நலம், நலமறிய ஆவல்
எழுத்து எந்திரமாக எழுதிக் குவித்து வருபவர் எழுத்தாளர் தேவிபாலா. நாவல்கள், தொடர் கதைகள் என்று 4000, சிறுகதைகள் 1000, தொலைக்காட்சி தொடர்கள் 12000 எபிசோடுகள் என்று கடந்தும் எழுதி வருபவர். எழுதத் தொடங்கிய காலத்தில் இருந்து கால மாற்றத்தை உணர்ந்து தொடர்ச்சியாக எழுதியவர். அவர் தனது ஆரோக்கியம் சார்ந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

“நான் ஒரு காலத்தில் 20 மணி நேரம் எழுதினேன். நான்கு மணி நேரம் தான் தூங்குவேன். அவசியம் என்று வரும்போது இளம் வயதில் உழைக்கத்தான் வேண்டும். வேறு வழி இல்லை என்ற நிலையில் அப்படித்தான் நிறைய எழுதினேன். அந்த நேரங்களில் எனக்கு வந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டேன். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு உடல் ஆரோக்கியம் மீதும், மனநலம் மீதும் கவனம் செலுத்தியாக வேண்டும்.
இன்றும் எனக்கு ரத்த அழுத்தம் இல்லை, கொலஸ்ட்ரால் இல்லை ,சர்க்கரை தான் சிறிது உள்ளது. அதுவும் கட்டுக்குள் இருக்கிறது. நான் ஆரோக்கியமாக இருப்பதற்குக் காரணம் என்னை முறைப்படுத்திக் கொண்டதுதான் என்பேன்.
உடற்பயிற்சி என்று எடுத்துக் கொண்டால் காலையில் எழுந்ததும் பல்துலக்கி விட்டு பிராணாயாமம் செய்வேன், அதாவது மூச்சுப் பயிற்சி. இடது நாசியில் மூச்சை உள்ளே இழுத்து வலது நாசியில் வெளிவிடுவது, அதேபோல் வலது நாசியில் இழுத்து இடது நாசியில் விடுவது. இப்படி 25 முறை செய்வேன். பிறகு கை கால்களுக்கான இயக்க அசைவுப்பயிற்சிகள் என்று 15 நிமிடங்கள் செய்து விட்டு நடைப்பயிற்சிக்குச் செல்வேன். வெளியில் நடைப் பயிற்சிக்குச் செல்வதில்லை. அரை மணி நேரம் எங்களது குடியிருப்பு வளாகத்திலேயே வேக நடை செல்வேன். இதுதான் எனது உடற்பயிற்சி.அந்த வேக நடையின்போது வியர்வை வெளியேறிவிடும். வீட்டுக்கு வந்து அதை உலர்த்த வேண்டிய அளவிற்கு வேர்த்து விடும்.
60 வயது தாண்டியவர்கள் நிற்கும் போதும் நடக்கும் போதும் படியேறும் போதும் கவனமாக இருக்க வேண்டும். மெல்லக் கால் பதித்து சுற்றுப்புறத்தைக் கவனித்து விழிப்புணர்வோடு நடக்க வேண்டும். எப்போதும் அவர்களுக்கு எச்சரிக்கை உணர்வு தேவை. ஏன் என்றால் நடக்கும்போது சறுக்கி, கீழே விழுந்து உடல் நலம் பாதிக்கப்படுபவர்கள் தான் அதிகம். இரவு தூங்கி விழித்து படுக்கையை விட்டு எழும் போது சட்டென எழுந்து இறங்கி நடப்பதில்லை.
நான் கண்விழித்து எழுந்ததும் மூன்று நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து இருப்பேன். பிறகு மெல்ல தரையில் கால் பதித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டுதான் கட்டிலை விட்டு எழுந்து நின்று நடப்பேன். ஏனென்றால் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் தான் அதிகமாக மாரடைப்புக்கு உள்ளாவார்கள் .எனவே இந்த விஷயத்தில் எச்சரிக்கை தேவை. படுத்து உறங்குகிற போது கிடைமட்டத்தில் நீண்ட நேரம் இருந்த நமது உடல் திடீரென்று எழுந்து நிற்கும் போது செங்குத்து நிலைக்கு வருவதால் ரத்த ஓட்டத்தின் நிலை மாறுவதால் உடல் பிரச்சினையை எதிர்கொள்கிறது. எனவே இதில் கவனம் தேவை.
