ஓஷோ சொல்வதைக் கேளுங்கள்
ஆத்மா என்ற வார்த்தை பலருக்கும் பிடித்தமானது. ஏனென்றால், அது அழிவற்றது என்ற நினைப்பே எல்லோருக்கும் இனிமையானது. தனக்கு அழிவே கிடையாது என்ற கற்பனையால் மனிதர்கள் ஈர்க்கப்படுகிறார்கள். மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கவும், வாழ்வதற்குமே மனிதர்கள் விரும்புகிறார்கள்.
ஆனால், ஆத்மா என்பதற்கு ஏதேனும் உறுதியான ஆதாரம் இருக்கிறதா என்றால், இதுவரை இல்லை. எனவே உண்மை என்னவென்றால், நீ என்பது உனது உடம்புதான்.
ஆத்மா பற்றி பல்வேறு கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அவை வெறும் கருத்துக்களே.. வெறும் நினைப்புகளே. நீ இருக்கும் நிலையில், இந்தக் கணத்தில், நீ என்பது வெறும் உடல் மட்டுமே. உன்னையே நீ ஒரு இறப்பற்ற ஆத்மா என்றும், அழிவற்ற உயிர் என்றும், ஏமாற்றிக் கொண்டிருக்காதே.
ஏன் ஆத்மாவை மனிதர்கள் நம்புகிறார்கள் என்ற காரணம் தெரியுமா..? அந்த நம்பிக்கை என்பது பயத்தின் அடிப்படையிலானது. ஏனென்றால் இள வயதில் பெரும்பாலோர் ஆத்மா பற்றி கண்டுகொள்வதே இல்லை. நீ பலவீனமடையும் பொழுது, உனக்கு வயதாகி விடும்போது, நீ கடவுளையும் அழிவில்லாத ஆத்மாவையும் நம்பஆரம்பிக்கிறாய். அதன்பிறகு நீ கோவிலுக்கோ அல்லது சர்ச்சுக்கோ அல்லது மசூதிக்கோ போவாய். அதனால்தான் அங்கு வயதான, இறக்கும் தருவாயில் உள்ளவர்களே அதிகம் குவிந்திருக்கிறார்கள்.
இளமை, அடிப்படையில் நாத்திகத் தன்மை கொண்டது, அது எப்பொழுதுமே அப்படித்தான் இருந்து வந்திருக்கிறது. நீ எவ்வளவு இளமையானவனோ, அந்த அளவு ஆத்திகம் குறைவாகவே இருக்கும். நீ எவ்வளவு இளமையானவனோ அந்த அளவு நம்பிக்கையின்மை அதிகமாக இருக்கும். ஏனெனில் நீ இளமையில் பலமுள்ளவனாக இருக்கிறாய். பயத்தை குறைவாக உணர்கிறாய். மேலும் நீ இறப்பை அறியாதவனாக இருக்கிறாய்.
இறப்பு எங்கோ வெகு தூரத்தில் இருக்கிறது. அது மற்றவர்களுக்கு மட்டுமே நிகழ்கிறது. உனக்கு இல்லை என்று நம்புகிறாய். ஆனால் வயதாக ஆக, அது உனக்கும் நிகழப் போகிறது என்று கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பிக்கிறாய்.
இறப்பு அருகே வரும்பொழுது, ஒருவன் நம்ப ஆரம்பிக்கிறான். எனவே எல்லா நம்பிக்கைகளும் பயத்தை அடிப்படையாகக் கொண்டவையே. ஆனால் இப்படி பயத்தின் காரணமாக நம்புபவன் தன்னையே ஏமாற்றிக் கொள்கிறான்.
நீ இப்போது உடலாகவே இருப்பதால் இதுவே உண்மை நிலையாக கருதுகிறாய். உனக்கு இறப்பற்றதைப் பற்றி எதுவும் தெரியாது. உனக்கு இறந்து கொண்டிருப்பதைப் பற்றித் தான் தெரியும். ஆனால் இறப்பற்றது அங்கே இருக்கிறது. அதை நீ தெரிந்து கொள்ள முடியும். ஆனால் வெறுமனே நம்புவதில் பயனில்லை.
எனவே உடலை மட்டும்தான் நம்ப வேண்டும். நீ உடம்பிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில் நீ உடம்பினுள்தான் இருக்கிறாய். இதுவும் கூட சரியில்லை. நீ உடம்பினுள் இருக்கிறாய் என்று நான் சொல்வது கூட சரியல்ல. உன்னைப் பொறுத்தவரை நீ உடம்பினுள் இல்லை. உடம்பாக இருக்கிறாய். உனக்கு உடம்பினுள் என்ன இருக்கிறதென்பது பற்றி எதுவும் தெரியாது. உனக்கு உடல் மட்டுமே தெரியும். எனவே உடம்பைத் தாண்டிய அனுபவம் என்பது இன்னும் வெகு தொலைவில் உள்ளது.
நீ மதவாதிகளிடம், தத்துவவாதிகளிடம் சென்றால், அவர்கள் ஆத்மாவிலிருந்து ஆரம்பிப்பார்கள். கிறித்துவ தத்துவவாதிகள், இன்னும் மற்ற மதத்தைச் சேர்ந்த எல்லோருமே உடம்பிற்கு எதிராக, அதை கண்டிப்பவர்களாகவே உள்ளனர். அவர்கள் ஒரு இருமையை, ஒரு பிளவை உருவாக்குகிறார்கள், நீ இரண்டானவன் என்பது போல. அவர்களுக்கு இந்த உடல் தீயது, எதிரி. எனவே அதோடு சண்டையிட வேண்டும். இந்த இருமை அடிப்படையிலேயே தவறானது. மேலும் இந்த இருமை உனது மனதை இரண்டாகப் பிரித்து, ஒரு பிளவுபட்ட மனிதனை உருவாக்குகிறது.
