எழுத்தாளர் ராஜேஷ்குமாருடன் ஒரு நேர்காணல்
தமிழில் 1500 நாவல்கள் எழுதி கின்னஸ் சாதனை படைத்தவர் எழுத்தாளர் ராஜேஷ்குமார். க்ரைம் கதை மன்னன் என்று வாசகர்களால் அழைக்கப்படும் ராஜேஷ்குமார் தனது முக்கால் நூறாண்டு கால ஆரோக்கிய ரகசியங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.
இந்த உலகத்தில் பெரிய செல்வம் ஆரோக்கியம் தான் என்பது எனது நம்பிக்கை.
கோடிக்கணக்கான ரூபாய் கையில் வைத்திருந்தாலும் இரண்டு இட்லி கூட சாப்பிட முடியாத நிலையில் உள்ளவர்கள் உண்மையான கோடீஸ்வரர்கள் அல்ல, ஏழைகள் தான். குடிசையில் வாழ்ந்தாலும் விரும்பியதைப் பசியோடு ருசியோடு மன நிறைவோடு சாப்பிட்டு ஜீரணமாகி, படுத்து, தூங்கி எழுபவர்கள் ஏழைகள் அல்ல, பணக்காரர்கள்.
பசித்து ருசித்து விரும்பியதைச் சாப்பிடுவது போல் ஒரு வாழ்க்கை வேறில்லை.
நாம் எவ்வளவு உழைத்தாலும் இந்த உடல் நலனைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது நமது கடமை. நான் எப்போதும் உடல் நலத்தில் கவனமாக இருப்பேன். எனது தாத்தா, தந்தை என்று யாருக்குமே புகை, மது போன்ற எந்த தீய பழக்கங்களும் கிடையாது .அது போல எனக்கும், எனது மகன்கள், பேரன்களுக்கும் எந்த தீய பழக்கங்களும் கிடையாது.
நான் ஒரு காலத்தில் அசைவப் பிரியராக இருந்தேன். 2010 வரை விரும்பியதைச் சாப்பிட்டு வந்தேன். எனது மகன்கள் திருமணம் ஆகி வெளியே சென்ற பிறகு மெல்ல மெல்ல அசைவத்தைக் குறைத்துக் கொண்டேன் .வாரம் ஒரு நாள் மீன், முட்டை சாப்பிட்டேன். எனது மனைவி சுத்த சைவம். எனக்காக அவர் சமைக்கிறார் என்று நினைத்து, ஒரு கட்டத்துக்கு மேல் அசைவத்தை தவிர்த்து, வயது கருதி 60 வயதுக்குப் பிறகு முழு சைவம் ஆகிவிட்டேன்.
நொறுக்குத்தீனி
நான் எப்போதும் நொறுக்குத் தீனி தின்பதே கிடையாது. பிரியத்துக்குரிய வாசகர்கள் எங்கள் ஊரில் இது விசேடம் என்று கூறிக்கொண்டு ஏதாவது நொறுவைகள் கொண்டு வரும் போது, தவிர்க்க முடியாமல் சிறிது எடுத்துக் கொள்வேன், அவ்வளவுதான் .மற்றபடி நொறுவைகள், எண்ணெயில் பொறிக்கப்பட்டவை பாக்கெட்டில் அடைக்கப்பட்டவைகளை நான் சுத்தமாகத் தொடுவதே கிடையாது.
முன்பெல்லாம் நான் காலையில் நடைப் பயிற்சி செல்லும் போது வெளியில் சந்திப்பவர்கள் நிறைய பேசுவதால் வாக்கிங் என்பதே டாக்கிங் போல மாறியதால் இப்போது வெளியே நான் வெளியே நடைப் பயிற்சி செல்வதில்லை. எனது வீட்டைச் சுற்றியும் வீட்டுக்குள்ளும் நடக்கிறேன். அது போதும் என்று நினைக்கிறேன்.

