நெஞ்சைத் தொடும் குட்டிக் கவிதைகள்

கவித்துவம்

சின்ன சின்ன வார்த்தைகளால் நெய்யப்படும் கவிதை எத்தனையோ மனிதர்களின் உயிரை உரசிவிடுகிறது. ஒரு கவிதை சிலிர்ப்பூட்டுகிறது. ஒரு கவிதை அழ வைக்கிறது. ஒரு கவிதை சிந்திக்க வைக்கிறது.

நெஞ்சைத் தொட்டுச் செல்லும் குட்டிக் குட்டி கவிதைகளை படித்துப் பாருங்கள். இதயம் இனிக்கும்.

யார் அவர்..?

உங்களைத் தவிர

வேறு யாராலும்

உங்களை

அழிக்க முடியாது.

உங்களைத் தவிர

வேறு யாரும்

உங்களைக்

காப்பாற்ற முடியாது.

  • ஓஷோ

அறம்

யாரை எதற்காக கொண்டாடுகிறீர்கள்,

யாரை எதற்காக வெறுக்கிறீர்கள்,

யாரை எதற்காக பாராட்டுகிறீர்கள்,

யாரை எதற்காக மட்டம் தட்டுகிறீர்கள்,

எதற்காக & யாருக்காக களமாடுகிறீர்கள்

என்பதில் வெளிப்படும்

உங்களின் உண்மையான குணமும் அறமும்.

  • அரூபி

நண்பி

அதே பழைய சிநேகிதி தான்.

அதே” ஹேய் லூசு”,

அதே எரும

அதே “மொக்க போடாதடா ” தான்.

துள்ளல் திமிர் தெனாவட்டு

எதுவும் மாறிவிடவில்லை.

பாப்பாவுக்கு என்ன பேர் வச்சிருக்க ?

என்று கேட்கையில் மட்டும்

குரல் உடைந்திருந்தது.

  • காசிராஜன்

Leave a Comment