மருத்துவ விழிப்புணர்வு
எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் ஆரோக்கியப் பதிவுகளுக்கு எக்கச்சக்க வரவேற்பு உண்டு. வயிறு ஆரோக்கியத்திற்கு சிம்பிள் வழி சொல்லித்தருகிறார் எழுத்தாளர்.
கட் ஹெல்த் அவர்னஸ் முகாம் (Gut Health Awareness Camp) கோவையில் நடந்தபோது ஒரு கேஸ்ட்ரோ டாக்டரை நான் சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர் சொன்ன ஒரு விஷயம் இது.
“சார் வயிறு என்பது ஒரு மனிதனின் இரண்டாவது மூளையைப் போன்றது. மூளை நம்முடைய உடல் உறுப்புகளைக் கட்டுப்படுத்தி எப்படி வைத்திருக்கிறதோ, அதே போல் குடலும் நம்முடைய ஆரோக்கியத்தை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள விரும்புகிறது.
ஒருமனிதன் அதிர்ச்சியான செய்தியைக் கேட்டால், அவனுடைய மூளை அதிர்ச்சி அடைவதற்கு முன்பாக அவனுடைய அடிவயிறுதான் முதலில் கலங்கும். பாத்ரூமை நோக்கி ஓட வைக்கும். அதன் பிறகே, மூளை என்ன நடந்தது என்பதை அறிய விரும்பும்.
இந்த இரண்டாவது மூளையான குடலைப் பற்றி நம்மில் பெரும்பாலானோர் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை.
Fast Food, Mid Night Biriyani சாப்பிட்டு குடல் சம்பந்தப்பட்ட பிரச்னை வந்த பிறகுதான், எங்களிடம் வருகிறார்கள் லட்சக்கணக்கில் சிகிச்சைக்காக செலவு செய்கிறார்கள்.
அதற்கெல்லாம் அவசியமே இல்லாமல், நான் சொல்லும் ஒரு எளிய வழியை பின்பற்றினாலே போதும் பெரும்பாலான குடல் நோய்கள் வரவே வராது. ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி… 40 வயதுக்கு மேல் உணவு பழக்க வழக்கத்தில் கண்டிப்பாக மாற்றம் வேண்டும்.
நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் குடலில் நல்ல பாக்டீரியாக்கள் இருக்க வேண்டும். நல்ல பாக்டீரியாக்கள் உருவாக ஒரே வழி இதுதான்.
இரவு படுக்கப் போகும் ஒரு டம்ளர் மோரில் ஒரு கரண்டி வெந்தயத்தை போட்டு ஊற வைத்து விட வேண்டும். மறுநாள் காலை எழுந்ததும் பல் துலக்கிவிட்டு அந்த வெந்தயத்தைச் சாப்பிட்டு மோரைக் குடித்து விட வேண்டும்.
இதன் காரணமாக குடலில் Lactobacillus போன்ற நல்ல பாக்டீரியாக்கள் உருவாகி ஜீரண மண்டல உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும். கெட்ட பாக்டீரியாக்கள் அழிந்து விடும்.
முக்கியமாக..வெறும் வயிற்றில் காஃபி, டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். காஃபி, டீ சாப்பிட வேண்டுமென்றால் MidMorning அல்லது MidDay யில் அரை கப் சாப்பிடலாம். ஹோட்டல்களில் இருக்கும் காஃபி டம்ளர்களின் அளவைப் பார்த்தாலே உங்களுக்குப் புரியும்.
இப்படி கட்டுப்பாடோடு இருந்து விட்டால் யாரும் கேஸ்ட்ரோ டாக்டரிடம் வர வேண்டிய அவசியமும் இல்லை.இது போன்ற முகாம்கள் நடத்தப்பட வேண்டிய தேவையும் இல்லை” என்றார்.
பி.கு.
இதை எனக்குச் சொன்னவர் கோவையில் உள்ள பிரபலமான நெம்பர் ஒன் Gastroenterologist டாக்டர்.