நீ ஒரு உடலாகப் பிறக்கிறாய்; நீ ஒரு உடலாக வாழ்கிறாய்; நீ ஒரு உடலாக நோய்வாய்ப்படுகிறாய்; உனக்கு வைத்தியம் செய்து, மருந்து கொடுத்து, உதவி செய்து, மீண்டும் முழு ஆரோக்கியமுள்ள ஒரு உடலாக ஆகிறாய். நீ இளமையான உடலாகிறாய்; நீ வயதான உடலாவாய்; நீ ஒரு உடலாக இறந்து போவாய். உனது முழு வாழ்வும் உடலை மையமாகக் கொண்டது.
வாழ்க்கை முழுதும் நீ என்ன செய்கிறாய்? உன்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறாய். உணவு, தண்ணீர், உறைவிடம் ஆகியவற்றால் நீ எதைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறாய்? இந்த உடலே காப்பாற்றப்படுகிறது. அழிவற்ற உன்னுடைய இருப்பை காப்பாற்றிக் கொள்ள நீ எந்த முயற்சியும் செய்யவே இல்லை.
நீ கடந்து செல்ல முடியும். ஆனால் அந்தப் பயணம் உடலின் மூலமாக, உடலால் செய்யப்பட வேண்டியதாகும். நீ உடலைப் பயன்படுத்தியே அடைய முடியும்.
எனவே காமத்திற்கு எதிராக உள்ள மரபுகள் எல்லாம் உடலுக்கும் எதிராகவே இருக்கும். காமத்திற்கு எதிராக இல்லாத மரபுகள் மட்டுமே உடலுக்கு நண்பனாக இருக்க முடியும். தந்த்ரா முற்றிலும் நட்போடு இருப்பது; உடல் புனிதமானது; புண்ணியம் வாய்ந்தது என்று தந்த்ரா சொல்கிறது. தந்த்ராவைப் பொறுத்தவரை உடம்பைக் கண்டனம் செய்வது என்பது புனிதமானதைப் பழிப்பதாகும். உடம்பு தூய்மையற்றது என்று சொல்வதும், உடம்பைப் பாவச்சுமை என்று சொல்வதும் தந்த்ராவைப் பொறுத்தவரை அறிவு கெட்ட செயலாகும்.
தந்த்ரா உடலை ஏற்றுக் கொள்கிறது. வெறும் ஏற்றுக் கொள்வது மட்டுமல்ல. மேலும் உடலைப் புனிதமானது; தூய்மையானது; களங்கமில்லாதது என்று சொல்கிறது. நீ அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நீ அதை ஒரு வாகனமாக, ஒரு வழியாகப் பயன்படுத்தி கடந்து செல்லலாம்! அது கடந்து செல்வதற்கும்கூட உதவி செய்கிறது.
ஆனால் நீ உடலோடு சண்டையிட ஆரம்பித்தால், தோற்றுப் போய் விடுகிறாய். நீ அதனோடு போராட ஆரம்பித்தால், நீ மேலும் மேலும் அதிகமாக நோய்வாய்ப்பட்டுப் போவாய். நீ தொடர்ந்து அதனுடன் போராடிக் கொண்டிருந்தால், வாய்ப்பைத் தவற விடுவாய். போராட்டம் எதிர்மறையானது. எனவே, உடலோடு சண்டையிடாதே. அதற்கு எந்த அவசியமும் இல்லை.
நீ ஒரு காருக்குள் உட்கார்ந்து கொண்டு, அந்தக் காரோடு போராடுவது போன்றது இது. இப்போது நீ நகர முடியாது. ஏனெனில் நீ நகர உதவும் வாகனத்துடனேயே சண்டையிட்டுக் கொண்டிருக்கிறாய். அதைப் பயன்படுத்த வேண்டுமே தவிர அதனோடு போராடக் கூடாது. மேலும் நீ உன் போராட்டத்தினால் அந்தக் காரை அழித்து விடுவாய். பிறகு நகர்வது மேலும் அதிக கடினமானதாகி விடும்.
உடல் ஒரு அழகான வாகனம். மிகவும் புதிர் நிறைந்தது. மிகவும் சிக்கலானது. அதைப் பயன்படுத்து. அதனோடு சண்டையிடாதே.
அதற்கு உதவி செய். நீ அதற்கு எதிராகச் செல்லும் கணத்திலேயே, நீ உனக்கு எதிராகச் செயல்பட ஆரம்பிக்கிறாய். எங்கோ செல்ல விரும்பும் ஒரு மனிதன், தன் கால்களுடனேயே சண்டையிட்டு அவற்றை வெட்டி விடுவது போன்றதே இது. உடலைத் தெரிந்து கொள். அதன் ரகசியங்களை அறிந்து கொள் என்று தந்த்ரா சொல்கிறது. அதன் சக்திகளைப் பற்றி அறிந்துகொள். அந்த சக்திகளை எப்படி நிலைமாற்றம் அடையச் செய்வதென்பதைத் தெரிந்துகொள். எப்படி அவற்றை நகர்த்தி, வேறுபட்ட பரிமாணங்களைக் கொண்டவைகளாக்குவது என்று தெரிந்துகொள்.
எனவே உங்கள் உடல் ஒரு வாகனம், அதை கண்டனம் செய்யாதீர்கள்.
- ஓஷோ.