ப ஊஞ்சல் செய்வதிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. மரப் பலகைக்கு இரண்டு பக்கமும் இரும்புச் சங்கிலியை இணைத்து ஊஞ்சல் செய்தனர். பிற்காலத்தில் வசதி படைத்த அனைவரது வீட்டிலும் கொல்லைப்புறத்தில் மரப்பலகையிலான ஊஞ்சல்கள் கட்டி ஆடி மகிழ்ந்தனர். இடவசதிக்கேற்ப சிறிய அளவிலும், எங்கு வேண்டுமானாலும் மடக்கிக்கொண்டுப் போய் மாட்டி விளையாடும் அளவுக்கு ஊஞ்சல்கள் வடிவமைக்கப்படுகின்றன.

உலகின் மிக உயரமான ஊஞ்சல் சீனாவில் திறக்கப்பட்டுள்ளது. சோங்கிங் பகுதியில் உள்ள 2,300 அடி உயர மலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஊஞ்சல், உலகிலேயே உயரமானது என கின்னஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 328 அடி உயரம்கொண்ட கிட்டத்தட்ட 30 மாடி கட்டடத்தின் உயரத்திற்கு சமமான இந்த ஊஞ்சல் சாகச பிரியர்களின் விருப்பமான விளையாட்டாக அமைந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்ட பிறகு 328 அடி உயரத்திலிருந்து பள்ளத்தாக்கை நோக்கி 130 கிலோமீட்டர் வேகத்தில் ஊஞ்சலாட விடப்படுகின்றனர். அந்தரத்தில் பறந்தவாறே பள்ளத்தாக்கின் அழகை கண்டு ரசிக்கும் த்ரில்லான இந்த அனுபவத்தைப் பெற சாகச விரும்பிகள் ஆர்வமாக வந்து குவிகின்றனர்.
ஊஞ்சலில் ஆடுவது மனதிற்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கிறது. ஊஞ்சல் ஆடுவதால் மனதில் நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது. எதிர்மறை எண்ணங்களின் தாக்கம் குறைகிறது. எண்ணங்கள் வளமாகின்றன. இதன் அடிப்படையிலேயே, திருமணங்களில் ஊஞ்சல் என்ற ஒரு சடங்கை ஏற்படுத்தினர் நம் பெரியவர்கள். ஊஞ்சலில் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உற்சாகம் வழிகிறது. நேராக உட்கார்ந்துகொண்டு ஆடுவதால் முதுகுத் தண்டுக்கு ரத்த ஓட்டம் சீராகப் பாய்கிறது. இதனால் மூளை புத்துணர்ச்சி அடைகிறது. கோபமாக இருக்கும்போது ஊஞ்சலில் ஆடினால் கோபம் தணிந்து இயல்பு நிலைக்கு மாற முடியும்.


ஊஞ்சல் மாட்டுவதற்கு சிறந்த இடம், நம் வீட்டின் தோட்டமாகும். மரங்களுக்கு இடையில் ஊஞ்சல் ஆடும்போது அதிகமான ஆக்ஸிஜனை சுவாசிக்க முடியும். இதனால் இதயம் சீராக இயங்கும். கர்ப்பிணிப் பெண்கள் உணவு சாப்பிட்டவுடன், சிறிது நேரம் ஊஞ்சலில் அமர்ந்து மெதுவாக ஆடினால் உணவு நன்றாக செரிக்கும். இது மற்றவர்களுக்கும் பொருந்தும். ஆனால் இந்த சமயம் வேகமாக ஆடுதல் கூடாது. இப்படி, மகிழ்ச்சியை வாரி தரும் ஊஞ்சலில் ஆடி அனைவரும் தங்களது இன்னல்களை மறந்து இன்பம் காண்போம்.

Leave a Comment