கெட்டுவல்லம் காணுச்சோ..?!

Image

ஆனந்த அனுபவம்



இந்தியாவில் இயற்கை அழகுமிகுந்த மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. அங்குள்ள காடுகளும், இயற்கை சூழ்ந்த இடங்களும் சுற்றுலாப் பயணிகளை எப்போதும் இன்முகத்துடன் வரவேற்கக் கூடியவை. அதில் ஒன்று கெட்டுவல்லம் (முடிச்சுகள் நிறைந்த படகு) என்கிற படகு வீடு. கேரளாவுக்குச் செல்பவர்கள் பத்மனாப கோயிலையும் படகு வீட்டையும் நிச்சயம் மிஸ் செய்யவே மாட்டார்கள்.

கேரளாவின் எழில் சிந்தும் உப்பங்கழிகளில் படகு இல்லங்களில் பயணம் செய்வதும், சிறிது காலம் அவைகளினுள்ளே வசிப்பதும் மிகவும் அற்புதமான அனுபவம். கேரளாவின் தனிமைப்படுத்தப்பட்ட சில கிராமங்களிலிருந்து நகர்ப் பகுதிகளை அடைவதற்கு ‘கெட்டுவல்லம்’ என்று அழைக்கப்படும், இந்த படகு இல்லங்கள்தான் முந்தைய காலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு படகுப் பிரயாணம் செல்லும் ஆர்வத்தில் இங்கு பயணிகள் வரத் தொடங்கினர். இதன் காரணமாக  இன்று, படகு வீடு அமைப்புகள் கேரளாவின்  உப்பங்கழி பகுதிகளில் முக்கியமான சுற்றுலாப் போக்குவரத்து அம்சமாக பயன்படுத்தப்படுகிறது.

முற்காலத்தில் சரக்குப் போக்குவரத்திற்காக  மட்டுமே பயன்படுத்தப்பட்ட இந்த படகு அமைப்புகள் நாளடைவின் ஒரு வீட்டுக்குரிய எல்லா அம்சங்களுடனும் கட்டமைக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் விரும்பும் ஒரு ரசனைக்குரிய அம்சமாக மாறிவிட்டன. கொல்லம் நகரிலிருந்து 23 கி.மீ தூரத்தில் உள்ள அலுங்கடவு கிராமம்தான் படகு வீடுகளின் கட்டுத்தளமாக இருக்கிறது. இது, இந்தியாவிலேயே முக்கியமான படகுக் கட்டுமான தளமாக புகழ்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கெட்டுவல்லங்களை படகு வீடுகளாக மாற்றும்போது, இயற்கையான பொருட்களை மட்டும் பயன்படுத்துவதற்கு கவனம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. மூக்கில் பாய்கள், குச்சிகள் மற்றும் பாக்கு மரங்கள் கூரைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன, தேங்காய் நார் பாய்கள் மற்றும் மரப்பலகைகள் தரைக்காகவும் தென்னை மரங்கள் மற்றும் தேங்காய் நார்கள் படுக்கைக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. இப்போதெல்லாம், விளக்கிற்காக சோலார் பேனல்களும் விரும்பப்படுகின்றன.

இந்த படகுகள், மரப்பலகைகள் மீது கூரை வேயப்பட்டவையாகும். இந்த படகு பலா மரக்கட்டைகளால் செய்யப்பட்டு தென்னை நாரினால் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கும். இது, பிறகு வேகவைக்கப்பட்ட முந்திரி கொட்டைகளில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பு பிசினால் பூசப்படுகிறது. நல்ல பராமரிப்பு இருந்தால், ஒரு கெட்டுவல்லம் பல தலைமுறைக்குக்கூட நீடிக்கும் என்கிறார்கள், இதன் கட்டுமானர்கள். கெட்டுவல்லத்தின் ஒரு பகுதி மூங்கில் மற்றும் தேங்காய் நாரினால் மூடப்பட்டிருக்கும், அது படகோட்டிக்கு ஓய்வறையாகவும் சமையலறையாகவும் இருக்கும்.  படகிலேயே சாப்பாடு தயாரிக்கப்படும், அதற்கு துணையாக காயல்களில் இருந்து புதிதாகப் பிடிக்கப்பட்டு சமைக்கப்பட்ட மீன்களும் இருக்கும்.

