வள்ளல் ஆக மாறுங்கள்..
ஒருவருக்கு உதவி செய்யும்போது கிடைக்கும் இன்பத்திற்கு ஈடு, இணை இந்த உலகில் வேறு எதுவுமே இல்லை என்பார்கள்.
ஆனால், பணம் வைத்திருப்பவர்கள் தானே தானம், தர்மம் கொடுக்க முடியும். செல்வம் இல்லாதவர்கள் எப்படி உதவி செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா..?
தானம், தர்மம் செய்வதற்கு ஒருவர் பணக்காரராக இருக்க வேண்டியதில்லை, மனம் இருந்தால் போதும். ஆம், ஒவ்வொரு நபரிடமும் தேவைக்கும் அதிகமாக ஏதேனும் ஒன்று இருக்கத்தான் செய்யும். அதை பிறருக்குக் கொடுத்தாலே போதும்.
அப்படி என்னிடம் எதுவுமே இல்லை என்கிறீர்களா..? இதோ, இந்த சம்பவத்தைக் கேளுங்கள்.
டவுன் பஸ்ஸில் அமர்ந்திருந்தார் ஒரு நடுத்தர வயது டைலர். அந்த பஸ் நிரம்பிய நேரத்தில், ஒரு முதியவர் அவருக்குப் பக்கம் வந்து நின்றதும், உடனே டைலர் எழுந்துநின்று அந்த முதியவருக்கு இடம் கொடுத்தார்.
கொஞ்ச நேரத்தில் டைலருக்கு அருகே ஒரு இருக்கை காலியானது. அந்த இருக்கையில் டைலர் அமராமல், அருகே நின்ற வேறு ஒருவருக்கு அந்த இடத்தை விட்டுக்கொடுத்தார். அந்த பயணம் முழுவதும் மீண்டும் மீண்டும் டைலர் இருக்கையை பிறருக்கு கொடுத்துக்கொண்டே இருந்தார்.
இதனை நடத்துனர் பார்த்துக்கொண்டே இருந்தார். அந்த நபர் விரும்பினால் ஏதேனும் ஓர் இடத்தில் அமர்ந்திருக்க முடியும். ஆனால், அப்படி செய்யாமல் ஏன் கடைசி நிறுத்தம் வரை பிறருக்கு இருக்கையை கொடுத்துக்கொண்டே இருந்தார் என்பதற்கு காரணம் தெரியாமல் தவித்தார்.
ஒரு கட்டத்தில் ஆர்வத்தை அடக்க முடியாமல், டைலருக்கு அருகே சென்று, ‘’ஏன் நீங்கள் உட்காராமல், அந்த இடத்தை வேறு நபருக்குக் கொடுக்கிறீர்கள்’’ என்று காரணம் கேட்டார்.
அதற்கு அவர் பதில் என்ன தெரியுமா..?
“நான் படிக்காதவன்… பண வசதியும் இல்லை. அதிக அறிவும் இல்லை, ஆனாலும், மற்றவர்களுக்கு நான் எதையாவது கொடுக்க ஆசைப்படுகிறேன். என்னால் எளிதாக செய்யக்கூடிய ஒரே விஷயம் இதுதான். எனவே நான் எந்த பஸ்ஸில் ஏறினாலும் தினமும் என்னுடைய இருக்கையை பிறருக்குக் கொடுக்கிறேன். நாள் முழுவதும் நான் வேலை செய்கிறேன் என்றாலும், என்னால் இன்னும் சிறிது நேரம் நிற்க முடியும்.
நான் ஒவ்வொரு நபருக்கும் இருக்கை கொடுக்கும்போதும், அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி அரும்புவதைப் பார்க்கிறேன். அந்த மகிழ்ச்சி எனக்கும் மகிழ்ச்சி தருகிறது. அவர்களுக்கு உதவி செய்த திருப்தி அளிக்கிறது. எனவே, நான் ஒரு வள்ளல் போன்று சந்தோஷமாக வீட்டுக்குச் செல்கிறேன்’ என்று சொல்லிவிட்டு இயல்பாக நகர்ந்தார்.
ஆம், கொடுப்பதற்கு எதுவும் இல்லை என்று யாரும் தயங்க வேண்டியதில்லை. எல்லோரிடமும் ஏதேனும் ஒன்று இருக்கவே செய்யும். அதனை கண்டறிந்து பிறருக்குக் கொடுத்தால் போதும்.
ஆம், இல்லாமையிலும் இருக்கிறது மகிழ்ச்சி.