உணவு விஷயத்தில் நான் எப்போதும் சைவம்தான். முட்டை கூட சாப்பிடுவதில்லை. எனவே எனக்குச் சாப்பாடு விஷயத்தில் பெரிய பிரச்சினை இல்லை.எப்போதும் நான் சாப்பிடுவது அளவான மிதமான சாப்பாடு தான்.
நான் காலையில் 7:00 மணிக்கு தேநீர் அருந்துவேன். கடந்த நான்கு வருடமாக கம்பு, ராகி, கருப்பு கவுனி அரிசி, சத்துமாவு எல்லாம் கலந்து மோர் ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்துக் கூழ் போன்று தயாரித்துக் கொள்வோம். அதுதான் எனது காலை உணவு. சரியாக 9:00 மணிக்கு சாப்பிட்டு விடுவேன்.
மதியம் ஒரு மணிக்கு மதிய உணவு .அரிசி சாதம் ஒரு கப், மற்றபடி நீர்க் காய்கறிகளான வெண்பூசணி, புடலங்காய், சுரைக்காய் ,வாழைத்தண்டு இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வேன். காலிபிளவர், முட்டைக்கோஸ், தக்காளி, கொத்தமல்லி போன்றவையும் உண்டு. புளி குறைவாக இருக்கும். இதுதான் மதிய உணவு .
பிறகு மாலை நான்கரை மணிக்கு ஒரு டீ இரண்டு பிஸ்கட் .இரவு உணவு ஏழரை மணிக்கு முடித்து விடுவேன். இட்லி, தோசை, சப்பாத்தி இடியாப்பம் இதில் ஏதாவது ஒன்றை எண்ணிக்கையில் மூன்று மட்டும் எடுத்துக் கொள்வேன். சில சமயம் சம்பா கோதுமை உப்புமா, அரிசிப் பொங்கல் என்று ஏதாவது ஒன்றை அளவோடு எடுத்துக் கொள்வதுண்டு. அதற்குத் தொட்டுக்கொள்ள என்று பருப்பு, குருமா, சாம்பார் இப்படிச் சாப்பிடுவேன்.
எனது உணவுப் பழக்கத்தைப் பொறுத்தவரை ருசியை விட ஆரோக்கியம் முக்கியம். அதேபோல சரியான நேரத்திற்குச் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். ஒரு நாளைக்கு இடையிடையே சுமார் 3 லிட்டர் நீர் அதையும் இரவு 7 மணி வரை தான் அருந்துவேன். பிறகு நீர் அருந்துவதில்லை. அதற்கு மேல் நீர் குடித்தால் சிறுநீர் கழிக்க கழிவறை செல்ல வேண்டும், நமது தூக்கம் கெட்டுவிடும்.
பெரும்பாலும் வீட்டில்தான் சாப்பாடு. வெளியில் ஹோட்டல் சாப்பாடு, துரித வகை உணவுகள் அனைத்தையும் தவிர்த்து விடுவேன். மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மட்டும் குடும்பத்தோடு வெளியில் சென்று சாப்பிடுவதுண்டு. அப்போதும் நான் அளவாகத்தான் சாப்பிடுவேன். எண்ணெயில் பொரித்தவை அதிக இனிப்பு கொண்ட எல்லாவற்றையும் தவிர்த்து விடுவேன்.
எங்கள் வீட்டு சமையலில் மிளகு ,இஞ்சி, சீரகம் இல்லாமல் சமைக்க மாட்டார்கள். அதே போல நீர்க் காய்கறிகள் இல்லாமல் சமைக்க மாட்டார்கள். ருசியாகவும் இருக்கும் ஆரோக்கியமாகவும் இருக்கும். வயிற்றுக்கு எந்த பிரச்சினையும் வராது. பழங்களில் வாழைப்பழம், ஆப்பிள் சாப்பிடுவேன். மாம்பழம் தொடவே மாட்டேன்.
குடும்ப விசேடங்கள் நண்பர்கள் விழாக்கள் என்று செல்லும் போது இனிப்புகளைப் பொறுத்தவரை அளவோடு சாப்பிடுவதுண்டு. அதற்காக தொடவே மாட்டேன் என்று சொல்வதற்கில்லை. உணவிலும் அப்படித்தான். வயிற்றுக்கு ஊறு வராததைச் சாப்பிடுவேன். அப்போது ஐஸ்கிரீம் கூட சாப்பிடுவேன். குளிர்பானங்கள் சாப்பிடுவதில்லை. ஐஸ்கிரீம் ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் வைத்து அதைக் குளிர்வித்து தான் விழுங்குவேன். வீடு வந்த பிறகு வெந்நீரில் வாய்க் கொப்பளிப்பேன். இதனால் தொண்டைப் பிரச்சினையிலிருந்து தப்பிக்கலாம்.
