கடவுளிடம் இதைக் கேட்கலாமா..?

Image

சூப்பர் ஆலோசனை

கற்பனைகள் சுகமானவை. விரும்பிய வண்ணம் எல்லாம் கற்பனை செய்து பார்க்கலாம். அப்படியொரு கற்பனையாக, திடீரென கடவுள் உங்கள் முன் வந்து, ஏதேனும் ஒரு வரம் கொடுப்பதாகச் சொன்னால்… என்ன கேட்பீர்கள்..?

முழுமையான ஆரோக்கியம், நிறைய செல்வம், மரணமற்ற பெருவாழ்வு, உலகிற்கே தலைமைப் பதவி, நீடித்த புகழ் என்று கேட்கவே பலரும் ஆசைப்படுவார்கள். இவை எல்லாமே கிடைக்கிறது என்றே வைத்துக்கொள்வோம். அப்போது, வாழ்க்கை முழு மகிழ்ச்சியாக மாறிவிடுமா..?

ஏனெனில் பணம் வைத்திருக்கும் எல்லோரும் மகிழ்ச்சியும் நிம்மதியாகவும் இருப்பதில்லை. எத்தனையோ பணக்காரர்கள் பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அதேபோல் ஆரோக்கியம், புகழ், செல்வாக்கு போன்றவையும் போதிய அளவு மகிழ்ச்சி தருவது நிச்சயமில்லை.

அப்படியென்றால் கடவுளிடம் என்ன கேட்பது..?

நேரடியாக மகிழ்ச்சியைக் கேட்கலாம். ஏனென்றால் மகிழ்ச்சி இருக்கும் இடத்தில் ஆரோக்கியம், செல்வம், தனித்தன்மை போன்ற எல்லாம் நிரம்பியிருக்கும்.

அதுசரி, கடவுள் கண் முன் வருவாரா..? கேட்டதைத் தருவாரா..?

நிச்சயம் வரப்போவதில்லை. ஆனாலும் நீங்கள் ஆசைப்பட்டதை அடைய முடியும்.  

ஆம், கடவுளைப் போன்று அபார சக்தி கொண்டது மனிதரின் ஆழ்மனம். அத்தகைய ஆழ்மனதிடம் என்ன கேட்கிறீர்களோ அதையே வாழ்க்கை உங்களுக்குத் தருகிறது. உங்கள் ஆசையை நிறைவேற்றுவதற்கான அத்தனை வாய்ப்புகளையும் ஆழ்மனம் உங்கள் கண் முன்னே காட்டுகிறது.

மூன்று நண்பர்கள் ஒரு ரோட்டில் நுழைந்தால் குடி பிரியருக்கு டாஸ்மாக் மட்டுமே கண்ணில் பளீச்சென தென்படும். தலைவலியில் இருப்பவருக்கு  மருத்துவமனையும், மெடிக்கல் ஷாப்பும் தென்படும். பிள்ளையைப் பற்றி நினைப்பவருக்கு, அவர்களுக்கான சாக்லேட் கடை தென்படும். அப்படித்தான், அவரவர் தேடுதலுக்குத் தேவையானது மட்டுமே கண்ணில் தென்படும். உங்களுக்கு விருப்பமில்லாதவை கண்ணுக்குத் தென்படுவதில்லை.  

எனவே, மகிழ்ச்சி வேண்டுமென்றால், அதன் மீது மட்டும் முழு கவனத்தையும் செலுத்துங்கள். யார் திட்டினாலும், புறக்கணித்தாலும், ஏமாற்றினாலும், அதை மனம் பெரிதாக எடுத்துக்கொள்ளாது… ஆனால், மகிழ்ச்சி மட்டும் எப்படியேனும் கிடைத்துவிடும்.

ஆகவே, மகிழ்ச்சியைக் கேளுங்கள்… கிடைத்துவிடும்.   

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர், ஞானகுரு கவுன்சிலிங்.

Leave a Comment