நான் எளிய உடற்பயிற்சிகள் தான் செய்வேன். சம்மனங்கால் போட்டு ஐந்து நிமிடம் அமர்வேன். பூஜை நேரத்தில் இப்படி 20 நிமிடம் அமர்ந்திருப்பேன். அது யோகா போல் நல்ல பலனைத் தரும். நான் நாற்காலியில் அமர்ந்து எழுதினாலும் கூட மணிக்கு ஒரு முறை 5 நிமிடம் நடப்பேன். அது ஒரு பயிற்சி.
வியர்வை வெளியே வந்து பயிற்சி செய்தால் தான் நல்லது என்பார்கள். என்னைக் கேட்டால் எளிமையான பயிற்சிகளும் நல்ல பலனைத் தரும். உடலின் அவயங்களுக்கு அசைவுகள் இருந்தாலே போதும். அதன் மூலமே ஒரு புத்துணர்ச்சி கிடைத்துவிடும். வேக நடை நடந்து மூச்சு வாங்குவதெல்லாம் இல்லை.
நான் கடினமான உடற்பயிற்சிகள் செய்வதில்லை. உடற்பயிற்சிகளை வீட்டுக்குள்ளேயே செய்வேன். அதிலேயே குனிவது நிமிர்வது வளைவது என்று அனைத்தும் அடங்கிவிடும். தூங்கப் போகும் முன்பு பிராணாயாமம் செய்து ஐந்து நிமிடம் மூச்சுப் பயிற்சி செய்வேன் அவ்வளவுதான் .நான் உடலை வருத்தி எப்போதும் பயிற்சிகள் செய்வதில்லை. இவற்றின் மூலமே எனக்குப் புத்துணர்ச்சி கிடைத்துவிடுகிறது.
எனது வீட்டில் ஒரு மூலிகைத் தோட்டம் இருக்கிறது. அதிகாலை நடைக்குப் பிறகு அதில் உள்ள செம்பருத்தி இதழ்கள், கற்பூரவல்லி, வெற்றிலை, கருவேப்பிலை, கொஞ்சம் பிரண்டை போட்டு கொதிக்க வைத்து அதில், மஞ்சள், சீரகம் மிளகு போட்டுக் காய்ச்சி, எலுமிச்சைச் சாறு கலந்து தினசரி குடிப்பது என் வழக்கம். இது பல்வேறு உடல் உபாதைகளுக்கு நல்ல மருந்தாகும்.
எதற்கெடுத்தாலும் டாக்டரிடம் செல்வது எனக்குப் பிடிக்காது. அதற்கு முன்பாக, கை வைத்தியம் சிலவற்றைப் பார்த்து விட்டுத்தான் நான் செல்வேன். தவிர்க்க முடியாத பட்சத்தில்தான் நான் டாக்டரிடம் செல்வேன்.
வெந்நீரில் கல் உப்பு போட்டு அவ்வப்போது வாய்க் கொப்புளித்தாலே தொண்டை சார்ந்த பிரச்சினைகள் வராது. தொண்டைப் பிரச்சினைக்கு தினசரி மூன்று முறை இப்படி வாய் கொப்புளித்தால் அது குணமாவதைப் பார்க்கலாம். சாதாரண காய்ச்சல் என்றாலும் சளி என்றாலும் டாக்டரிடம் சென்றால் ஆண்டிபயாட்டிக் தருவார்.
பூண்டு, மிளகு போட்டு காய்ச்சிய பாலைக் குடித்தால் இதற்கு நல்லது .தொடர்ந்து இரண்டு முறை சாப்பிட்டால் இரண்டு நாளில் சரியாகும்.
