என்ன செய்தார் சைதை துரைசாமி – 180
யோகா என்பது உடல், மனம், அறிவு போன்ற அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படும் அற்புதக் கலை. யோகாவை முறையாக கற்றுக்கொண்டு தினமும் பயிற்சி செய்தால் உடல், மனம் இரண்டும் கட்டுப்பாட்டுக்குள் வரும். அதனால் நோயற்று வாழ முடியும். இதன் பயனை தன் வாழ்நாளில் கண்கூடாக அனுபவித்து, தினமும் மூலிகை உணவு, இயற்கை உணவு மற்றும் யோகா மூலம் உடல்நலன் பேணி வருபவர் சைதை துரைசாமி. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று திருமூலர் பாடியது போன்று யோகா மூலம் தான் அடைந்த பலன்களை மக்களும் பெற வேண்டும் என்று விரும்பினார்.
ஆனால், இன்றைய ஒண்டுக்குடித்தன வாழ்க்கையில், நிம்மதியாக அமர்ந்து யோகா செய்வதற்கு இடம் கிடைப்பது கடினம். அதனால் அனைத்து பொதுமக்களும் பயன் பெறும் வகையில், பூங்காவில் யோகா செய்வதற்கு பிரத்யேகமாக நவீன மேடைகள் அமைக்கப்பட்டன. அதேபோன்று இடவசதி இருக்கும் பூங்காக்களில் எல்லாம் பிரமீடு வடிவிலான தியான கூடங்களும் அமைக்கப்பட்டன.
யோகா, தியானம் போன்றவற்றை கடைப்பிடிக்காத பொதுமக்கள் கூட, மேயர் சைதை துரைசாமியால் உருவாக்கப்பட்ட பிரத்யேக கூடங்களைக் கண்டதும் ஆர்வமாக யோகா செய்வதற்கும் தியானம் செய்வதற்கும் முன்வந்தனர். பொதுநல சங்கத்தினர் தாமாகவே முன்வந்து யோகா வகுப்புகள் நடத்தினார்கள். பூங்காக்களில் யோகா கற்றுக்கொண்டு, ஏராளமான பொதுமக்கள் உடல் ரீதியிலும், மனரீதியிலும் பெரும் பயன் அடைந்தனர் என்றால், அதற்கு முழுக் காரணமும் சைதை துரைசாமிதான்.
அதோடு பூங்காக்களில் நடைபயிற்சி செய்பவர்கள் பாதங்களுக்கு அஃகுபிரஷர் செய்யும் வகையில், நவீன முறையில் கூழாங்கற்களால் ஆன நடைபாதை அமைக்கப்பட்டன. இந்த கூழாங்கற்களில் நடக்கும்போது ரத்தவோட்டம் தூண்டப்படுவதால் நரம்புகளில் புத்துணர்ச்சி கிடைக்கும். அதனால் குறுகிய நேரம் அல்லது சிறிய தூரம் நடந்தாலே சுறுசுறுப்பும் ஆரோக்கியம் கிடைத்துவிடும். இப்படி சின்னச்சின்ன விஷயங்களிலும் மாற்றம் செய்து பொதுமக்களிடம் நற்பெயரை சம்பாதித்தார் மேயர் சைதை துரைசாமி.
- நாளை பார்க்கலாம்.