சனாதனத்தில் ஸ்டாலின் கையாலாகத்தனம்
சினிமாவுலகில் பலரும் இளையராஜாவை சாமி என்றே கூப்பிடுகிறார்கள். ஏனென்றால் அவரது பேச்சு, செயல், திறமை எல்லாமே மனிதசக்திக்கு அப்பாற்றப்பட்ட ஒன்று. சங்கீத உலகின் சாம்ராட் என்று போற்றப்படும் இளையராஜாவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் நடந்திருப்பது கொடூரமான, அப்பட்டமான சாதிய வன்முறை.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறைக்குள் இளையராஜா செல்ல முயன்ற நேரத்தில் விதிமீறல் என்று வெளியே தள்ளப்பட்டிருக்கிறார். இசைக்கு கடவுளா இருந்தாலும், ஆளும் கட்சியின் எம்.பி.யாக இருந்தாலும் ஏன் குடியரசு தலைவராவே இருந்தாலும் வெளியே நின்றே சாமி கும்பிட வேண்டும் என்று சனாதன தர்மத்தின் தீண்டாமையை உரக்கச்சொல்லி நிலைநாட்டியிருக்கிறார்கள்.
இப்படித்தான் ஆண்டாள் பற்றி வைரமுத்து கூறிய கருத்துக்கு எதிராக இந்து சமூகம் என்று ஜீயர்கள் கொதித்து எழுந்தார்கள். வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அடம் பிடித்தார்கள். அப்போதும் ஸ்டாலின் எதுவும் பேசாமல் அமைதி காத்தார்.
இப்போது அதே நிலையில் இளையராஜா விவகாரத்திலும் அமைதி காக்கிறார். தமிழ்நாட்டில் இருக்கும் கோவிலில், அதுவும், தமிழ்நாட்டு அரசாங்கத்தினுடைய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில், இன்னும் சொல்லப்போனால் பெரியார் மண்ணில் இருக்கும் கோயிலில் இளையராஜாவுக்கு ஒரு அவமானம் என்றதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டாமா..?
சனாதனத்தின் மூலமாக நடைபெறும் பிரச்சனைக்கு பின்பு, அதன் மீது அரசாங்கத்தினுடைய நடவடிக்கைகள் என்ன..?? அதிகாரம் கையில் இருந்தும் நடவடிக்கைகள் எடுப்பதில் என்ன தயக்கம். திருவல்லிப்புத்தூரில் அவமதிக்கப்பட்டிருப்பது இளையராஜா என்ற தனிநபர் அல்ல தமிழ்ச் சமூகம் ! சனாதானத்தை எதிர்க்கிற திராவிட மாடல் அரசு தமிழர்களின் இசை அடையாளமாக இருக்கக் கூடிய இளையராஜா அவர்களை அவமதித்த இந்த ஜூயர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது திராவிட அரசு என்று சொல்லிக்கொள்வதற்கு அர்த்தம் இருக்கும்.
இளையராஜா கருவறைக்குள்கூட நுழைய முற்படவில்லை; கருவறைக்கு முன்பிருந்த மண்டபத்துக்குள்தான் நுழைந்தார். அதற்கே தடைவிதித்து வெளியேற்றியிருக்கிறார் ஜீயர். 100 ஆண்டுகளுக்கு முன்பு, வைக்கத்தில் கோயில் நுழைவுப்போராட்டம் நடத்தி பெரியார் சமூக நீதியை நிலைநாட்டினாரெனப் பேசும் முதல்வர் ஸ்டாலின், ஐயா இளையராஜாவை அதே மண்டபத்துக்குள் அழைத்துச் செல்லட்டடும். தாராளமாகப் பாராட்டலாம். அதை செய்ய முதல்வர் ஸ்டாலினுக்கு தெம்போ, திராணியோ, முதுகெலும்போ, வீரமோ, ஆண்மையோ இருக்கிறதா? என்று நாம் தமிழர் தம்பிகள் கேட்கிறார்கள்.
உண்மையில் ஸ்டாலினுக்கு முதுகெலும்பு இருக்கிறதா..?