இரவு தூக்கம்
முன்பெல்லாம் இரவு 11 மணி 12 மணி வரை எழுதுவேன். இப்போது அதை நிறுத்தி விட்டேன். இப்போது நேரத்தைச் சரியாகத் திட்டமிட்டுக் கொண்டு பத்து மணிக்கு தூங்கப் போய் விடுவேன். தூக்கம் வருகிறதோ இல்லையோ நான் படுக்கைக்குச் சென்று விடுவேன். டிவி பார்க்கும் பழக்கம் எனக்கு இல்லை. ஏதாவது முக்கியமான செய்தி என்றால் மனைவி பார்த்துச் சொல்வார் அவ்வளவுதான். சினிமா பார்க்கும் ஆர்வமும் கிடையாது. தூக்கம் மனித ஆரோக்கியத்திற்கு முக்கியம் என்பதைப் பலரும் அறிவதில்லை.
காலை உணவு அதிகம் சாப்பிடுவேன். மூன்று இட்லி ஒரு தோசை சாப்பிடுவேன். மதியம் அரிசி சாதம் 2 கரண்டியளவு கம்மியாக எடுத்துக்கொண்டு இரண்டு மடங்கு காய்கறிகள் சாப்பிடுவேன். இரவு உணவாக இரண்டு இட்லி, ஒரு சப்பாத்தி சாப்பிடுவது வழக்கம்.
ஒரு டம்ளர் பால் சாப்பிடுவேன் .அதில் இரண்டு பூண்டுப்பல் போட்டுக் காய்ச்சி அந்த பூண்டையும் சுவைத்து சாப்பிட்டுவிட்டு பாலைக் குடிப்பது வழக்கம். நான் இதைத் தொடர்ந்து செய்து வருகிறேன். இப்படிச் சாப்பிட்டால் இதய நோய் வராது என்பது பல டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள்.
பூண்டு எளிமையாகக் கிடைப்பதால் அதன் அருமை தெரிவதில்லை. அது ஓர் அரிய மருந்தாகும் .’பூண்டை தின்றவன் ஆண்டை வென்றான் ‘என்பது சித்தர்கள் வாக்கு. அதில் உள்ள ஆண்டி ஆக்சிடெண்ட் பொருள் வேறு எதிலும் இல்லை. கெட்ட கொழுப்பை குறைப்பதில் ரத்த ஓட்டத்தைச் சீர்படுத்துவதில் அந்த இரண்டு பல் பூண்டு உதவுகிறது. ஆரம்பத்தில் இந்தப் பூண்டின் மணம், ருசி நமக்கு அசெளகர்யமாகத் தோன்றும் ஆனால் போகப் போகப் பழகிவிடும்.
எனக்கு ரத்த அழுத்தமும் சர்க்கரையும் பல்லாண்டுகள் வரை இருந்ததில்லை. கடந்த ஓராண்டாகத்தான் பிபி, சர்க்கரை இருக்கிறது அதுவும் கட்டுப்பாட்டில் உள்ளது. நான் வெள்ளைச் சர்க்கரை சாப்பிட்டு பல்லாண்டுகள் ஆகிவிட்டன .பழங்களும் இப்போது குறைத்துக் கொள்கிறேன்.
எனது சர்க்கரைக் கட்டுப்பாட்டைப் பார்த்துவிட்டு ஆச்சரியமாக டாக்டர் சொல்வார், இவ்வளவு கட்டுப்பாடு தேவையில்லை. நீங்கள் ஒரு நான் டயாபட்டிக் போல் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள் என்பார்.
நான் காலையில் டூத் பேஸ்ட் வைத்து பிரஷ் கொண்டு பல் துலக்குவதில்லை. பல்பொடி வைத்தே பல் துலக்குவேன் .அதனால் ஈறுகளுக்கு அழுத்தம் கொடுத்து மசாஜ் போல் தேய்ப்பதால் ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும்.விரல்களால் மசாஜ் செய்யும் போது அது ஒரு பயிற்சியாக அமைந்து ஈறுகள் இறுகிப் பற்களை பிடித்துக் கொள்ளும். இந்த வயதிலும் நான் அதைச் செய்கிறேன் . இப்படித் தினமும் இரண்டு நிமிடம் செய்கிறேன்.
