மனிதர்கள் எனும் பயணிகள்
ஐந்து நட்சத்திர ஹோட்டல் போன்று ஹைடெக் வசதிகள் நிரம்பிய அறையில் தங்குவதற்கு வாய்ப்பு பலருக்கும் ஏதேனும் ஒரு நாள் கிடைத்திருக்கலாம். அதுபோன்ற நேரங்களில் என்னவெல்லாம் செய்திருப்பீர்கள்..?

இலவசமாக வழங்கப்பட்டிருக்கும் சோப்பு, ஷாம்பு, எண்ணெய் போன்றவைகளை முழுமையாக பயன்படுத்துவீர்கள். சொந்தமாக பேஸ்ட், டூத் பிரஸ் கொண்டுவந்திருந்தாலும், ஹோட்டலில் வைக்கப்பட்டிருக்கும் காம்ப்ளிமென்ட்ரி பேஸ்ட், பிரஸையே பயன்படுத்துவீர்கள்.
வழக்கமாக காக்காய் குளியல் போடும் நபராக இருந்தாலும், ஹோட்டல் அறையில் வெந்நீர் போட்டு நிதானமாக ரசித்து குளிப்பீர்கள். பாத் டப் இருந்தால், அதில் வெந்நீர் நிரப்பி அரை மணி நேரமாவது நிச்சயம் செலவிடுவீர்கள். உங்கள் சொந்த துண்டை பயன்படுத்தாமல் ஹோட்டலில் கொடுக்கப்பட்டிருக்கும் பாத் டவலை பயன்படுத்துவீர்கள். காஃபி, டீத்தூள், சர்க்கரை போன்றவைகளின் சாம்பிள் பாக்கெட்களை டேஸ்ட் செய்து பார்ப்பீர்கள் அல்லது உங்கள் சூட்கேஸில் எடுத்து பத்திரப்படுத்துவீர்கள்.
பெரிய ஹோட்டல் என்றால், நிச்சயம் காலை உணவு இலவசமாக இருக்கும். ஆகவே, சரியான நேரத்தில் ஆஜராகி, எத்தனை வகை உணவு வைக்கப்பட்டிருக்கின்றனவோ, அத்தனையிலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து டேஸ்ட் பார்ப்பீர்கள். அந்த ஹோட்டலில் காணப்படும் வித்தியாசமான சிற்பங்கள், ஓவியங்கள் அருகே நின்று செல்ஃபி எடுத்துக்கொள்வீர்கள். அறைக்குத் திரும்பியதும் முழுமையாக ஏசியை வைத்து, போர்வையை நன்றாக போர்த்திக்கொண்டு தொலைக்காட்சி பார்ப்பீர்கள். அதாவது, அந்த ஹோட்டலில் என்னவெல்லாம் அனுபவிக்க முடியுமோ, அத்தனை வசதிகளையும் முழுமையாக அனுபவிப்பீர்கள்.
இப்படிப்பட்ட நல்ல வாய்ப்பு இனி கிடைக்காமல் போகலாம் என்ற நினைப்பில், எப்படியெல்லாம் அந்த அறையை முழுமையாக அனுபவிக்க முடியுமோ, அப்படி அனுபவிப்பீர்கள். இது போன்ற வாய்ப்புகளை முழு மகிழ்ச்சியுடன் அனுபவிக்கும் மனிதர்கள், அதே போன்ற வாய்ப்பு அவர்களுக்கு வாழ்நாள் முழுமைக்கும் வழங்கப்பட்டுள்ளது என்பதை மறந்துவிடுகிறார்கள்.
ஆம், இந்த உலகம், இந்த ஊர், வீடு, உடல், மனம் போன்றவையே அந்த நட்சத்திர விடுதி. இங்குள்ள காற்று, கடல், மலை, செடி, கொடி, விலங்குகள், பறவைகள் என எல்லாமே மனிதர்களுக்கு ஆனந்தம் தரக்கூடியவை. எனவே, இவற்றை திகட்டத்திகட்ட அனுபவிக்கலாம்.
இந்த உலகத்தை அனுபவிப்பதற்குப் பதிலாக, சொந்தம் கொண்டாட முயற்சிப்பது தான், வாழ்க்கையை போராட்டக் களமாறு மாற்றுகிறது. இந்த உலகமென்னும் ஸ்டார் ஹோட்டலில் இருந்து உங்களால் எதையும், எங்கேயும் கொண்டுபோக முடியாது.
எனவே, உலகமென்னும் ஹோட்டலை முழுமையாக அனுபவித்து வாழுங்கள். ஹோட்டலை காலி செய்வது போன்று மனநிறைவுடன் இவ்வுலகை விட்டுச் செல்லுங்கள்.
இதுவே மகிழ்ச்சி.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்