• Home
  • சட்டம்
  • சண்டை போடாமலும் டைவர்ஸ் வாங்கலாம்… வழக்கறிஞரின் வழிகாட்டுதல்

சண்டை போடாமலும் டைவர்ஸ் வாங்கலாம்… வழக்கறிஞரின் வழிகாட்டுதல்

Image

எம்.நிலா, வழக்கறிஞர், ஜிஜி லீகல் சர்வீசஸ், மதுரை

திருமண உறவு என்பது ஒருவருக்கொருவர் ஆதரவாகவும் அன்புடனும் வாழ்வதற்கு உருவாக்கப்பட்டது. ஆனால், இந்த உறவுக்குள் சண்டை, சந்தேகம், ஏமாற்றம், துரோகம் நடக்கையில் வாழ்க்கையே துன்பமாகிறது. உடலும் மனமும் பாதிப்படைகிறது. குழப்பத்தினால் பொருளாதாரச் சிக்கலும் உருவாகிறது. இது போன்ற தருணங்களில் தெளிவான வழிகாட்டுதலும் சரியான முடிவும் அவசியம். விவாகரத்து வழக்குகளில் முடிவுகள் எட்டப்படாமல் பல ஆண்டுகள் இரண்டு குடும்பமும் அவதிப்படுவதை நிறையவே பார்த்திருக்கிறோம். ஆகவே, திருமண உறவுக்குள் சண்டை வருகையில் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். 

  • உண்மையான பிரச்னையைக் கண்டுபிடியுங்கள்

    ஒரு பிரச்னை அல்லது சண்டை வந்தவுடன் பிரிவது என்று உணர்ச்சிவசப்படாதீர்கள். எத்தகைய நல்ல தம்பதியர் என்றாலும் சின்னச்சின்ன சண்டைகள் வருவதைத் தவிர்க்க முடியாது. கருத்துவேறுபாடு எழுவதற்கும் சகிக்க முடியாத சண்டைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. ஆகவே, இது ஒரு தற்காலிகப் பிரச்னையா அல்லது தீர்க்க முடியாத சிக்கலா என்பதை கண்டுபிடியுங்கள். அமைதியாக அமர்ந்து நிதானமாக யோசியுங்கள். உங்கள் இணையர் கோணத்தில் இருந்து சண்டையின் காரணத்தைத் தேடிப் பார்த்தால் பிரச்னையின் ஆணி வேர் எதுவென கண்டுபிடித்துவிடலாம்.  

    • பிரச்னைக்கு முற்றுப்புள்ளி

    இரண்டு நாடுகளுக்கு இடையிலான பிரச்னைகளையே பேசித் தீர்க்கிறார்கள். அது போல் இரண்டு நபருக்கு இடையில் வரும் பிரச்னையையும் நிச்சயமாகப் பேசித் தீர்க்க முடியும். எனவே, சண்டையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள விருப்பம் இருக்கிறதா..? பேசினால் முடிந்துவிடுமா..? பேசினாலும் மீண்டும் மீண்டும் வருமா என்பதையெல்லாம் யோசியுங்கள். நிறைய சண்டையின் ஆரம்ப காரணம் மிகவும் சாதாரணமாக இருக்கும், அதன்பிறகு பேசிய பேச்சுகள், வன்முறையால் அந்த சண்டை பெரிதாக மாறியிருக்கும். எப்படியென்றாலும் முற்றுப்புள்ளி வைக்க முடியுமா? இணைவதால் உடல் நலனுக்கும் மன நலனுக்கும் எந்த பிரச்னையும் இல்லையா என்பதை தெளிவாக ஆய்வு செய்யுங்கள்.

    • இரண்டில் ஒன்று

    சண்டைக்குப் பிறகு சேர்வது அல்லது பிரிவது என எதுவாக இருந்தாலும் பிறரிடம் ஆலோசனை கேட்காதீர்கள். யாரும் உங்களுக்குத் துணையாக வர மாட்டார்கள். உங்கள் வாழ்க்கையை நீங்கள் மட்டுமே நகர்த்த வேண்டும். ஆகவே, சேர்வது அல்லது பிரிவது என்று எந்த முடிவு எடுத்தாலும் அதை திடமான மனதுடன் எடுங்கள். மற்றவர்கள் வழி காட்டினார்கள் என்று எந்த முடிவும் எடுத்து மாட்டிக் கொள்ளாதீர்கள்.