அந்தக் காலத்தில் கரித்தூள் சாம்பல் கொண்டு பல் துலக்கினார்கள். ஆரோக்கியமாக இருந்தார்கள். ஆர்ஓ பில்டர்களில் ,பில்டர் சிலிண்டர்களில் கார்பன் இருப்பதைப் பார்க்கலாம். அது நீரிலுள்ள மைக்ரோ பாக்டீரியாக்களைக் கிரகித்துக் கொள்கின்றன. பிரிஜ்ஜில் சிறு துண்டு கரி வைத்தால் போதும். எந்த துர்நாற்றமும் இருக்காது எல்லாவற்றையும் உறிஞ்சிக்கொள்ளும். கரிக்கு அந்தக் குணம் உண்டு.
உடலுக்குத் தேவையான அளவு நீர் அவசியம்.தினசரி எட்டு டம்ளர் நான் தண்ணீர் குடிப்பேன். இது பத்து டம்ளராக அதிகமாகுமே தவிர குறையாது.
முன்பு நான் டீ, காபி சாப்பிடுவேன். காலை உணவுக்குப் பிறகு, அப்புறம் 11 மணி, 3 மணி என்று பல முறை காபி சாப்பிடுவது உண்டு. கடந்த 15 ஆண்டுகளாகத் தினமும் காலை உணவிற்குப் பிறகு மட்டும் ஒரு காபி சாப்பிடுவதுண்டு. இப்போது 11 மணி காபிக்குப் பதில் தக்காளி சாறு பிழிந்து அதில் எலுமிச்சை சாறு ,மிளகு ,உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு அடித்து சாப்பிடுவேன். தக்காளி ஏழைகளின் ஆப்பிள் அதிலுள்ள நற்பயன்கள் பலரும் அறிவதில்லை.
வெள்ளைச் சர்க்கரை உடலுக்குக் கேடுதான் தரும். அதற்குப் பதிலாகப் பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம். இனிப்புகளை அளவோடு சாப்பிடுங்கள். அரைக் கிலோ இனிப்பில் உள்ள அதே சுவைதான் 5 கிராம் இனிப்பிலும் இருக்கிறது. குறைவாகச் சாப்பிட்டாலே போதும்.
எங்கள் வீட்டில் உளுந்து, நாட்டுச் சர்க்கரை, தேங்காய்த் துருவல் கலந்து உளுந்துக் களி செய்வார்கள். இதை மாதம் இரண்டு மூன்று முறை சாப்பிடுவோம். அதேபோல் ராகி அடை, நவதானியங்கள் கலந்த தோசை சாப்பிடுவோம். எல்லாவற்றிலும் உளுந்து தவறாமல் இருக்கும். உளுந்திலும் நல்ல சத்துள்ளது. பாசிப்பயறு தோசை, முடக்கத்தான் இலை கலந்த தோசை, முளை கட்டிய பயிறு, ராகி களி போன்றவை அவ்வப்போது சாப்பிடுவதுண்டு.
ஃப்ரைடு ரைஸ், பீட்சா, நூடுல்ஸ் போன்றவற்றை நான் தொட்டதே கிடையாது. காய்ச்சல் வந்தால் நான் சில வைத்தியங்களைச் செய்து பார்ப்பேன். வெந்நீர் அரை டம்ளரில் எலுமிச்சை சாறு பிழிந்து வாய்க்கொப்புளித்து ஆரம்ப நிலையிலேயே சரி செய்து கொள்வேன். உடனே பாராசிட்டமால், டோலோ என்று நான் மாத்திரைகள் போடுவதில்லை.
