திருட்டு கடவுள் குருட்டு பக்தி

Image

மஹராஜ் – சினிமா எனும் வாழ்க்கை

மதத்தின் பெயரைச் சொல்லி மனிதனை முட்டாள் ஆக்குவது ரொம்பவும் எளிது. அடுத்த ஜென்மத்தில் உனக்கு நன்மை கிடைக்கச் செய்கிறேன் என்று ஆசை காட்டினால் தன்னுடைய பணம், உழைப்பை அள்ளிக் கொடுப்பார்கள். சாமியார் விரும்பினால் மனைவியையும் மகளையும் சந்தோஷமாகக் கூட்டிக் கொடுப்பார்கள். பலி கேட்டால் பிள்ளையை வெட்டிப் போடுவார்கள். அதை பெருமையாகவும் நினைப்பார்கள்.

காலம் காலமாக நீடித்துக்கொண்டே இருக்கும் இந்த முட்டாள்தனத்தின் அடிப்படையில் நடந்த உண்மை சம்பவத்தை விவரிக்கிறது மஹராஜ் திரைப்படம்.

மதத்தின் பெயரைச் சொல்லி ஏமாற்றுவது பழைய காலத்தில் தான் சாத்தியம், இப்போது மக்கள் விழிப்புணர்வு பெற்றுவிட்டார்கள் என்று பேசுபவர்களை ஒருபோதும் நம்பாதீர்கள். ஏனென்றால், பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலையின் மீது உருளும் சடங்கு தெய்வீகமானது என்று நீதிமன்றங்கள் இந்த ஆண்டு தான் தீர்ப்பு வழங்கியிருக்கின்றன. போலே பாபா காலடி மண் எடுப்பதற்குச் சென்று 120க்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆண்டு தான் பலியாகி இருக்கிறார்கள்.

மதத்தை இப்போதும் மக்கள் குருட்டுத்தனமாக நம்புகிறார்கள். அதனாலே, இந்து குருமார்கள், கிறிஸ்தவ பாதிரியார்கள், இஸ்லாம் போதகர்கள் என்று அத்தனை பேரும் அயோக்கியத்தனம் செய்து செல்வத்தில் செழிக்கிறார்கள். கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இணைப்புப் பாலம் என்று வருபவர்கள், ஒரு கட்டத்தில் தங்களையே கடவுள் என்கிறார்கள். அதையும் மனிதர்கள் ஏற்றுக்கொண்டு வழிபடுகிறார்கள்.

வனத்தை அழித்து ஈஷோ யோகா மையம் கட்டியிருக்கும் ஜக்கி வாசுதேவிற்கு மிகச்சிறந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் என்று விருது இப்போது வழங்கப்படுகிறது. அவர் வனத்தை அழித்தாரா இல்லையா என்பதை இன்னமும் அரசு ஆய்வு செய்யவில்லை என்று சட்டமன்றத்தில் பேசுவதும் இந்தக் காலம் தான்.

கோயிலுக்கு வரும்போது தலையை விரிச்சுப்போட்டு வர்றது தப்பு என்றும், பகவானை தரிசிக்கும்போது ஆண்கள் மேல் சட்டை அணியக் கூடாது என்று ஒரு மதம் இந்த காலத்தில் தான் தடை போடுகிறது. பெண்கள் தங்கள் உடம்பை ஆண்களுக்குத் தெரியாமல் மறைக்க வேண்டும் என்று ஒரு மதம் பெண்களுக்கு பாடம் எடுக்கிறது. தன் உடலில் கர்ப்பம் தரித்த பெண்ணுக்கு, அதனை அழிக்கும் உரிமை இல்லை என்று ஒரு மதம் இப்போதும் தடை போடுகிறது.

மதத்தின் பெயரால் காலம் காலமாக ஏமாற்று வேலை நடந்துகொண்டே இருக்கிறது. அப்படி ஆங்கிலேயர் காலத்தில் அதாவது 1862ம் ஆண்டு நீதிமன்றத்தில் தோலுரிக்கப்பட்ட ஒரு சீட்டிங் சாமியாரைக் காட்டியிருக்கிறது மஹராஜ்.

இன்றைய நவீன சினிமாவுக்கு உரிய தரமான காட்சியமைப்பு, விறுவிறுப்பான திரைக்கதை, சிறப்பான காட்சியமைப்பு போன்றவை இல்லை என்றாலும், உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட கதை என்பதற்காகவும், மதத்தின் பெயரால் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதை புரிந்துகொள்வதற்காகவும் பார்க்க வேண்டிய பட்டியலில் இந்த படம் சேர்கிறது.  

ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தால் அது உண்மையாகி விடும் என்பதற்கு உதாரணமாக வாழும் கடவுளாக ஜேஜே எனும் வைணவ மஹராஜ் இருக்கிறார். அவரை கிருஷ்ணரின் அவதாரம் என்றே மக்கள் நம்புகிறார்கள். கிருஷ்ணர் விக்கிரத்துக்குப் போலவே அவருக்கும் அபிஷேகம் நடக்கிறது. கிருஷ்ணருக்குப் போலவே அவருக்கும் ஆரத்தி காட்டப்படுகிறது. அவருடைய செல்வாக்கு காரணமாகவே அந்த ஊரில் செல்வம் கொட்டுகிறது என்று மக்கள் நம்புகிறர்கள். அத்தனை பேரும் அவரை கடவுளாகவே பாவிக்கிறார்கள்.

பாத பூஜை எனும் சடங்கை மஹராஜ் மிகவும் வெளிப்படையாகச் செய்கிறார். பாத பூஜை என்பது அவர் தேர்ந்தெடுக்கும் பெண்ணுடன் சல்லாபம் புரியும் சடங்கு. இந்த சடங்கில் மஹராஜுடன் சல்லாபிக்கும் வாய்ப்பு கிடைப்பதை பெண்கள் பெருமையாகக் கருதுகிறார்கள். தங்கள் வீட்டுப் பெண் பிள்ளைக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதை பெற்றோர்கள் இனிப்பு கொடுத்து கொண்டாடுகிறார்கள். பாத பூஜையில் பங்கேற்கும் பெண்ணும் அதை தனக்குக் கிடைக்கும் மிகப்பெரும் பாக்கியம் என்றே கருதுகிறாள்.

அதோடு, அந்த சடங்கை பணம் இருக்கும் மனிதர்கள் மாடத்தில் இருந்து வேடிக்கை பார்க்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. ஒரு பெண்ணின் கற்பை சூறையாடும் நிகழ்வை ஒரு புனிதமான பூஜை போன்று மக்களை ஏமாற்றி செய்துவருகிறான் மஹராஜ்.

எல்லாவற்றையும் கேள்வி கேட்கும் கர்ஸன் தாஸ் அந்த ஊரில் இருக்கும் அத்தை வீட்டுக்கு வருகிறான். படிப்பு முடிந்ததும் கிஷோரியை திருமணம் முடிப்பதற்குக் காத்திருக்கிறான். ஜாதியின் பெயரால் நடக்கும் கொடுமை, விதவை என்ற பெயரில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி போன்றவற்றை தட்டிக் கேட்கும் சீர்திருத்த எழுத்தாளனாக இருக்கிறான்.

இந்த நிலையில் ஜேஜேவுக்கு பாதபூஜை செய்வதற்கு கிஷோரி தேர்வு செய்யப்படுகிறாள். அதை மிகவும் பெருமையாகக் கருதுகிறாள். அன்றைய இரவு தன்னை ஜேஜேவுக்கு அர்ப்பணம் செய்கிறாள்.

அந்த தகவல் கேள்விப்பட்டு ஓடிவந்து படுக்கையறையில் இருக்கும் கிஷோரியை தடுத்து நிறுத்துகிறான். தன்னோடு வந்துவிடுமாறு அழைக்கிறான். இந்த பூஜையைத் தடுத்தால் நீ அடுத்த பிறவியில் மிருகமாகப் பிறப்பாய் என்று மாடத்தில் இருந்து வேடிக்கை பார்ப்பவர்கள் சத்தம் போடுகிறார்கள். ஆனாலும், கிஷோரியை அழைத்துச்செல்வதில் உறுதியாக இருக்கிறான்.

ஆனால், கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டதை பாக்கியமாகக் கருதும் கிஷோரி, அவனுடைய அழைப்பை ஏற்க மறுக்கிறாள். தான் செய்வது புண்ணியச் செயல் என்றும் என்னுடைய நம்பிக்கையில் தலையிடாதே என்றும் அவனை வெளியே விரட்டுகிறாள்.

படித்த பெண்ணான உனக்கு ஜேஜே உன்னை பயன்படுத்திக்கொள்வது  புரியவில்லையா என்று கேள்வி கேட்கிறான். அப்போதும் கிஷோரி ஜேஜே மீது பைத்தியக்காரத்தனமான பக்தியில் இருக்கிறாள்.

