தேவை இருக்கும் வரை மட்டுமே, உங்கள் தவறுகள் மன்னிக்கப்படுகிறது.

மந்திரச்சொல்

பெற்றோர் மட்டுமே பிள்ளைகள் என்ன தவறு செய்தாலும் மன்னித்து ஏற்றுக்கொள்கிறார்கள். மற்ற உறவுகள் எல்லாமே தேவை இருக்கும் வரை மட்டுமே மன்னிக்கிறார்கள்.

இது எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் பொருந்தும் என்பதில்லை. ஆனால், பெரும்பாலான நேரங்களில் உறவு என்பது லாப, நஷ்ட கணக்கின் அடிப்படையில் இயங்குகிறது என்பதே கடினமான உளவியல் உண்மை.

பெரும்பாலோர் தங்களுக்கு என்ன பயன் கிடைக்கும் என்பதை கணக்கிட்டே பழகுகிறார்கள். அவர்களுக்கு தேவை இருக்கும்போது, குறைகளையும் தவறுகளையும் பொறுத்துக்கொள்கிறார்கள். அந்தத் தேவை குறைந்துவிட்டால், முன்பு அதே தவறுகள் மன்னிக்கப்படுவதில்லை, விளக்கம் ஏற்கப்படுவதில்லை.

வேலை செய்யும் இடங்களில் இதை அடிக்கடி பார்க்கலாம். ஒரு திறமையான ஊழியர் நிறுவனத்திற்கு அதிக லாபம் ஈட்டித் தருகிறார் என்றால், அவரது சிறிய தவறுகள் பலமுறை கவனிக்கப்படாமல் போகலாம். ஆனால் அவர் நிறுவனத்திற்கு முக்கியமானவராக இல்லாத நிலை வந்துவிட்டால், அதே தவறுகள் ஒழுங்கு நடவடிக்கைக்குக் காரணமாக மாறலாம்.

சில நட்புகளிலும் உதவி தேவைப்படும் காலத்தில் ஒருவர் மிகவும் மதிக்கப்படுகிறார். ஆனால் அந்த உதவியின் தேவை முடிந்தபின், அவருடன் இருந்த பொறுமையும் சகிப்புத்தன்மையும் மறைந்து விடுகிறது.

ஆனால் எல்லா உறவுக்கும் சில விதிவிலக்குகள் உள்ளன. உண்மையான அன்பு, ஆழமான நட்பு, ஆரோக்கியமான குடும்ப உறவுகள் கணக்கு போட்டு இயங்குவதில்லை. அங்கு தவறுகள் அன்பினால் மன்னிக்கப்படுகிறது.

எனவே, தேவையின் அடிப்படையில் கிடைக்கும் மன்னிப்பு தற்காலிகமானது. தேவைக்காக மன்னிப்பவர்கள் சந்தர்ப்பவாதிகள். மனிதநேயத்தால் மன்னிப்பவர்கள் உறவோடு நிலைத்திருப்பார்கள்.இவர்களின் மரியாதையும் நம்பிக்கையும் நீண்டகாலம் நிலைத்திருக்கும்.

மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment