மது குடிப்பது தப்பா பாஸ்…

Image

புதிய கலாச்சாரம்

இப்போது ஒரு புதிய மதம் அதிவேகமாக பரவிவருகிறது. சாதி, மத, மொழி பாகுபாடு பார்க்காமல் புதிய மதத்தில் இணைபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இந்த மதத்தில் இணைந்த அனைவருக்கும் சந்தோஷம் கிடைக்கிறது. இப்படி ஒரு மதத்தில் இணையும் ஆசை உங்களுக்கும் இருக்கிறதா? உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் கடையில் இருந்து  ஒரு மது பாட்டிலை வாங்கி குடியுங்கள். போதை எனும் புதிய மதத்தில் நீங்கள் சங்கமிக்கலாம்.

முன்பு தெருவுக்குத் தெரு கோயில் ஏன் நிர்மாணிக்கப்பட்டது தெரியுமா?  மனிதன் தன்னைத்தானே கேள்விகள் கேட்டுக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். தன்னை படைத்தது யார், எதற்காக துன்பம் நேர்கிறது, பிரபஞ்சத்துக்கு அப்பால் என்ன இருக்கிறது, முற்பிறவி, மறுபிறவி உண்மையா என்றெல்லாம் கேள்வி எழுப்புவதற்கு தகுதியான இடம் கோயில்தான். சரியான பதில் கிடைக்கிறதோ இல்லையோ, சிந்தனை ஊற்றெடுக்கும். யாரேனும் ஒருவர் சொல்லியிருந்த விடையில் மனம் லயித்துப்போகும். கோடானுகோடி மனிதர்கள் இதுபோன்ற கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள் என்ற உண்மை அறிய வரும்போது, இந்த பிரபஞ்சத்தில் மனிதன் எத்தனை அற்பமான சிறு துகள் என்பது புரியும். அதனால் மனிதனின் தலைக்கனம் அடங்கி, அடக்கம் வரும். அந்த அடக்கம் வாழ்வுக்கு அமைதியும் நிம்மதியும் தரும். இதுதான் கோயில் உருவாக்கப்பட்டதன் அடிப்படை நோக்கம்.

இன்று நிலைமை தலைகீழாக இருக்கிறது. தெருவுக்குத் தெரு சாராயக்கடைகள் முளைத்திருக்கின்றன. பள்ளி மாணவன் தொடங்கி பாடைக்கு காத்திருக்கும் முதியவர் வரையிலும் பெருமையோடு குடிக்கிறார்கள். சட்டம், ஒழுங்கை பாதுகாத்து, மக்களை நல்வழிக்கு திருப்பி, ஆரோக்ய வாழ்க்கை அமைத்துத்தர வேண்டிய அரசுதான், இந்த சாராயக் கடைகளை நடத்துகிறது என்பதுதான் வினோதம். பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பதற்கு ஆதாரம் தேடி இனி எந்த இடம் தேடியும் அலையவேண்டியதில்லை.

மது எத்தனை கொடியது என்பதற்காக சொல்லப்படும் இந்தக் கதையை ஏற்கெனவே நீங்கள் கேட்டிருக்கலாம். ஓர் ஊரில் விசித்திரமான போட்டி அறிவிக்கப்பட்டது. ஏதேனும் ஒரே ஒரு பாவச்செயல் செய்தால் சன்மானம் என்று அறிவிக்கப்பட்டது. பணத்துக்கு ஆசைப்பட்ட வெளியூர் விறகுவெட்டி ஒருவன் போட்டியில் கலந்துகொள்ள முன்வந்தான்.

பந்தய மேடையில் ஒரு பெண் குற்றவாளியும் ஆண் குற்றவாளியும் நிறுத்தப்பட்டு இருந்தார்கள். அதோடு ஒரு குப்பி மது வைக்கப்பட்டிருந்தது. அந்த விறகுவெட்டிக்கு நிபந்தனை அறிவிக்கப்பட்டது. மதுவை குடிக்கலாம் அல்லது மங்கையை பாலியல் கொடுமை செய்யலாம் அல்லது ஆண் குற்றவாளியை கொலை செய்யலாம். ஏதேனும் ஒரே ஒரு குற்றம் மட்டும் செய்தால் தக்க சன்மானம் தங்கமாக கிடைக்கும் என்று சொல்லப்பட்டது.

