பூசணிக்காய் விளையாட்டு தெரியுமா..?

Image

பூத்திருக்கு.. காய்ச்சிருக்கு… பறிச்சுக்கோ..!



நம்முடைய பாரம்பரிய விளையாட்டுகள் அனைத்தும், தாய் – தந்தை, பெரியோர்கள்,  உறவுகள், நட்புகள் என அனைவரின் குணங்களையும் செதுக்குவதாக அமையக்கூடியது. மனிதாபிமானம், விடாமுயற்சி, சிந்திக்கும் திறன், தன்னம்பிக்கை என சுய ஒழுக்கங்கள் வளர காரணமாக இருக்கக்கூடியவை. தவிர, படைப்பாற்றல், நினைவாற்றல் மேம்பாடு, சுயசிந்தனை, உடல் மனப்பயிற்சி போன்ற குணங்களை கொண்டது. அப்படிப்பட்ட விளையாட்டுகளில் பூசணிக்காய் விளையாட்டும் ஒன்று.

நம்முடைய பாரம்பரிய விளையாட்டுகளில் கபடியைத் தவிர, பிற குழு சார்ந்த விளையாட்டுகள் எல்லாம் காணாமல் போய்விட்டன.  அக்கம்பக்கம் பழகவே தயங்கும் இன்றைய இளம் தலைமுறையிடம் குழு விளையாட்டில் குழந்தைகள்  ஈடுபட வேண்டும் என்பதே ஆசிரியர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.  பூசணிக்காய் விளையாட்டு என்பது குழு சார்ந்து விளையாடும் விளையாட்டாகும். இவ்விளையாட்டை சிறுவர்களும் சிறுமிகளும் இணைந்தோ அல்லது தனித்தோ விளையாடுவர்.

பூசணிக்காய் என்னும் விளையாட்டில் சிறுவர், சிறுமியர் ஒருவர்பின் ஒருவராக அமர்ந்துகொள்வார்கள். அவர்களுள் சிறிது வயது முதிர்ந்த ஒரு சிறுமி தோட்டக்காரியாகவும் மற்றொரு சிறுமி பூசணிக்காய் வாங்க வருபவராகவும் செயற்படுவர். பூசணிக்காய் வாங்க வரும் சிறுமி, தோட்டக்காரியாக இருக்கும் சிறுமியைப் பார்த்து,   ‘பூசணிக்காய் இருக்கா’ என்று கேட்பார். அதற்குத் தோட்டக்கார சிறுமி,  ‘இப்பதான் பூ பூத்திருக்கு’ எனப் பதிலுரைப்பார். பின்னர் அந்தச் சிறுமி சென்றபிறகு, மற்றொரு சிறுமி தோட்டக்கார சிறுமியிடம் சென்று, ‘பூசணிக்காய் இருக்கா’ எனக் கேட்பார். அதற்குத் தோட்டக்கார சிறுமி,   ‘இல்லை, இப்பதான் பிஞ்சு விட்டிருக்கு’ என்பார். இப்படியே ஒவ்வொருவராக வந்து கேட்க, தோட்டக்கார சிறுமி பூசணியின் வளர்ச்சிகள் பற்றி ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்வார்.

இறுதியாக,  ‘பூசணிக்காய் விற்பனைக்குத் தயார்’ என்ற பருவத்துக்கு வரும்போது கேட்டு வரும் சிறுவர் சிறுமியிடம், தன் பின்னால் இருக்கும் குழந்தைகளைக் காண்பித்து,  ‘உங்களுக்கு எந்த பூசணிக்காய் வேண்டும்’ என்று தோட்டக்கார சிறுமி கேட்பார். அவர், ஒருவரை காண்பித்து…   ‘எனக்கு அந்த பூசணிக்காய் வேண்டும்’ என்றவுடன், அந்த சிறுமியை நான்குபேர் பூசணிக்காயைத் தூக்குவதுபோல் தூக்கிக்கொண்டு போவார்கள். பின்பு, அந்த பூசணிக்காயைச் சமைத்து சாப்பிடுவதுபோல் நடிப்பர். இதே விளையாட்டை, வேறு இடங்களில் இன்னொரு வகையிலும் விளையாடுவர்.
ஆடும் குழுவில் சிறுமி ஒருவர் அரசனாக இருப்பார்.  மற்றொருவர் அரசரின் சேவகனாக இருப்பார்.  மற்றவர்கள், படர்ந்திருக்கும் பூசணிக்கொடியாய்  அமர்ந்திருப்பர். அரசன், சேவகனை அழைத்து  பூசணிக்காய் வாங்கிவரும்படி கட்டளையிடுவான்.  சேவகன் கொடியில் காய்த்திருக்கும் (அமர்ந்திருக்கும் சிறுமிகளை) பூசணிக்காயைப் பறிப்பான்.  பூசணி வேராக இருக்கும் சிறுமி, தன் இரு கால்களையும் பரப்பிக்கொண்டு தன் கைகளை வலிமையாகத் தரையில் ஊன்றிக்கொண்டு அமர்ந்திருப்பாள்.

அந்த அணியிலுள்ள மற்றவர்கள் அவளது இடுப்பைப் பலமாகப் பிடித்துக்கொண்டு ஒருவர் பின் ஒருவராக அமர்ந்திருப்பர். இந்தத் தொடர் பூசணிக்கொடி. தொடரின் பின்புறம் கடைசியில் உள்ளவர் பூசணிக்காய். சேவகன் அந்தப் பூசணிக்காய்ச் சிறுமியின் இடுப்பைப் பிடித்து இழுப்பான். தொடர் அறுபட்டால், பூசணிக்காய் பறிக்கப்பட்டதாக எடுத்துக்கொள்ளப்படும். பின் வேறொருவர் அரசன், சேவகன் என வைக்கப்பட்டு அடுத்த ஆட்டம் தொடரும். இந்த முறையிலும் பல இடங்களில் பூசணிக்காய் விளையாட்டு விளையாடப்படுகிறது.
இந்த விளையாட்டு குழந்தைக்கு தாவர வளர்ச்சியின் பருவத்தை அறிவுறுத்துவதாக அமைகிறது. மேலும் பொருட்கள் உருவாகும் விதத்தையும், அவற்றின் தேவையையும் அவசியத்தையும் புரியவைக்கிறது. அத்துடன், இவ்வாறான விளையாட்டுகள் குழந்தைகளின் உடல், மன வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன.  தவிர, ஒன்றின்  முழு வள்ர்ச்சிக்காகக் காத்திருக்க வேண்டும் என்ற அறநெறியையும், ஒற்றுமை மனப்பான்மையையும் வளர்க்கிறது. 

Leave a Comment