ஒரு காலத்தில் ஏராளமான நாவல்கள் எழுதிக் குவித்துக் கொண்டிருந்தபோது 20 மணி நேரம் உழைத்தேன். காலை 2:30 மணிக்கு எழுந்து இரவு 10 மணி வரை எழுதி இருக்கிறேன் .போகப் போக அதை குறைத்துக் கொண்டேன். அந்தப் பழக்கத்தில் இப்போதும் அதிகாலை 5 மணிக்கு எழுந்து விடுவது வழக்கமாகிவிட்டது. அதுவும் ஒரு நல்ல பழக்கம் தான். இப்போது அதிகாலைகளில் தான் நான் எழுதுகிறேன். முன்பு போல, இரவில் கண்விழித்து எழுதுவதில்லை.
நான் நேர மேலாண்மையைக் கடைப்பிடிப்பதில் கவனம் செலுத்துவேன். யாருக்கும் தேவிபாலா தாமதமாக எழுதிக் கொடுத்தார் என்று இதுவரை புகார் இல்லை. எப்போதும் என்னால் தாமதம் ஆகிறது என்ற பேச்சு வராமல் பார்த்துக் கொள்வேன். நான் சொன்னால் அந்த தேதிக்கு முன்னதாகவே எழுதித் தயாராக வைத்து விடுவேன். அந்த அளவிற்கு நான் நேர ஒழுங்கைக் கடைப்பிடிப்பேன். எப்போதும் நான் சமூக ஊடகங்களில் பொழுது போக்குவதில்லை. அதேவேளை ஊடகங்கள் தொடர்பும் தேவை தான். ஆனால் அளவோடு வைத்துக்கொள்வேன். அதற்கு நாம் அடிமையாகி விடக்கூடாது. தூக்கம் கெடும் அளவிற்கு அதில் ஈடுபடக்கூடாது.
நான் இப்போதெல்லாம் இரவு ஒன்பதரை மணிக்குத் தூங்கப் போய் விடுவேன். தாமதமாக இரவில் பார்த்துக் கொள்ளலாம் என்று எந்த வேலையையும் வைத்துக் கொள்வதில்லை.

இதுவரை தொலைக்காட்சிகளுக்காக சுமார் 12 ஆயிரம் எபிசோடுகள் எழுதி இருக்கிறேன். பொதுவாகவே தொலைக்காட்சித் தொடர்கள், விவாதம், அது சார்ந்த எழுத்துப் பணிகள் என்கிற போது நிறைய நேரம் செலவிட வேண்டி இருக்கும். அகாலத்தில் பணியாற்ற வேண்டி இருக்கும். அதை எல்லாம் இப்போது குறைத்துக் கொண்டு விட்டேன். எல்லாவற்றையும் முறைப்படுத்தி மாலை ஆறு மணிக்குள் முடித்துக் கொள்வேன்.
விவாதங்களுக்கெல்லாம் நேரில் சென்று நேரத்தை விரயம் செய்வதில்லை. எல்லாவற்றையும் முன்கூட்டியே இயக்குநர், ஒளிப்பதியாளரிடம் சரியாகப் பேசி வைத்துக் கொள்வோம். இடையில் எதுவும் தேவைப்பட்டால் நான் பேசி குரல் பதிவாக அனுப்பிவிடுவேன்.
இவ்வளவு நாவல்கள் எழுதிய பிறகும் இவ்வளவு எபிசோட்கள் எழுதிய பிறகும் எனக்கு எந்த மன அழுத்தமும் வந்ததில்லை. வேலை அழுத்தத்திற்கும் நான் இடம் கொடுப்பதில்லை. முடியாததற்கு வாக்கு கொடுப்பதில்லை. நான் வாக்கு கொடுத்துக் காப்பாற்றாமல் விட்டதில்லை. சரியாக நேரத்திற்குச் செய்து விட வேண்டும் என்று நினைப்பேன்.