இந்தத் தொழிலில் ஈடுபடுபவர்கள், எந்தவிதமான அதிநவீன சாதனங்களோ, நடைமுறைகளோ இல்லாமல் பாரம்பரிய நுணுக்கங்களை மட்டுமே கையாண்டு கலையம்சம் நிரம்பிய, அதேசமயம் பாதுகாப்பான படகு வடிவங்களை  உருவாக்கி வருகின்றனர். இது, பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்துவருகிறது. இந்த படகு இல்லங்களில் கிடைக்கும் அனுபவம், ஓர் உயர்ரக ரிசார்ட்டுகளில்கூடக் கிடைக்காது என்பது நிஜம்.

 இந்த படகு இல்லங்கள் பல்வேறு வடிவங்களுடனும், வெவ்வேறு வசதிகளுடனும் காணப்படுகின்றன. அதுமட்டுமின்றி, நமது பட்ஜெட்டுக்குத் தகுந்தமாதிரி, படகு இல்லங்களைத் தேர்வு செய்துகொள்ள முடியும். இங்கு பொதுவாக  சுண்டன், வெப்பு வல்லம், இருட்டுகுட்டி, சுருலன் , ரெயின்போ குரூசஸ், ரிவர் எஸ்கேப்ஸ், தி லேக்ஸ் அண்ட் லகூன்ஸ், தி ரிவர் அண்ட் கண்ட்ரி, தி டிரீம் போட்ஸ் உள்ளிட்ட படகு இல்ல அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

குறிப்பாக, ஆலப்புழாவில் மட்டும், 500க்கும் அதிகமான படகுவீடுகள் உள்ளன. இன்றைய படகு வீடுகள் பல, அலங்கரிக்கப்பட்ட படுக்கையறை, நவீன கழிப்பறை, வசதிமிக்க வரவேற்பறை, சமையலறை மற்றும் பால்கனி கொண்ட ஸ்டார் ஹோட்டல் வசதிகளுடன் கூடியனவாக இருக்கின்றன. இதில், பெரும்பாலான படகுகள், 40 எச்பி இன்ஜின்களைக் கொண்டிருக்கின்றன. தவிர, இரண்டு அல்லது மூன்று படகு வீடுகளை ஒன்றாக இணைத்து படகு ரயில்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இது, பார்வையாளர்களைக் கவர்வதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
தற்கால படகுவீடுகள் பெரியவை. இவை, ஓய்வானப் பயணங்களுக்காகப் பயன்படுத்தப்படும் மெதுவாக நகரும் ஓடங்களாகும். உண்மையில் இவை, பழங்காலக் கெட்டுவல்லங்களின் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பாகும். அந்தக் கால கெட்டுவல்லங்கள் (இந்தப் படகு ஒருவகை விசேஷ மரப் பலகைகளால் கட்டப்பட்டது; ஓர் ஆணிகூடப் பயன்படுத்தப்படாமல் சணல் கயிறு முடிச்சுகளால் பலகைகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டது) அரிசி மற்றும் நறுமணப்பொருட்களை டன் கணக்கில் ஏற்றிச் செல்வதற்காகப் பயன்படுத்தப்பட்டன.

ஒருநிலையான கெட்டுவல்லம்  30 டன்கள் வரை சரக்குகளை குட்டநாட்டிலிருந்து கொச்சித் துறைமுகத்திற்கு ஏற்றிச் செல்லக்கூடியவை.
நவீனகால வாகனங்களின் வருகையால் இந்தப் படகுகளுக்கான மவுசு குறைந்துவிட்டது. பிறகு, ஒரு தொழில் முனைவரின் மனதில் தோன்றிய யோசனைக்குப் பிறகே, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் இத்தகைய படகு வீடுகள் உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதன் பயன், படகு வீடுகள் மூலம் கேரளா சுற்றுலாத் துறைக்கு நல்ல வருமானம் வருகிறது.

Leave a Comment