சும்மா இருந்தாலும் சுகமா இருக்கணுமா..?

Image

எளிய வாழ்வுக்கு வழி காட்டி

ஏதாவது ஒரு வேலை, கடமை, பொறுப்பு இல்லாத தருணங்களில் காலத்தை தள்ளுவது பலருக்கும் மிகப்பெரிய சுமையாக இருக்கிறது. குறிப்பாக பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், வாழ்நாள் முழுக்க எப்படி சும்மா இருப்பது என்று புரியாமல் தவியாய் தவிக்கிறார்கள்.

எந்த வேலையும் செய்யாமல் இருப்பதால், இந்த பூமிக்கு பாரமாகிவிட்டதாக உணர்கிறார்கள். ஏதாவது வேலை செய்து பரபரப்பாக முடியுமா என்று அலைகிறார்கள்.

உண்மை தெரியுமா..? மற்ற உயிரினங்கள் போலவே மனிதனும் சும்மா இருக்கத்தான் படைக்கப்பட்டுள்ளான். அதாவது, உணவு தேடும் நேரம் தவிர, மற்ற தருணங்களில் மனிதன் ஓய்வாக இருக்க வேண்டும் என்பதே இயற்கையின் விருப்பம்.

ஆகவே, சும்மா இருக்கும்போது கிடைக்கும் சுகத்தை அனுபவிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். சும்மா இருக்கும்போது சுகமாக எப்படி இருப்பது என்பதற்கு, இலக்கணம் சொல்லும், இந்த குட்டிக் கதையை நீங்கள் ஏற்கெனவே படித்திருக்கலாம்.

ஒரு தொழிலதிபர் காரில் பயணம் செய்த நேரத்தில் களைப்பு காரணமாக ரோட்டின் ஓரத்தில் தென்பட்ட ஒரு குட்டிக் கடையில் வாகனத்தை நிறுத்தினார்.

அந்த உரிமையாளர் கடையின் வாசலில் ஒரு கட்டிலில் படுத்து, ஏதோ ஒரு சினிமா பாட்டை உரத்த குரலில் பாடிக்கொண்டு இருந்தார். தொழிலதிபர் வருவதைப் பார்த்ததும்,, ‘இங்கே காஃபி மட்டுமே கிடைக்கும். போட்டுத் தரவா?’ என்று கேட்டான்.

தொழிலதிபர் அந்த காஃபியை வாங்கிக் குடித்ததும் ஆச்சர்யமானார். ஏனென்றால், அத்தனை சுவையாக இருந்தது. உடனே அந்த காஃபி கடை உரிமையாளரிடம், ‘உங்களுக்குக் கொஞ்சம்கூட விவரமே இல்லை. இத்தனை சிறப்பாக காஃபி போடுகிறீர்கள் என்றால் நகரத்திற்குள் வந்து கடை போட்டால் கூட்டம் அதிகமாக வரும், அதன் மூலம் நிறைய வருமானம் வரும். உங்கள் கடைக்கு பிராஞ்சிஸ் கேட்டும் ஆட்கள் வருவார்கள்…’ என்றார்.

‘’சரி, அப்புறம்..?’’

‘’நீங்கள் ஃபேமஸ் ஆவீர்கள், நிறைய பணம் கொட்டும்…’’

‘’அப்புறம்..?’’

‘’நிறைய பணம் சேர்ந்துவிட்டால், நீங்கள் அதன்பிறகு வேலையே பார்க்காமல், நிம்மதியாக படுத்துக்கொண்டு ஓய்வு எடுக்கலாம்…’’ என்றார்.

‘’நான் இப்போதே நிம்மதியாக, படுத்துக்கொண்டு சுகமாக ஓய்வு எடுக்கிறேன். பிறகு எதற்காக நகரத்திற்கு வந்து கடை போட வேண்டும்?’ என்று கேட்டாராம் அந்த கடைக்காரர்.

இந்த கதை என்ன சொல்கிறது என்பது புரிகிறதா..?

நிம்மதி அல்லது சுகம் என்பதன் அர்த்தம் ஒவ்வொரு நபருக்கும் வேறுபடுகிறது. மேலும், நிம்மதியைத் தேடி அலைவதே மனிதரின் இயல்பாகவும், நிம்மதி கிடைக்கவில்லை என்பதே மனிதரின் கவலையாகவும் இருக்கிறது.

நிம்மதி கிடைப்பது அத்தனை கடினமா.?