புகை, மது போன்ற எந்த பழக்கமும் இல்லாததால் இதுவரை என் உடலும் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்து வந்திருக்கிறது. எங்கள் குடியிருப்பு பகுதியில் நான் முதல் தளத்தில் இருக்கிறேன். லிப்ட் இருக்கிறது. இருந்தாலும் நான் லிப்டில் செல்வதில்லை. மெல்ல படியேறி நடந்தே செல்வேன். நமக்கு நாமே பாரமாக ஆகிவிடக்கூடாது, குடும்பத்தினருக்கும் பாரமாகி விடக்கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன். 60 வயது கடந்தவர்களுக்கு இந்தக் கவனம் தேவை.
உடல் நலத்தோடு இணைந்தது தான் மனநலமும். நான் எப்போதும் நேர்நிலை சிந்தனை கொண்டவன். எதையும் பாசிட்டிவாக எடுத்துக் கொள்வேன். கோபம் வந்தாலும் கூட அதை வெளிப்படுத்துவதில் எந்தப் பயனும் இல்லை. கோபம் நம்முடைய உடல் நலத்தைக் கெடுத்துவிடும். எதிரே உள்ளவரின் மனமும் பாதிக்கப்படும். எனவே கோபத்தை விட உடலுக்கு ஊறு செய்வது ஏதுமில்லை. தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் அப்படிக் கோபம் வந்தால் கண்ணை மூடி அமைதியாக இருந்து விடுவேன் .அப்போது நான் வெளிப்படுத்தும் வார்த்தைகள் எதிரே இருப்பவரைப் புண்படுத்தி விடும். அதனால் இரு பக்கமும் நஷ்டம் ஏற்பட்டுவிடும். பதற்றமில்லாத மனநிலையை நான் எப்போதும் வைத்துக் கொண்டிருக்கிறேன்.
வாழ்க்கையில் எதிர்பாராதவை, சிக்கல்கள், சோதனைகள் வரத்தான் செய்யும் .அதையெல்லாம் இலகுவாக எடுத்துக்கொண்டு மேலே செல்ல வேண்டும், வேறு வழியே கிடையாது. கையில் வைத்திருக்கும் வெந்நீர் தவறி நம் மீது கொட்டி விட்டால் பதறுவதை விட ,அடுத்தது என்ன என்று தான் பார்க்க வேண்டும். பதற்றம் கொள்வதில் பயனில்லை. எங்கள் வீட்டில் ஒரு முதலுதவிப் பெட்டி இருக்கும். அதில் அவசியமான சில மருந்துகள் வைத்திருப்போம். சின்னச் சின்ன பிரச்சினைகளுக்கு எல்லாம் அதைக் கொண்டே சரி செய்து கொள்வோம். தவிர்க்க முடியாத பட்சத்தில்தான் மருத்துவமனை செல்வோம்.
நேரத்தை நிர்வகித்தாலே மன அழுத்தம் குறைந்துவிடும் என்பது என்னுடைய கருத்து. இப்போதும் நான் எழுதிக் கொண்டிருக்கிறேன், மாதம் மூன்று நாவல்கள் என்று திட்டமிட்டுக் கொள்வேன். ஒரு நாவலுக்கு ஆறு நாள் என்று 18 நாட்கள் என்று ஒதுக்கிவிட்டு, மீதி நாட்களைத் தொலைக்காட்சித் தொடர்களுக்கு எழுதப் பயன்படுத்திக் கொள்கிறேன்.
முன்பெல்லாம் எனக்கு வாசகர் கடிதங்கள் நிறைய வரும் .இப்போதெல்லாம் வாட்ஸ் அப்பில், முகநூலில், தொலைபேசியில் என்று கருத்துக்களை சொல்கிறார்கள் . பாராட்டுவார்கள், விமர்சிப்பார்கள், சீண்டிப் பார்ப்பார்கள். பாராட்டினால் மகிழ்ச்சி, விமர்சித்தால் நான் எதுவும் எதிர்வினையாற்றுவதில்லை. அப்படியே கடந்து சென்று விடுவேன்.
நான் எப்போதும் எந்தக் கவலைகள் மன அழுத்தம் வந்தாலும் தலையில் ஏற்றிக் கொள்வதில்லை. இதுவும் கடந்து போகும் என்று கடந்து சென்று விடுவேன். அதுதான் எனது மனநலத்தின் ரகசியம்
இப்படித்தான் எனது மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொண்டிருக்கிறேன். இதில் வேறு ஒன்றும் ரகசியம் இல்லை”
– அருள்செல்வன்