    4: சரியான வழக்கறிஞர் முக்கியம்

    திருமணத் தகராறு ஏற்படுகையில் மிகவும் சரியான வழக்கறிஞரைத் தேர்வு செய்யுங்கள். ஏனென்றால், உங்கள் வாழ்க்கையை அவர் கையில் ஒப்படைக்கிறீர்கள். அதை அவர் சரியாகப் புரிந்துகொண்டு உங்களுக்கு உதவ வேண்டும். அந்த வகையில் கீழ்க்கண்ட தகுதி கொண்ட வழக்கறிஞரை தேர்ந்தெடுங்கள்.

    • உங்கள் விவகாரத்தை ஆழமாகவும் பொறுமையுடனும் கேட்பவர்
    • உங்களுக்கு சரியான வழியை சுட்டிக் காட்டுபவர்
    • போதிய சட்டத் திறன் மட்டுமின்றி சமாதானம் பேசும் மனப்பான்மை கொண்டவர்.

    பொதுவாக ஒரு திருமண வழக்கை நீதிமன்றத்தில் ஓர் ஆண்டில் முடிப்பதும் 10 ஆண்டுகளாக நீட்டிப்பதும் வழக்கறிஞர் கையில் உள்ளது. எனவே, திறமையாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தும் வழக்கறிஞரால் பல ஆண்டுகளை சேமித்து உங்களுக்கு நிம்மதியைக் கொடுத்துவிட முடியும்.

    தவறான வழிகாட்டுதல்

    பல சமயங்களில், விவாகரத்து செய்வதற்குப் பதிலாக, சேர்ந்து வாழும் உரிமைக் கோரலுக்கு (RCR) மனு அளிக்கச் சொல்வார்கள். இது பிரச்னையைத் தீர்ப்பதற்கு உதவாது. ஒருவர் வேண்டாம் என்று உறுதியாகச் சொல்லும்போது விலகுதலே சரியான தீர்வு. அப்படியின்றி சேர்ந்து வாழ வேண்டும் என்று அடம் பிடிப்பது எதிர்காலத்தில் சேரவும், விவாகரத்து பெறவும் வழி காட்டாது. உண்மையைச் சொல்வது என்றால் இது பிரச்னையை மேலும் தீவிரப்படுத்திவிடும்.

    பொறுமை அவசியம்

    திருமணம் முடிப்பதற்கு முன்பு நிறைய நேரம் யோசித்திருப்பீர்கள். ஆனால், சண்டை வந்தவுடன் அவசரப்பட்டு பிரிதல் என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது. குடும்பம், நண்பர்கள், சமூக ஊடகங்கள் என பல கருத்துக்களை உங்கள் மீது திணிக்கப்படலாம். அவற்றுக்கெல்லாம் மதிப்பு கொடுக்காதீர்கள்.  ஏனென்றால், அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் தவறாகவே இருக்கும்.

    எங்களிடம் வரும் தம்பதியர்களை பேச்சுவார்த்தை மூலம் சேர்ந்து வாழ்வதற்கே ஆலோசனை சொல்கிறோம். அதற்கு வழி இல்லை என்றால் இரண்டு பேரும் இணைந்து பேசி நேர்மையான முறையில் விவாகரத்து பெறுவதற்கு வலியுறுத்துகிறோம். இதன் மூலம் இரண்டு தரப்பும் மன அமைதியும், நிம்மதியும் பெறுகிறார்கள். அதோடு அதிகபட்சம் 1 வருடத்திற்குள் வழக்கை முடித்து விவாகரத்து பெற முடிகிறது.

    எனவே, திருமணத்தில் வரும் எல்லா பிரச்னைகளுக்கும் நீதிமன்றத்துக்கு வரத் தேவையில்லை. அப்படி வருவது என்றாலும் தம்பதியர் நலன் நாடும் வழக்கறிஞரைத் தேர்ந்தெடுங்கள். வெற்றி தரும் வழக்கறிஞரைஅ விட உங்கள் வாழ்க்கையைப் பாதுகாக்கும் வழக்கறிஞரைத் தேர்வு செய்யுங்கள்.

    Leave a Comment