மங்கையை சீரழிப்பதும், குற்றவாளியை கொலை செய்வதும் அதர்மம் என்று நினைத்தான் விறகுவெட்டி. மது குடிப்பதால் எந்த பாவமும் இல்லை என்று நினைத்து முழு பாட்டில் மதுவையும் குடித்தான். கொஞ்சநேரத்தில் அவனுடைய மூளை மழுங்கியது. அந்த மங்கையை பார்த்ததும் மோகம் கொண்டான். அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யத்துணிந்தான். அவனை அந்த குற்றவாளி தடுத்தான். நீ தவறு செய்கிறாய், வேண்டாம் என்று சொன்னான். உடனே ஆவேசமடைந்த விறகுவெட்டி, அருகில் இருந்த கோடரியால் குற்றவாளியின் தலையை வெட்டிவிட்டு பெண்ணை மானபங்கப் படுத்தினான். போதையில் இருந்து மீண்ட பிறகுதான், ஒரே நேரத்தில் மூன்று குற்றங்களையும் புரிந்துவிட்டது தெரியவந்தது.

போட்டி நிபந்தனை படி ஒரே ஒரு குற்றம் மட்டும்தான் செய்யலாம், ஆனால் விறகுவெட்டி மூன்று குற்றம் செய்துவிட்டான். அதனால் அந்த மேடையில் விறகுவெட்டியை குற்றவாளியாக கட்டி வைத்தார்கள். யாரேனும் பாவம் செய்வதற்கு ஆர்வமாக இருக்கிறீர்களா என்று மீண்டும் ஒரு போட்டிக்கு அறிவிப்பு செய்தார்கள்.

பாலியல் பலாத்காரம், கொலைக்கு கொஞ்சமும் சளைத்ததில்லை மது. மூளையை மட்டுமல்ல உடல் உறுப்புகளையும், குடும்ப பொருளாதாரத்தையும் மது சிதைத்துவிடுகிறது என்று தெரிந்தேதான் மனிதன் குடிக்கிறான்.. மது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பது உண்மைதான், ஆனால் எனக்கு எதுவும் செய்யாது. ஏனென்றால் நான் அளவுடன் குடிக்கிறேன் என்றுதான் சொல்கிறார்கள். உண்மையில் அளவுடன் குடித்தாலும், அதுவும் ஆபத்தை நோக்கிய பயணம் என்பதை இவர்கள் அறிய மாட்டார்கள்.

குடிக்கிறது தப்பா என்று கேட்கும் அளவுக்கு ஒரு புதிய தலைமுறை வந்துவிட்டது. ஆண், பெண், சிறுவர் என்ற பேதமின்றி அத்தனை பேருக்கும் மது அருந்துவதற்கு ஏதேனும் ஒரு சின்ன காரணமே போதுமாக இருக்கிறது. பரிட்சையில் ஃபெயில் என்றாலும் பாஸ் என்றாலும் குடிக்கலாம். காதலில் ஜெயித்தாலும் தோற்றாலும் குடிக்கலாம். சம்பள உயர்வு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் குடிக்கலாம். கல்யாணம், கருமாதி என்றாலும் குடிக்கலாம். பணக்காரன், ஏழை, உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, கிராமம், நகரம் என எங்கேயும் எல்லோரும் எப்போதும் குடிக்கலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது.

நெருப்பினால், நீரினால் உலகம் அழியும் என்று வேதங்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த பிரபஞ்சத்திற்கு அப்படியொரு அழிவு இப்போதைக்கு சாத்தியமில்லை. ஆனால் மதுவுக்கு ஒரு எல்லைக்கோடு போடவில்லை என்றால் மதுவில் விழுந்து ஒட்டுமொத்த மனிதகுலமும் அழிந்தே போகலாம். டயனோசர் என்ற இனம் அழிந்தது போல் மனித இனமும் காணாமல் போய்விடலாம்.

Leave a Comment