இல்லை நிம்மதி அடைவது வெகு சுலபம். அதற்கு முதலில் நிம்மதியைத் தேடி அலைவதை நிறுத்த வேண்டும். ஆம், நிம்மதி அடைவது உங்களிடமே இருக்கிறது. எனவே, உங்களுக்கான நிம்மதியை நீங்களே தேர்வு செய்ய வேண்டும்.

நிம்மதி அடைவதற்கு ஒரு சுருக்குவழி உள்ளது. அது, ஞாபகமறதியை வளர்த்துக்கொள்வது. ஆம், கடந்த கால தோல்விகளை, வருத்தங்களை, இழப்புகளை மறந்துவிட வேண்டும். இந்த சுமைகளுடன் வாழ்வதால் எந்த அர்த்தமும் இல்லை.

சும்மா இருந்தால், பிறர் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணமே நிறைய பேருடைய நிம்மதியைக் குலைக்கிறது. மற்றவர்களை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால், உங்களை கவனிப்பது அவர்களுடைய வேலை இல்லை. உங்கள் வாழ்க்கையை நீங்கள் தான் வாழ வேண்டும்.

உங்கள். மன நிம்மதியை இழப்பதற்கு உறவுகள் ஒரு காரணமாக ஒருபோதும் இருக்க வேண்டாம். அதற்கு நீங்கள் அனுமதிக்காதீர்கள். இந்த உலகில் யாரிடமும் நீங்கள் நல்ல பெயர் வாங்கவேண்டிய அவசியம் இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

பணம் நிம்மதி தராது என்று எந்த ஏழையும் சொல்வதில்லை. நிறைய பணம் வைத்திருப்பவர்களே, இப்படி சொல்வார்கள். ஆனால், அவர்களும் அந்த பணத்தை இழக்கத் தயாராக இருக்க மாட்டார்கள். எனவே, வாழ்க்கைக்கு பணம் அவசியம் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். அதேநேரம், பணத்துக்காக வாழ்க்கையை தொலைத்துவிட வேண்டாம்.

எல்லா விஷயங்களிலும் சந்தோஷத்தை அனுபவியுங்கள். ஏனென்றால், வாழ்க்கையில் இழந்த தருணங்களை மீட்க முடியாது. உணவு சாப்பிடுவதை, சினிமா பார்ப்பதை, பூங்காவில் நடப்பதை அனுபவித்து மகிழ்ச்சியான நிகழ்வுகளாக மாற்றிக்கொள்ளுங்கள். இந்த மகிழ்ச்சி, நீங்கள் நினைத்துப் பார்க்கும் நேரத்தில் எல்லாம் மகிழ்ச்சி தருவதாக இருக்கட்டும்.

லட்சியத்தை நிறைவேற்றும் வரை நிம்மதியாக இருக்கமுடியாது என்று சங்கல்பம் எடுக்காதீர்கள். லட்சியத்தை விட, லட்சியத்தை நோக்கிய பயணமே முக்கியம். எனவே, அந்த பயணத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் கற்றுக்கொள்ளுங்கள்.

மனதில் உள்ள கஷ்டத்தை வெளிய சொல்லி அழுதவர்களை விட, சொல்ல முடியாமல் அவஸ்தைப்படுபவர்களே அதிகம். தேவையற்ற முடியை, நகத்தை வெட்டி வீசுவது போல், மனதில் இருக்கும் கஷ்டத்தை தைரியமாக வெளியே சொல்லுங்கள். பிறரிடம் சொல்வதற்கு தயக்கம் என்றால், கண்ணாடி முன் நின்று உரக்கச் சொல்லுங்கள். அதுபோதும்.

இந்த வாழ்க்கை இனிமையானது என்பதை நம்புங்கள். ஏற்றுக்கொள்ளுங்கள். இந்த வாழ்க்கையை வெறுப்பதால், ஒரு போதும் நிம்மதி உண்டாகாது. எனவே பசிக்கு உணவு.. உடுத்துவதற்கு உடை.. படுப்பதற்கு ஒரு இடம் இருப்பதே சுகமாக இருப்பதற்கு போதும்.

இந்த மூன்றும் இல்லாமல் அவஸ்தைப்படும் எத்தனையோ மனிதர்களுக்கு மத்தியில் நீங்கள், இவற்றை எல்லாம் அடைந்திருக்கிறீர்கள் என்று வெற்றிப் புன்னகையுடன் நிம்மதியாக வாழ்க்கையை ரசியுங்கள்.

ஆம், சும்மா இருப்பதை சுகமாக அனுபவியுங்கள்.

Leave a Comment