அடுத்த நாள் தன்னுடைய தங்கையை பாதபூஜைக்கு ஜேஜே தேர்வு செய்தது தெரிந்த பிறகே, இது கடவுளின் பெயரைச் சொல்லி பெண்களுக்கு திட்டமிட்டு இழைக்கப்படும் அநீதி என்பதை உணர்கிறாள். படித்திருந்தும் முட்டாள்தனத்தில் விழுந்ததை எண்ணி வருந்துகிறாள். கர்ஸனுடன் வாழ்வதற்கு தனக்கு அருகதை இல்லை என்று தற்கொலை செய்துகொள்கிறாள்.

அதோடு, மஹராஜ் இழைத்துவரும் கொடுமைகளை மக்களிடம் அம்பலப்படுத்துமாறும் வேண்டுகோள் வைக்கிறாள். பக்தியின் பெயரால் அப்பாவி மக்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை கர்ஸன் எழுத நினைக்கிறான். ஆனால், பத்திரிகைகள் அச்சிட மறுப்பதால், அவனே பத்திரிகை தொடங்குகிறான்.

மஹராஜ் கடவுளின் பெயரைச் சொல்லி ஏமாற்றுவதை பத்திரிகைகளில் எழுதி அம்பலப்படுத்துகிறான். இதனால் கோபமாகும் மஹராஜ் 50 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுக்கிறார். மன்னிப்பு கேட்டுக்கொண்டால் வழக்கை வாபஸ் வாங்குகிறேன் என்கிறார் மஹராஜ். வழக்கில் தோற்றுப் போனால் கட்டுவதற்கு என்னிடம் பணம் இல்லை. அதற்காக சிறையில் இருப்பேனே தவிர, மன்னிப்பு கேட்க மாட்டேன் என்பதில் உறுதியுடன் இருக்கிறான் ஹர்சன்.

அந்த வழக்கில் மஹராஜ்க்கு எதிராக சாட்சி சொல்ல முன்வந்தது யார்.? நீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு கிடைத்தது என்பதை திரையில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த படத்தில் இந்தி சூப்பர்ஸ்டார் அமீர்கானின் மகன் ஜூனைத்கான் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். நடிப்பில் இன்னமும் ரொம்பவே முதிர்ச்சி தேவை. அழுத்தமான கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பு இல்லை என்பதாலே படத்தில் தொய்வு ஏற்படுகிறது. அதேநேரம், கிஷோரியாக வரும் ஷாலினி பாண்டே, மஹராஜாக வரும் ஜெய்தீப், காதலியாக வரும் சர்வாரி சிறப்பாகப் பங்களித்திருக்கிறார்கள்.

தன்னை கடவுளின் அவதாரமாக நம்ப வைப்பதற்கு பக்தர்களின் கைகளின் மீது ஜேஜே நடந்து வருவதும், நீதிமன்றத்தில் தனி சிம்மாசனம் போட்டு அமர்வதும், கீதையை சொன்னதே நான் தானே, நான் அதன் மீது சத்தியம் செய்ய வேண்டுமா என்று கேட்பதெல்லாம் பலே ரகம்.

சரியான கதையை எடுத்துக்கொண்டு இயக்கியிருக்கும் மல்கோத்ரா சித்தார்த், திரைக்கதையில் இன்னமும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் அற்புதக் காவியமாக மலர்ந்திருக்கும். உண்மையை எந்த சக்தியாலும் மறைக்க முடியாது என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறது, மஹராஜ்.

அதேநேரம், ஆங்கிலேயர் ஆட்சி காலம் என்பதாலே மதத்தின் போர்வையில் மஹராஜ் செய்த அயோக்கியத்தனம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. இன்றைய காலம் என்றால் மஹராஜிடம் பணம் வாங்கிக்கொண்டு அவரை ஏதேனும் ஒரு தேசத்துக்கு ஆட்சியாளர்கள் வழியனுப்பி வைத்திருப்பார்கள். நித்தியானந்தா வழியில் மஹராஜும் ஏதேனும் ஒரு தேசத்தில் சுதந்திரமாகத் திரிந்திருக்கலாம். நமக்கு இப்படி ஒரு படம் கிடைத்திருக்காது.

அனைவரும் பார்க்க வேண்டிய படமல்ல, பாடம்.

பின்குறிப்பு :

இந்த கட்டுரை வெளியாகியிருக்கும் ஞானகுரு மகிழ்ச்சி ஜூன் மாத இதழ் முழுமையாகப் படிப்பதற்கு இந்த லிங்க் தொட்டுச் செல்லுங்கள். அட்டையைத் தொட்டால் இதழ் விரியும். படியுங்கள் பரப்புங்கள்.

Magizchi July 2024 – ஞானகுரு (gyaanaguru.com)

Leave a Comment