அடிமை எனும் ஆபத்து
பழக்கம் என்பது மலைப்பாம்பு போன்றது. எளிதில் பிடிக்காது, பிடித்துவிட்டால் அத்தனை சீக்கிரம் விடாது. அதனால்தான் நல்ல பழக்கமோ, கெட்ட பழக்கமோ எதையுமே பழகிக்கொள்ள வேண்டாம் என்கிறார்கள். மூன்று வேளை சாப்பாடு என்ற பழக்கத்தில் சிக்கிக்கொண்ட காரணத்தால்தான் மனிதன் நாயாய், பேயாய் நிம்மதியின்றி அலைகிறான்.
குடி அடிமையாக மாறியவனுக்கு நான்கு மாதங்கள் சிகிச்சை மையத்தில் வைத்து மருந்துகள் கொடுத்தாலும், திரும்பிவந்த சில மாதங்களில் அவன் மீண்டும் குடிப்பழக்கத்தில் ஈடுபடுவது ஏன் தெரியுமா? அவன் குடிப்பழக்கத்தையும் அதில் கிடைக்கும் ஆனந்தத்தையும் ஆழமாக மனதில் திணித்துக்கொண்டதுதான். குடி எனும் வட்டத்திற்குள் சுற்றுவது அவனுக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. கெட்ட பழக்கம் மட்டுமல்ல, நல்ல பழக்கத்தையும் தேவைப்படும்போது கைவிட கற்கவில்லை என்றால் சிக்கல்தான் என்பதற்கு உதாரணம் சுப்பிரமணி.
மூன்றாம் வகுப்பிலிருந்து காலை 4 மணிக்கு சுப்பிரமணியை எழுப்பி படிக்கச்சொன்னார்கள், பக்கத்தில் இருந்து சொல்லிக் கொடுத்தார்கள். அதனால் வேறு வழியே இல்லாமல் நீண்ட நேரம் படிக்கவேண்டிய சூழலுக்கு ஆளாகி, நிறைய மதிப்பெண்கள் பெற்றான். பள்ளியிலும் கல்லூரியிலும் நன்றாகப் படித்து நல்ல வேலையிலும் சேர்ந்தான். ஆக நாலு மணிக்கு எழும் பழக்கம் ஒரு வரம் போல் சுப்பிரமணியனுக்கு உதவி செய்தது.
வேலையில் சேர்ந்தபிறகும் காலை 4 மணிக்கு எழும் பழக்கம் சுப்பிரமணியனுக்கு விடவில்லை. சீக்கிரம் எழுந்து என்ன செய்வதென்று புரியாமல் விழித்தான். தியானம் செய்தான், புத்தகம் படித்தான், டி.வி. பார்த்தான், நடைபயிற்சி செய்தான். என்னென்ன செய்தாலும் ஏகப்பட்ட நேரம் மிச்சமிருக்கிறது. அதனால் அவனுக்கு இப்போது நாலு மணி என்றால் நரகமாகத்தான் விடிகிறது.
காலையில் வேலை இல்லை என்றால் நிம்மதியாக படுக்கையில் கிடங்கள் அல்லது சமையலாவது செய்யுங்கள் என்று மனைவி எத்தனையோ தடவை சொல்லிவிட்டாள். ஆனால் எதுவும் அவன் மண்டையில் ஏறுவதாக இல்லை. அதேநேரம், அதிகாலை 4 மணிக்கு எழுவதுதான் சிறந்தது என்ற எண்ணத்துடனே வாழ்கிறான். அதனால் லேட்டாக தூங்கவும் முடியவில்லை.
இதற்கு தீர்வு கேட்டு மருத்துவரிடமும் போனான். அலாரம் வைப்பதுபோல் விழிப்பு வருவது நல்ல விஷயம்தான், இதனை அனுபவித்து மகிழுங்கள் என்று சொல்லி அனுப்பினார். ஆனால் சுப்பிரமணி கிடைக்கும் நேரத்தை அனுபவிக்கத் தெரியாமல் அவஸ்தப் படுகிறான்.. நாலு மணிக்கு எழுவதை நல்ல பழக்கம் என்று சுப்பிரமணியன் நினைப்பதால்தான், அந்த பழக்கத்தில் இருந்து அவனால் வெளிவர முடியவில்லை.
ஆம், பழக்கத்தில் நல்லது, கெட்டது என எதுவுமே கிடையாது என்பதுதான் உண்மை. காலையில் எழுந்து குளித்து முடித்தபிறகுதான் சாப்பிடவே முடியும், பல் தேய்த்தபிறகுதான் காபி குடிக்க முடியும் என்றெல்லாம் சிலர் நியதி ஏற்படுத்திக்கொள்வதுண்டு. இவற்றை நல்ல பழக்கம் என்று அவர்களாக கடைப்பிடித்தால், திடீர் பயணங்களில் இதுவே மகா இம்சையாக மாறிவிடும்.
அதற்காக பழக்கங்களை எல்லாம் தூரப்போட வேண்டியதில்லை. தேவைப்படும் பட்சத்தில் நல்ல பழக்கத்தையும் தீய பழக்கத்தையும் தள்ளிவைக்கத் தெரியவேண்டும்.