எனக்கு இப்போது ரத்த அழுத்தமும் , சர்கரையும் இருப்பதால் டாக்டர் சொன்ன படி தேவையான மாத்திரைகள் மட்டும் போட்டுக் கொள்கிறேன். இவை இரண்டும் நல்ல கட்டுப்பாட்டில் இருப்பதாக டாக்டர் சொல்கிறார். எனது டாக்டர்கள் 50 சதவீதம் எனது வாசகர்கள்தான். ”இதற்கெல்லாம் மாத்திரை தேவை இல்லை சார், சுக்கு மல்லி காபி போதும். சுலபமாகச் சரி செய்து கொள்ளலாம்’’ என்று நட்பாகச் சொல்வார்கள். சுக்கு மல்லி காபி போல் பெரிய மருந்தில்லை.
மூட்டு வலி என்றால் கூட தேங்காய் எண்ணெயில் கற்பூரத்தைச் சேர்த்து சூடு செய்து மூட்டுகளுக்கு விட்டால் போதும் என்று வெளிப்படையாகச் சொல்வார்கள்.
வாசகர்கள் நேரில் சந்திக்கும்போதும் கடிதங்களிலும் முகநூலிலும் மருத்துவ ஆரோக்கிய ஆலோசனைகள் கேட்பார்கள். நானும் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன் .ஆனால் நானே வியக்கும் படியான ஆரோக்கிய மனிதர் எங்கள் பகுதியில் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் பாலசுப்பிரமணியம். அவருக்கு வயது இப்போது 94.
நான் ஆச்சரியப்படும் அளவிற்கு அவர் ஆரோக்கியமாக இருக்கிறார். அவர் கோவை விவசாயக் கல்லூரி நூலகத்தில் நூலகராக இருந்தவர். அவருக்கு நல்ல நினைவாற்றல் உண்டு. கம்ப ராமாயணத்தில் பாடல்கள் அத்துப்படி .அதே போல் திருக்குறளிலும் நல்ல தேர்ச்சி உண்டு. அத்தனை குறள்களையும் மனப்பாடமாகச் சொல்வார்.
அவர் 64 ஆண்டுகளாக பழனிக்குத் தைப்பூசத்துக்கு நடந்து செல்கிறார். 30 வயதில் ஆரம்பித்த இந்தப் பழக்கம் இப்போதும் தொடர்கிறது. அவர் எனக்கு ஆரோக்கியத்தில் ஒரு முன்னோடி போல் தோன்றுவார். பழனிக்கு போகும் போது அவர் ஒரு வாரம், பத்து நாள் என்று நடப்பார். பின்னால் தான் அவரது கார் போகும். அதில் சமையல் பொருட்கள் எல்லாம் செல்லும். எங்கள் காலனியில் அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்தினார்கள். அனைவரும் அவர் கால் தொட்டு வணங்கிக் கும்பிட்டோம். அது அவருக்கு மட்டுமல்ல அவரது ஆரோக்கியத்திற்கு அளிக்கும் மரியாதை.
நிறைய மருத்துவர்களிடம் பேசி நான் அறிந்துகொண்ட விஷயம் இது தான். நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு மாறிப் போன நம்முடைய உணவுப் பழக்கமே முக்கிய காரணம். ஸ்பெஷாலிடி மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகளை வியாபார கண்ணோட்டத்துடனே அவர்கள் அணுகுவார்கள். நோயாளிகள் வசதி படைத்தவர்களாக இருந்தால், தேவையற்ற பல வகை டெஸ்ட் எடுக்க வைத்து, லட்சக்கணக்கில் பணம் பார்த்து விடுவார்கள். இதில் மக்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.
ஆரோக்கிய குறைபாடு ஏற்பட்டதும் மல்டி ஸ்பெஷாலிடி ஹாஸ்பிடல்களுக்கு செல்லாமல், அருகில் இருக்கும் சிறிய க்ளீனிக்களுக்கு சென்று, சிகிச்சை எடுத்துக் கொண்டாலே, குணமடைந்து விடலாம். சிறிய க்ளீனிக்கிலும் திறமையான மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்பதை, மக்கள் புரிந்து கொண்டாலே வீணான மருத்துவச் செலவுகளை தவிர்க்கலாம்.
- அருள்செல்வன்