• Home
  • பணம்
  • வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாமுங்க….

வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாமுங்க….

Image

பணமே மந்திரம்

எல்லோருக்கும் கூடுதல் பணத்திற்குத் தேவை இருந்துகொண்டே இருக்கும். ஆனால், எப்படி பெறுவது என்பதற்கே வழி தெரிவதில்லை. தேடினால் நிச்சயம் சரியான வழி கிடைக்கும் என்பதே உண்மை. ஆண், பெண் என ஒவ்வொரு நபரிடமும் ஒரு திறமை மறைந்து கிடக்கவே செய்யும். ஆனால் அதனை எப்படி வெளியே கொண்டுவருவது என்பதுதான் அவர்களுக்குத் தெரிவதில்லை. பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும், உழைக்க தயாரான மனமும் இருந்தால் போதும், உட்கார்ந்த இடத்திலேயே கை நிறைய சம்பாதிக்கலாம்.

* தையல் வேலையோ, எம்பிராய்டரிங்கோ தெரியுமா? பொம்மை செய்வது, ஓவியங்கள் வரைவது, கைவினைப் பொருட்கள் செய்வது என்று ஏதேனும் தெரியுமா? அதையே மூலதனமாக வைத்து சம்பாதிக்கலாம். உங்களுக்குத் தெரிந்த வர்களிடம் உங்கள் கைவினைத் திறமைகளைப் பற்றி எடுத்துச் சொல்லுங்கள். நீங்கள் செய்தவற்றை அவர்களுக்கு மாதிரிக்குக் காட்டுங்கள். கொஞ்ச நாட்களில் அவற்றை மலிவு விலைக்கு விற்றுப்பாருங்கள். பிறகு அப்படியே வியாபாரத்தைப் பெருக்கலாம்.

* உங்களுக்கு டைப்ரைட்டிங் தெரியுமா? கம்ப்யூட்டர் ஆபரேட் செய்யத் தெரியுமா? அப்படியானால் உங்களுக்குத் தெரிந்த அலுவலகங்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கு டைப் ரைட்டிங் வேலைகளைச் செய்து கொடுங்கள். இப்போது ஆன்லைனில் ஏகப்பட்ட வாய்ப்புகள் வருகின்றன. அவற்றையும் தேர்வு செய்யுங்கள்.

* நீங்கள் வீட்டு விலங்குப் பிரியரா? அப்படியானால் கொஞ்சம் இட வசதிக்கு ஏற்பாடு செய்து விட்டு வளர்ப்புப் பிராணிகளுக்கான காப்பகம் ஒன்றை நடத்தலாம். அதில் உங்களுக்குத் தெரிந்தவர்கள் வீட்டுச் செல்லப் பிராணிகளை, அவர்கள் ஊருக்குச் செல்லும்போதும், மற்ற தேவையான சந்தர்ப்பங்களிலும் பார்த்துக் கொள்ளலாம். அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலிக்கலாம்.

* மெஹந்தி வரைவதில் நீங்கள் கில்லாடியா? உங்கள் வீட்டு வாசலில் ஒரு போர்டு வைத்து விடுங்கள். கல்யாணம் மற்றும் விசேஷங்களுக்கு மெஹந்தி டிசைன் போட்டு விடலாம். வீட்டிலேயே அதற்கான வகுப்பையும் எடுக்கலாம்.

* சாக்லேட், கேக், பிஸ்கட் போன்ற வற்றைத் தயாரிப்பதில் நீங்கள் நிபுணியா? பண்டிகை நாட்களுக்கு, பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு என ஆர்டர் எடுத்து அவற்றைச் செய்து விற்கலாம். அருகிலுள்ள பேக்கரிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்களுக்குத் தேவையானவற்றையும் செய்து கொடுக்கலாம்.

* குழந்தைகளிடம் அளவு கடந்த அன்பு வைத்திருப்பவரா நீங்கள்? உங்கள் வீட்டில் இட வசதி இருக்கும் பட்சத்தில் குழந்தைகள் காப்பகம் ஒன்றை நடத்தலாம். உதவிக்கு ஒன்றிரண்டு ஆட்களை வைத்துக் கொள்ளலாம்.

* உங்கள் வீட்டில் தோட்டம் போடுகிற அளவுக்கு இட வசதி உண்டா? மொட்டை மாடியாக இருந்தாலும் பரவாயில்லை. காய்கறித் தோட்டம் போடுங்கள். தினசரி சில மணி நேரத்தை அதைப் பராமரிப்பதில் செலவிடுங்கள். உங்கள் வீட்டுக்கான காய்கறிச் செலவை மிச்சப்படுத்தலாம். நீங்களே பயிரிட்ட காய்களை சாப்பிட்ட திருப்தியும் கிடைக்கும்.

* உங்களுடையது பெரிய வீடா? உபயோகிக்க ஆளில்லையா? அப்படியானால் உங்கள் வீட்டை வேலை செய்யும் பெண்களுக்கு ஹாஸ்டல் மாதிரி பயன்படுத்துங்கள். உணவுக்கு, தங்கும் இடத்துக்கு என்று பல வழிகளில் பணம் கிடைக்கும்.

* நல்ல குரல் வளம் உள்ளவரா நீங்கள்? பாடகியாகும் அளவுக்கு உங்களுக்கு வசதி வாய்ப்புகள் இல்லாமல் இருக்கலாம். பரவாயில்லை. படங்களுக்கு, விளம்பரங்களுக்கு, டி.வி தொடர்களுக்கு டப்பிங் குரல் கொடுக்கலாம். விளம்பர நிறுவனங்களுடன், டி.வி தொடர் தயாரிப்பாளர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

* எழுத்துத் துறையில் ஆர்வமுள்ளவராக இருந்தால் உங்களைக் கவர்கின்ற செய்திகளை, சுவாரசியமாக எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்புங்கள்.

* படித்த படிப்பு வீணாகிறதே என்று கவலைப்படுகிறீர்களா? உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுக்கலாமே? உங்கள் கல்வித் தகுதிக்கேற்ப குறிப்பிட்ட வகுப்புகள் வரை கற்றுத் தரலாம்.

* டெய்லரிங் தெரிந்திருந்தால் உங்கள் அக்கம் பக்கத்து வீட்டாருக்குத் துணிகள் தைத்துக் கொடுக்கலாம். பெரியளவில் தைக்கத் தெரியாவிட்டாலும் கூட மேல் தையல் போட்டுக் கொடுப்பது, ஓரம் அடித்துக் கொடுப்பது போன்ற சின்னச்சின்ன வேலைகளை செய்து தரலாம்.

மனம் இருந்தால் மார்க்கமுண்டு என்பார்கள். ஆம், சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் இருந்தால் போதும் கண்டிப்பாக உங்களால் சம்பாதிக்க முடியும். உங்கள் கைகளில் கொஞ்சம் பணம் புரள்வது உங்களை நம்பிக்கையுடன் இந்த உலகை எதிர்கொள்ள வைக்கும்.

Leave a Comment